Wednesday 27 November 2019

வேதபுரத்து வியாபாரிகள்



                  வேதபுரத்து வியாபாரிகள் 
                                     - இந்திரா பார்த்தசாரதி



இந்திரா பார்த்தசாரதி எழுதிய எதாவது ஒரு நாவலைப் படிக்கலாம் என நினைத்து இந்த நாவலை வாங்க ஆர்டர் செய்தேன் ஆனால் ஸ்டாக் இல்லாததால் கிடைக்கவில்லை. கடைசியில் எங்களது வீட்டிலேயே (பெற்றோர்கள்) நாவல் இருந்தது. கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல்.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் வசிக்கும் வேதபுரத்தை மூலமாகக் கொண்ட அபூர்வா என்கிற பெண்ணொருத்தி தன் தாய் நாடான வேதபுரத்துக்கு வருகிறாள். அங்கு உள்ள மக்களுடன் பழகி அந்த நாட்டை பற்றி புத்தகம் எழுதும் நோக்கத்துடன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் அவளுடைய நோக்கத்தை எப்படி திசை திருப்பி அவளை அரசியலில் தள்ளி, தலைவி ஆக்கியது என்பதுதான் கதை.

ஏதோ சுவாரசியமான கற்பனை கதை என நினைத்து விடாதீர்கள். ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல. கதை எழுதிய காலகட்டமான 1994-95  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடந்த ஆட்சியின் அலங்கோலங்களைத்தான் கிண்டல் கலந்த நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஆசிரியர் அமெரிக்கா, தமிழ்நாடு, இந்தியா எனக் குறிப்பிடவில்லை எனினும்  வேதபுரம் - தமிழ்நாடு, இந்திரப்பிரஸ்தம் - இந்தியா என எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என ஆசிரியர் கூறினாலும், நமக்கு அவர் கிண்டல் செய்யும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. பல உதாரணங்களை நான் எழுத நினைத்தேன் ஆனால் அந்த நையாண்டி கலந்த வரிகளை நீங்களே வாசித்தால்தான் மிகவும் ரசிக்க முடியும்.

இறுதியாக :

 இந்த மாதிரியான நாவல்களுக்கே உரியப் பிரச்சினைதான் இதிலும் உள்ளது. நாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான். ஏனெனில் நிஜக் கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அல்லது அந்த பிரச்சினைகளுக்கு ஆசிரியரால் தீர்வுகளைத் தந்தோ முடிக்கமுடியாது. என்ன நாவலில் நையாண்டியாகச் சொல்லப்பட்ட  பல செயல்கள் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

      

Friday 15 November 2019

அரும்பு அம்புகள்



                             அரும்பு அம்புகள் - கல்கி



அரும்பு அம்புகள் நாவல் கல்கி மறைந்த பின் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு கல்கி வார இதழில் தொடராக வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பொழுது என்னை மிகவும் கவர்ந்த நாவல். மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கி இரு சிறுகதைகளை இணைத்து ஒரு திரைப்படத்துக்காக எழுதிய கதையாம். அதனால் கதையின் போக்கும் அப்படித்தான் உள்ளது. இரண்டாம் உலகப்போரினால் சென்னையை விட்டுச் செல்லும் கமலாவின் குடும்பத்தினர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இடையில் ஒரு ஊரில் தஞ்சம் புகுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் கல்யாணத்தின் மீது கமலாவுக்குக் காதல். ஆனால் கல்யாணத்திற்கு, அவனுக்கு மட்டும் அல்ல அந்த ஊரில் உள்ள நீதிபதி கோவர்த்தனனுக்கும் வக்கீல் பவானி மேல் ஒரு கண்ணு.

பவானியோ சிறையில் இருக்கும் தன் கல்லூரி காதலனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறாள். இடையில் கமலாவை அவளது பெற்றோர், வயதான வீட்டு ஓனருக்கு மணமுடித்து வைக்க முயல அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் கல்யாணம். சிறையிலிருந்து பவானியின் காதலன் தப்பித்து அவளைக் காண வர, அதனால் ஏற்படும் கலவரங்கள் எப்படி அனைவரையும் பாதித்தது, யார் யாரைத் திருமணம் செய்தார்கள் என்பதுதான் முடிவு..

நாவலை இப்பொழுது வாசித்தபின், அது முன்பு வாசித்தபோது தந்த உணர்வை அப்படியே அளிக்கவில்லை. சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் .... பதிவில் அப்பொழுது கூறிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  காரணம் எளிமையானது.. நமது மனதின் முதிர்ச்சி மற்றும் வாசிப்பின் நிலைகள் மேம்பட்டிருப்பதும்தான். ஆனாலும் சினிமாத்தனமான திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான கதைதான். அதைத் தவிர ரொம்ப பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதியாக :

    பவானி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பொன்னியின் செல்வன் நந்தினியின் பாதிப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. பவானியின் ஆளுமை மற்றும் அழகைக் கண்டு அவளிடம் பழகும் ஆண்கள் அனைவரும் கொஞ்சம் தன்னிலை மறந்து தடுமாறுவது.