Tuesday 30 July 2019

மோக முள்



                               தி ஜானகிராமனின்  மோக முள்


    
 இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் சில ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. வாசித்து முடித்த உடன் எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் பலரால் பேசப்படுகிறது, வாசிப்பவர்களை எல்லாம் ஏன் கவர்ந்திழுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

தி ஜாவின் அம்மா வந்தாள் வாசிக்கும் பொழுது கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் (வட்டார நடை) எனக்கு அதிகம் பரிட்சியமானதாக இல்லை. அதனால் தொடக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது ஆனால் மோக முள்ளில் அந்த பிரச்சினை எழவில்லை. சொற்கள் மற்றும் தி.ஜா வின் நடை எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது போல. 

சிறுவயது முதலே இசையில் ஈர்ப்பு ஏற்படுமாறு நாயகன் பாபு அவனுடைய தந்தையால் (வைத்தி)  வளர்க்கப்படுகிறான். யமுனா தமிழ் தந்தைக்கும், மராட்டிய    வம்சாவளி  தாயிக்கும்  (பார்வதி-  இரண்டாந்தாரம்) பிறந்தவள். யமுனா மிகவும் அழகான பெண்ணாக பாபுவின் பார்வையின் மூலமாக   விவரிக்கப் படுகிறாள். 

தன் சிறுவயதிலிருந்தே தன்னை விட பத்து வயது அதிகமான யமுனாவுடன் பழகி வரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளைத் தெய்வத்தின் உருவமாகப் பார்க்கிறான். பல்வேறு காரணங்களால் 30 வயது ஆகிய பின்பும்  தள்ளிப் போகும் அவளின் திருமணத்தை நடத்தவும் முயற்சி செய்கிறான் ஆனால் யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருமாறுகிறது. அதுவும் ஓர் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல். ஆனால் ஆரம்பத்தில் பாபுவால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஒரு நல்ல மற்றும் உயர்வான இடத்தில் இருக்க வேண்டியவள் என்று மட்டுமே நினைக்கும் பாபுவுக்கு, சமய சந்தர்ப்பத்தால் பக்கத்து வீட்டு வயதானவரின்  இளம் மனைவியுடன் (இரண்டாம்தாரம்கூடிய பின்தான் யமுனாவின் மீது உள்ள காதல் புலனாகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜம் அதை முதலிலே புரிந்து கொள்கிறான். தங்கம்மா தற்கொலை செய்து விட  பாபு மயானத்தில் குற்றவுணர்வில் நிற்பதை வாசிக்கும் போது என் இதயம் கனமாகி விட்டது.

சற்றே வரம்பு மீறிய காதலை யமுனா நிராகரிப்பதால் ஏக்கம் மற்றும் வலியுடன்  இசைப் பயிற்றுவார் ரங்கண்ணாவிடம் முழு வீச்சில் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான்.  பின்னாளில் குரு ரங்கண்ணாவும் இறந்து விட  மெட்ராஸ் சென்று பணிபுரிந்து வரும் பாபுவை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகத் தேடிவரும் யமுனா இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு மலைக்கிறாள்.

ஒரு கட்டத்தில்  தன் இளமையைஇத்தனை காலம் தனக்காக எவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுத்து விட்டு, இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று யமுனா, பாபுவிடம் கேட்பது என் மனதில் மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. நாவலை முழுமையாக, உணர்வுப் பூர்வமாக வாசித்தால் மட்டுமே அந்த ஒரு வார்த்தையின் வலிமையைப்  புரிந்து கொள்ள முடியும். 

நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு)பாபு-ராஜம் (நட்பு).  அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக வருவதால் அக்கால சமுதாய சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளை நாம் அறிய உதவுகிறது. 

பொதுவாக ஆண்களுக்கு, பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு இரு வகைப்படும். 
சிலரைப் பார்த்தால் காமுறுவர், சில பெண்களைப் பார்த்தால் பரவசம் கொள்வார்கள். ஆனால் அந்த பரவசத்துக்கும் அடித்தள அடிப்படை காமமே என்பதைச் சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் அடிப்படை என்பதை பாபு மூலம் அழகாக தி ஜானகிராமன் உணர வைக்கிறார். 

இறுதியாக :

     அரு இராமநாதன் எழுதிய குண்டு மல்லிகை நாவலிலும் நாயகன் தன்னைவிட மூத்த பெண்ணை காதலிப்பதுதான் கரு. ஆனால் இரு கதைகளின் தளங்களும், எழுதப்பட்ட விதமும் முற்றிலும் வேறு . இருந்தாலும் என்னை இரண்டு பாத்திரங்களுமே (உமா மற்றும் யமுனா) கவர்ந்து விட்டது. இன்னொரு முறை கும்பகோணம் சென்றால் கட்டாயம் யமுனா வாழ்ந்த தூக்காம்பாளையத் தெருவில் கால்பதித்து விட்டு வர முடிவு செய்துவிட்டேன்.
 

Monday 22 July 2019

தலைமுறைகள்



                        தலைமுறைகள் - நீல பத்மநாதன்





     மீண்டும் ஒரு வட்டார வழக்கு மொழியில் வந்த நாவல். பலரின் சிறந்த நாவல்களின் பட்டியலில் இருக்கும் நாவல். குமரி மாவட்ட வட்டார வழக்கு என்பதால் எனக்குக் கொஞ்சம் எளிதாக வாசிக்க முடிந்தது, இதர இத்தகைய நாவல்களை ஒப்பிடும்போது. 

1968'ல் வெளிவந்த இந்த நாவல் செட்டியார் சமூகத்தைத் சேர்ந்த திரவியம் குழந்தையில்லாதக் காரணத்தால் கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட  தன் சகோதரியை மீண்டும் குடும்ப வாழ்வில் இணைக்க முயல்வதுதான் கதை. இதை நாவலாகச் சமூகத்தில் நடைபெறும் சடங்குகள்விசேஷங்கள் மூலமாக மிகவும் லாவலாக நகர்த்தி உள்ளார்.


 அந்த காலத்தில் நடந்த திருமணம்பெண் பெரியவளானதும் நடக்கும் சடங்குவளைகாப்புஇறந்த வீட்டுச் சடங்குகள்  போன்ற அனைத்து விசேஷங்கள் மற்றும் அதனையொட்டிய நடக்கும் சடங்குகள் அதனால் சராசரி குடும்பத்தலைவன் அடைந்த கஷ்டங்கள் விரிவாகவும், சுவையாகவும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான கதாபாத்திரங்கள் இருப்பதால் முதலில் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகள் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் போகப் போக அனைத்து பாத்திரங்களும் நன்கு பரிசம் ஆகிவிடுகிறது. மேலும் ஒவ்வொரு பாத்திரங்களின் குணங்களும் வெவ்வேறாக இருப்பதும், நாம் பார்த்துப் பழகியதுமாக இருப்பதும் நம்மை கதையுடம் ஒன்றி விடச் செய்கிறது. 

அந்தக்காலத்தில் சாதி மீது தாக்கம் கொண்ட கட்டுக்கோப்பான ஊரில் தன் அக்காவுக்கு மறுமணம் செய்யத் திரவியம் முயற்சி செய்வதை எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் சொல்லுகிறார். திரவியம் தன் அப்பா கடைமைகளைச் செய்யப் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படும் போதும், தன் அக்காவின் நிலையை எண்ணித் தவிர்ப்பதும்  வாழ்க்கையின் யதார்த்த நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பொதுவாக இலக்கியப் படைப்புகளில் கதை மையம் அல்லது கதை சொல்லி அறிவாளியாகவோ, மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப் படுவதே வழக்கம்.  காரணம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே. ஆனால் திரவியம் மிகச் சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான். நடுத்தரவர்க்கத்துக்கே உரிய எல்லா கோழைத்தனங்களும், தயக்கங்களுள்ள ஒருவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் புரட்சியாளனோ கலகக்காரனோ அல்ல. அவன் சற்று படித்து அதன் மூலம் நவீனக் காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம். இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மை தெரிகிறது. 

கதையின் முடிவுதான் டக் என முடிந்தது போல இருக்கிறது.. நான் கொஞ்சம் கூட எதிர்பாராத முடிவுதான். கிளைமாக்ஸ்தான் நாவலின் பலவீனமான பகுதி என ஒரு விமர்சனமும் உள்ளது. 


இறுதியாக :

  இந்த கதையை  கௌதம் இயக்கி, நடித்து 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. You Tube 'ல் கொஞ்சம் பார்த்தேன்.. மேலும் அதை பற்றி சொல்லுவதுக்கு ஒன்றுமில்லை மக்கா ...

          

Wednesday 17 July 2019

சேப்பியன்ஸ்



                                              சேப்பியன்ஸ் 
    மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு


                   

 கொஞ்சக் காலமாக சமுக நாவல்களாகப் படித்துக்  கொண்டிருந்ததால் மாற்றத்திற்காக வரலாற்றின் பக்கம். யுவால் நோவா ஹராரி எழுதிய இந்த புத்தகத்தை ஒரு விமர்சனம் மூலமாகத்  தெரிந்த உடனே வாங்கிய வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

  இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த விஷயங்களைத் தொகுத்து எழுத, எவ்வளவு ஆராய்ச்சி மற்றும் வாசிப்பு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது.

 மனிதக்குலத்தின் வரலாற்றை நான்கு தொகுதிகளாக ஆசிரியர் பிரித்துள்ளார்.  1.அறிவு  புரட்சி, 2.வேளாண் புரட்சி, 3.மனிதக் குல ஒருங்கிணைப்பு,  4.அறிவியல் புரட்சி.


 இப்பொழுது மட்டும் அல்ல... அறிவு புரட்சி தோன்றிய நாள் முதலே, அதாவது சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்னாலே மனிதர்கள் இயற்கையையும், மற்ற உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் சோகம்.  நெருப்பைப் பயன் படுத்த ஆரம்பித்த உடனே மனிதன் Food Chain லில் மற்ற உயிரினங்களை எல்லாம் தாண்டி முதல் இடம் வந்து விட்டான்.

நாம் வேளாண் புரட்சி பத்தி பெருமையா பேசிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் ஆசிரியர் வேளாண் புரட்சி மக்கள்தொகை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதற்கும், சொகுசான மேட்டுக்குடியினர் என்ற ஒரு புதிய பிரிவு உருவாவதற்கும் மட்டுமே அது வழிவகுத்தது என்கிறார்.

வம்பு (Gossip) பேசுவதில் நம்மிடம் இருந்த  ஆர்வம்தான் மொழிகள் உருவாகக் காரணம் என விளக்கமாக சொல்லியிருப்பது ஆச்சரியத்தை அளித்தது. பேரரசுகள் மற்றும் மதங்கள் உருவாக்கப்பட்டதே மனிதக் குல ஒருங்கிணைப்புக்குத் தான் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். ஒருங்கிணைக்கத் தோற்றுவிக்கப் பட்ட மதங்கள் இப்பொழுது மனிதக்குலத்தைப் பிளவு படுத்துவதுதான் மிகவும் வேதனை.

ஐரோப்பிய நாட்டினருக்கு முன்பே, பல நாட்டினர் கடல் வழி பயன்களை மேற்கொண்டு உள்ளனர் ஆனால் அவர்களின் நோக்கம் செல்லும் இடங்களை வெற்றி பெற்று செல்வங்களை எடுத்துச் செல்வதுதாக இருந்தது. 

ஆனால் ஐரோப்பியர்கள் அவர்களது பயணத்தில் ஆய்வுக் குழுக்களையும், அழைத்துச்சென்றனர். ஆய்வு செய்தல் (Discovery Concept) பிறகு வெற்றி கொள்ளுதல்... அவர்களின் ஆக்கிரமிப்புகளால் எவ்வாறு பூர்விகவாசிகள் பாதிக்க மற்றும் அழிக்கப்பட்டனர் என்பதைப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது.

Time Zone எப்படித் தொடங்கியது, முதலாளித்துவம் எப்படி நம் வாழ்க்கை முறையினை  மாற்றி உள்ளது... என்பதையெல்லாம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. 

மனிதர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் கூறியுள்ளார். சூப்பர் மனிதர்கள் தோன்றலாம்.  அவர்கள் நம்மை விட மிகவும் திறமைசாலியாக (Well Advanced) இருக்கலாம். அதற்கு ஆசிரியர் சொல்லும் காரணங்களைப் பார்க்கும்போது நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் நீங்கள் வாசித்தால் மட்டுமே முழுமையாக  உணரமுடியும்.

இறுதியாக : 


முக்கியத்துவம் இல்லாத ஒரு விலங்காகத் தோன்றிய மனிதன் எப்படி படிப்படியாக வெவ்வேறு புரட்சிகள் மூலமாகத் தவிர்க்க முடியாத முதல் உயிரினமாக மாறினான் என்பதை விளக்குகிறது.  நான் வாசித்த புத்தகங்களில் ஒரு சிறந்த புத்தகம் எனக் கூறுவேன். எல்லோரும்  வாசிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்வேன்.