Thursday 14 March 2019

மானுடம் வெல்லும்



                                    பிரபஞ்சன் - மானுடம் வெல்லும்



பல வருடங்களுக்கு முன்னாள் தினமணிக் கதிரில் தொடர்கதையாக வந்தது. அப்பொழுது நான் வாசிக்க வில்லை. பல ஆசிரியர்கள்  வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய  நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருக்கிறேன். அந்த கதைகள் எல்லாம் பொதுவாக குறைவான உண்மை சம்பவங்களின் தொகுப்பைக் கொண்டு மிகுந்த கற்பனைகளைப் புகுத்தி சுவாரசியமாக  எழுதப்பட்டவை.  மன்னர்களையோ அல்லது கதாநாயகன் மற்றும் நாயகிகளைச் சுற்றியே
புனையப்பட்டிருக்கும். சாமானிய மனிதர்களைப் பற்றியோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ எதுவும் இருக்காது. நமக்குக் கிடைத்த பண்டைய கால குறிப்புகள், கல்வெட்டுக்களில் அவை அதிகமாக இடம் பெறாததும் ஒரு காரணமா இருக்கலாம்.


ஆனால் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் நாவல், பாண்டிச்சேரியைப்  பிரெஞ்சுக்காரர்கள்  ஆண்ட பொழுது அவர்களிடம் வேலை செய்த ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பு இந்த நாவலுக்குப் பலமான அஸ்திவாரமாக இருப்பதால், உண்மைக்கு மிகவும் அருகில் உள்ளது. நம் மனதில் மன்னர் என்றாலே ரொம்ப பெரிய ராஜ்ஜியம் இருக்கும் எனத் தோன்றும். ஆனால் திருச்சியை ஒரு மன்னரும், தஞ்சை வேறு மன்னரும் ஆள்வது நம் எண்ணங்கள் மற்றும் கற்பனைகள், உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பது புரிந்தது. 

1750 களின் பிற்பாதியில் பாண்டிச்சேரியை குவர்னர் துய்மா மற்றும் அதிகாரிகள் எவ்வாறு  நிர்வாகம்  செய்தார்கள் என்பதை ஆனந்தரங்க பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப் படுகிறது. அந்த காலகட்டங்களில் நம்மிடம் இருந்த தாசி முறை,  ஜாதி வேற்றுமை, பலதாரமணம், அரசர்கள் அழகான பெண்களைக் கவர்வது, அரசியல் படு கொலைகள்  போன்ற கசப்பான உண்மைகளை விவரிக்கிறார்.

மக்கள் அனைவரும் கழிவறை கட்ட ஆணையிடுவது (கடற்கரையோரம் உட்கார்ந்து கக்கூஸ் போகத் தடை)மதுவைத் தடை செய்வதுபிரெஞ்சுக் காரர்களைப் பார்த்து அவர்களைப் போல் நடக்க விரும்பும் நபர்கள் ஆகிய சம்பவங்கள் சுவாரசிய படுத்துகிறது. அந்த காலத்திலே மத மாற்றங்களால் நடந்த உரசல்கள். சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் சுருங்கிய அல்லது அழிந்த பின் தமிழ்நாடு எவ்வாறு மராட்டிய மற்றும் நவாபுகளின் கையிலிருந்தது எனத் தெரிந்து கொள்ளலாம். போரின் கொடுமைகளை விஞ்சி நிற்கக் கூடியதாக, போர் வீரர்களின் அழிப்பு வெறி (கொள்ளைபெண்களைக் கொடுமைப் படுத்துவது) போர் முனையையும் தாண்டி விரிவடைவதையும் இந்நாவல் காட்டுகிறது.
துரோகங்கள் எப்படி அந்த காலத்திலே பணம் மற்றும் பொருட்களால் எப்படி நடைபெற்றது எனப் புரிய முடிகிறது. 

கதையின் சின்ன பலவீனம் கொஞ்சம் கோர்வையாகக் கதை நகராமல் இருப்பதுதான். சாமானிய  மற்றும்   அந்த காலத்தில் அடிமட்ட மக்களின் வாழ்க்கையினை சொல்ல சில கிளைக்கதைகள் வருகிறது. அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி பிறகு வருவதே இல்லை. அதனால் கதையில் நிறையப் பாத்திரங்கள் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருப்பது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாது மையக் கதையை விட்டு விலகிப் போவது போலவும் தோன்றுகிறது. 

இறுதியாக :

      நமது முன்னோர்களின்  வாழ்க்கைமுறை மற்றும், சமூக வரலாறுகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். அன்றைய சமூக வரலாற்றைப் பார்த்தால், பல விஷயங்களில் நாம் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம் எனப் புரியும்.

கொசுறு :

ஆனந்தரங்கம் பிள்ளை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தரெனவும் போற்றப்படுகிறார். இவர் 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புக்கள், அவர் மறைந்து கிட்டதட்ட 85 ஆண்டுகள் கழித்துக் கிடைத்தன. அதன் மூலம் அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. நானும் 1993 முதல் நாட்குறிப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.. பிற்காலத்தில் எதற்காவது உதவலாம் 😛....         

Tuesday 5 March 2019

அம்மா வந்தாள்



                       தி ஜானகிராமன் -    அம்மா வந்தாள் 




      பொதுவாக நாம் கதை புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் பொழுது படக்கதைகளில் ஆரம்பிப்போம். அதன்பின்  சிறுவர் கதைகள், சிறு கதைகள், நாவல்கள் என படிப்படியாக முன்னேறுவோம்.

சில சமயம்  இறுதிக் கட்டமாக இலக்கிய நாவல்கள் பக்கம் ஒதுங்குவோம். இலக்கிய நாவல்களைப் படிக்கக் கொஞ்சம் பொறுமையும் மற்றும் ஆழ்ந்த ஈடுபாடும் தேவை... இல்லையெனில் மிகவும் கடினமான பயணமாக இருக்கும்.

 இலக்கியவாதிகள் பட்டியலில் உள்ள சிறந்த நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு உண்டு. ஆனால் அந்த நாவல்கள்    பொதுவாக வட்டார மொழியில் அல்லது கதாபாத்திரங்களின் சமூகத்தினர் பேசும் மொழியில் இருப்பதால் உரையாடல்கள் புரிவதுக்குக் கவனம் தேவை.. சில சமயங்களில் பல முறை வாசித்தால்தான் புரியும். (இது என் அனுபவம். சிலருக்கு எளிதாக இருக்கலாம்.) இந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னாள் நான் வாசித்த முதல் நாவல்   சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை.  அது நாகர்கோவில் நடக்கும் கதை என்பதாலோ மற்றும் கதையின் களங்கள் எனக்குக் கொஞ்சம் பரிசம் ஆனதாலோ எளிதாக வாசித்து விட்டேன். ஆனால் அவர் எழுதிய மற்றொரு நாவலான ஜே ஜே சில குறிப்புகள்  நாவலைப் பாதி கூட தாண்ட முடியவில்லை. அதன் பின் அப்படிப்பட்ட இலக்கிய நாவல்களின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை கொஞ்சக் காலம்.

திடீரென மீண்டும் ஒரு ஆசை... புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல.  சுமார் பத்து புத்தகங்களை வாங்கி விட்டேன் பலரின் சிறந்த நாவல்களின் முதல் பத்து பட்டியல்களை அலசி ஆராய்ந்து. அதில் வாசிக்க முதலில் தேர்ந்தெடுத்தது தி ஜானகி ராமன் எழுதிய அம்மா வந்தாள்.

தொடக்கத்தில் அம்மா வந்தாள் புத்தகத்தை வாசித்து, புரியக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் வாசிக்க, வாசிக்கக் கொஞ்சம் எளிமையாகப் போனது. 

அப்பு சிறுவயது முதல் வேத பாடசாலையில் வேதம் படிக்கிறான். அங்கு இருக்கும் கணவனை இழந்த இந்துவுக்கு, அப்புவின் மீது காதல். அப்புக்கும், இந்துவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

பதினாறு வருடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பும் அப்பு தன் அம்மாவின் தவறான நடத்தைகளைப் பார்த்தும், கேட்டும் மீண்டும் வேதசாலைக்கே திரும்பி வந்தவன் இந்துவையும் மணம் செய்யும் மனநிலைக்கும் வந்துவிடுகிறான். அவனைக் காண வேதசாலைக்கு வரும் அம்மா இறுதியில் காசிக்குச் செல்ல முடிவு எடுப்பதுதான் நாவலின் கதை...

இது கத்தி மீது நடப்பது போன்ற மிகவும் சிக்கலான கதை . எளிதில் சறுக்கி விடும் சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் ஆசிரியர் மிகவும் சாமர்த்தியமாகக் கையாளுகிறார். கதையின் சிறப்பே உரையாடல்கள்தான்.

"அவன் குரல் கட்டையாக வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போல்க் கிடந்த கோபம் " 

"கோவில் மணி டைங், டைங் என்று சளி பிடித்தாற்போன்று மூக்கடைப்பு குரலில் அடித்தது "

இதுபோன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.. 

அம்மா அலங்காரத்தின்  குணத்தை அப்பு மற்றும் தண்டபாணி இருவரின் கோணத்திலும் அழகாக அறிமுகம் செய்கிறார். தண்டபாணிக்கு, அலங்காரத்தின் மீது இருக்கும் பத்தி கலந்த மரியாதை அல்லது பயம், அவளுடன் சேர்ந்து வாழக் காரணமாகிறது.. ஆனால் குழந்தைகள் எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது கொஞ்சம் குழப்பமாக உள்ளது.

இறுதியாக :

    இந்த கதை வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்து இருக்கும். பலருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கலாம். வேதங்களைப் பற்றிய விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்திருக்கலாம். ஆனால் சிறந்த விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்தியிருக்கலாம் ஆனால் சம்பாவனைகள் மூலமாக வெளிப்படையாகத் தெரியாமல் மறைமுகமாகப் பல விசயங்களைச் சொல்லுவதின் மூலம் தனித்தன்மை பெறுகிறது.