Monday 20 December 2021

சாயாவனம்

 

                           சாயாவனம் - சா. கந்தசாமி 


         சா. கந்தசாமியின் முதல்  நாவலான சாயாவனம் நாவலைத்தான்  வாசிக்க ஆர்வமாயிருந்தேன். ஆனால் அவரின்  சாகித்ய அகாடமி விருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைக்கவே அதனை வாசித்து என்  எண்ணங்களை எழுதினேன். சாயவனம் பலராலும்  பாராட்டப்பட்ட நாவல்.  

                        1968'ல் எழுதப்பட்ட இந்த நாவலானது இயற்கை மற்றும் சூழியல் சார்ந்து தமிழில் வந்த முதல் நாவலாகப் பார்க்கப்படுகிறது. 1906 காலகட்டத்தில் சாயாவனம் என்கிற ஊருக்குக் கரும்பாலையை நிறுவும் எண்ணத்தோடு வருகிறான் சிறுவயதிலே தாயோடு இலங்கைக்குச் சென்ற சிதம்பரம். அதற்காக மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தை  விலைகொடுத்து வாங்கி, அங்குள்ள மரங்களை வெட்டியும், தீவைத்து அழித்தும் ஆலையைக் கட்டுகிறான். இயற்கையறிவும், நிதான குணமும் கொண்ட சிவனாண்டி தேவருக்கு, சாம்பமூர்த்தி ஐயர் காட்டை சிதம்பரத்துக்கு விற்றது பிடிக்கவில்லை  ஆனால் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்திற்குத் திறமையாக அவரையும் பயன்படுத்திக் கொள்கிறான் சிதம்பரம்.  தனிமனிதன் ஒருவனின் பேராசையால் ஒரு வனம் எவ்வாறெல்லாம் உயிருடன் வதைக்கப்பட்டது என்பதைப்  பேசுகிறது சாயவனம் நாவல். 

                      செல்லும் பாதையில் கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சார நெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. அந்த வனத்திற்குள் இருக்கும் சிறு புல்லில் தொடங்கி வானுயர்ந்த மரங்கள் வரை அனைத்து தாவரங்களின் பெயர்களையும் அதன் குணாதிசயங்களையும்  நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருப்பது  நாவலுக்கு உயிர்ப்பு தன்மையைக் கொடுக்கிறது. சாயவனம் நாவலின் சிறப்பம்சமே சா. கந்தசாமி, ஒரு ஆசிரியரின் கருத்துகளாகவோ அல்லது ஏதேனும் ஒரு கதைமாந்தரின் மூலமாகவோ இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை.  சிதம்பரம் காட்டை அழிக்கச் செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து எழுதி வாசிக்கும் வாசகன் மனதில் காடுகள் அழிக்கப் படுவதின் தீவிரத்தை உணர்த்துகிறார். 

                         இறுதியில் புளி கேட்கும்  ஒரு ஆச்சியிடம் " பார்த்து நல்ல புளியாக அனுப்புகிறேன் "  எனச் சிதம்பரம் சொல்ல,  அதற்கு அந்த ஆச்சி 

"அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமெ எங்கிருந்து அனுப்பப்  போற?"

அப்பொழுது, அவனுக்குள் ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்குள்ளும் படர்ந்து விடுவதைத் தவிக்க முடியாது. நாவலின் இறுதியில் வரும் குஞ்சமாளின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. அதைத் தவிர நாவல் முழுவதும் தோட்டம் அழிக்கப்படும் நிகழ்வுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த ஒற்றைக் கோட்டிலே நாவல் செல்வது சற்று அயற்சியைச் சிலருக்குக் கொடுக்கலாம். 

              மனிதன் காடுகளை அழித்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்கியதால், பலவித இயற்கை அழிவுகளை நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் எனப் பலராலும் இப்பொழுது பேசப்படுகிறது. மிகப்பெரிய விழிப்புணர்வு இல்லாத அந்தக்  காலத்தில் இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சாயவனம், இன்றையச் சூழ்நிலையில் மிகுந்த முக்கியத்துவத்தைப்  பெறுவதோடு,  பொருத்தமான வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது. 

இறுதியாக :

     தன் சுயநலத்திற்காக மனிதன் எவ்வாறெல்லாம் இயற்கையைச் சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்களை நம் கண்முன்பே பல நடக்கின்றது. என்ன  ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணங்கள் மற்றும் எது சீரழிப்பு என்கிற வரையறையும் மாறுபடுகிறது. எப்பொழுது மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினானோ அதில் தொடங்கியது இந்த பயணம். 

Saturday 25 September 2021

குருதிப்புனல்

 

                          குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

         

       சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை வாங்கினேன். 1968'ல் கீழவெண்மணி என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தை உள்வாங்கி அவர் எழுதிய நாவல். 1977'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றாலும் சில விமர்சனங்களையும் ஒருங்கே பெற்ற நாவல் குருதிப்புனல்.

                 டெல்லியில் ஒன்றாக இருந்தது விட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், தஞ்சை பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்துவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி சிவா வருவதுடன் தொடங்குகிறது நாவல். கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும், காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கண்ணையா நாயுடுவின் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கூலியை உயர்த்தி தர ராமையா போராடுகிறார். ராமையாவின் வீட்டில் தங்கியிருந்து கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டியின் மகன் வடிவேலு நடத்தும் டீக்கடையில் சாப்பிட்டு வருகிறான் கோபால். கோபாலைச் சந்திக்கும் சிவா அவனுடன் சிலநாட்கள் தங்கிச் செல்ல நினைக்கிறான். வடிவேலுவின் மீதுள்ள கோபத்தினால் அவனுடைய டீக்கடையை காலி செய்யும் முயற்சிகளைக் கண்ணையா நாயுடு முன்னெடுக்க அவனுக்காக அவரிடம் பேசுகிறான் கோபால். 

                கண்ணையா நாயுடு அவனின் சமாதான முயற்சிகளை ஏற்றக்கொள்ளாததால் கோபத்தில் அவரின் ஆண்மை பற்றிப் பேசிவிடுகிறான் கோபால். அதனால் மிகுந்த கோபம் கொள்ளுபவர், கோபாலை ஆள் வைத்து அடிக்கிறார். பாப்பாத்தி என்னும் ஹரிஜன பெண்ணை கடத்தி பழியை கோபால் மீது சுமத்துகிறார். பாப்பாத்தியைப் பற்றித் துப்பறிய பங்கஜத்தம்மாள் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஏற்படும் தகராற்றில் கண்ணையா நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படப் பழியை ராமையா மீது போட்டு கைது செய்கிறது போலீஸ். நாயுடு தன் வயலில் வேலை செய்ய வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வர அதில் கோபம் கொண்டு பழனி என்பவன் அவரை அடித்து விடுகிறான். உயர்சாதியில் பிறந்த தன்னை ஒரு பறையன் அடித்து விட்டானே என்று வெறிகொள்ளும் நாயுடு, போலிஸ் துணையோடு பெண்களும், குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். அந்த சம்பவம் கோபாலை வன்முறை பாதையை நோக்கிச் செல்லவைக்கிறது. 

                  பொத்தாம் பொதுவாக வெண்மணி படுகொலைகள் கூலியை உயர்த்திக் கேட்டதால் நடந்த நிகழ்வாகச் சொல்லப்பட்டாலும் என்னால் அவ்வாறு பார்க்க முடியவில்லை. அதற்கான மூலகாரணங்கள், அங்கே வாழ்ந்த மக்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தியது, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது, அவர்களுக்கு எதிராக ஒன்றாக அணிதிரண்டது மற்றும் அரசியில் விழிப்புணர்வுகளும்தான் பண்ணைக்குக் கோபத்தையும் கூடவே பயத்தையும் தந்திருக்க வேண்டும் அதன் எதிர்விளைவே இந்தப் படுகொலைகள். 

                            நாவலின் கரு பலராலும் பாராட்டப்பட்டாலும், ஆசிரியர் சேர்த்துள்ள உளவியல் காரணத்திற்காக விமர்சிக்கவும் பட்டது. ஆண்மைக் குறைவு என்ற காரணத்தை முன்னிலைப் படுத்தியிருப்பதால், சில சமயம் வாசிப்பவர்களுக்கு ஆண்டவன் தந்த குறையைத் திருப்பி திருப்பி சொல்லிச் சீண்டியதால், கடுப்பில் தீ வைத்து விட்டார் என்றும் தோன்றலாம் அது ஆசிரியரின் எண்ணம் இல்லையெனினும். டெல்லியிலிருந்து அந்த கிராமத்திற்கு வரும் இரு  படித்த இளைஞர்களின் கண்களின் வழியாகப் பெரும்பகுதி பிரச்சினைகள் பார்க்கப்படுவது இந்திரா பார்த்தசாரதி வசதியாக இருக்கிறது. காரணம் அவரும் அதே பின்னணியில் உள்ளவரென்பதால். நாம் செல்ல வேண்டிய பாதைகள் இன்னும் அதிகம் இருப்பினும், நாம் கடந்து வந்த பாதைகளை அறிய வாசிக்க வேண்டிய நாவல்தான்.

இறுதியாக :

        கீழவெண்மணியில் 44 தலித்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குருதிப்புனல் தவிரச் சோலை சுந்தரப்பெருமாளின் "செந்நெல்", பாட்டாளி எழுதிய "கீழைத்தீ" ஆகிய நாவல்களும் வந்துள்ளது. மேலும் குருதிப்புனல் நாவலைத் தழுவி ராஜேஷ், பூர்ணிமா நடிப்பில் 1983'ஆம் ஆண்டு "கண் சிவந்தால் மண்  சிவக்கும்" என்ற திரைப்படமாகவும் வந்துள்ளது.

Monday 16 August 2021

விசாரணைக் கமிஷன்

 

                   விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி               



    சா. கந்தசாமி அவர்களின் சாயாவனம் நாவலைப் பற்றி பலர் சிகாலித்துக் கூறுவதை அறிந்துள்ளேன். நீண்ட காலமாக அதனை வாசிக்க எண்ணுகையில் 1998'ஆம் சாகித்ய அகாடமிவிருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைத்தது. அதனால் அதனை முதலில் வாசித்து என் எண்ணங்களை எழுதியுள்ளேன். 

              நாவலின் கதாநாயகன் &  நாயகி தங்கராசும், ருக்குமணியும்தான். கணவன் தங்கராசு அரசாங்க பஸ் கண்டக்டர், மனைவி ருக்குமணியோ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. அவர்களின் அன்னியோன்னியமான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக அவர்களின் நினைவோடைகளின் வாயிலாக நாவலை சா.கந்தசாமி எழுதியுள்ளார். தங்கராசு, ருக்குமணியிடம் கோபப்படுவது பின்பு அவனே சமாதானம்தான் ஆகி அவளிடம் பேசுவதும் இயற்கையாக உள்ளது. குழந்தை இல்லாததை ஒருபோதும் தங்கராசு குறையாக ருக்குமணியுடன் பேசுவதில்லை.

                         நினைவோடு சம்பவங்களால் நாவல் பல காலகட்டத்திற்குப் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் பேச்சுக்கு நடுவையே காலத்தைப் பதிவு செய்யும் ஆசிரியரின் எழுத்து நுணுக்கம், நம்மைக் கதையினுள் ஈர்த்து விடுகிறது. பாரதிவாணன், ருக்குமணியை பாராட்டும் பொழுது "உங்க கலைத்திறமையை வைத்துத்தான் அறிஞர் அண்ணாவிடம் கையெழுத்து வாங்கப் போகிறேன் என்பதும், பஸ் டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம். ஜி. ஆரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள் என்பதும், "இந்திரா காந்தியைச் சுட்டு விட்டார்கள்"  என்று சரோஜா டீச்சர், ருக்குமணியிடம் கூறுவதும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் "ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்" என்று ஒலிப்பதின் மூலமாகக் கதையின் காலகட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். 

                          தான் உண்டு, தன் வேலையுண்டு என தன் வேலையில் இருக்கும் தங்கராசு, மற்றும் அவரின் சக ஊழியர்களின் மூலமாக பஸ் டெப்போவில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே எழுதியுள்ளார். அவர்கள் பேசும் தற்கால அரசியல், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அங்கு நடைபெறும் அரசியல் என்பது ஒருபக்கமெனில் மறுபக்கம் ஆசிரியர்களின் உலகம் சித்தரிக்கப்படுகிறது. ஒரு சாதாரண ஆசிரியரும், பேருந்து நடத்துநரும் அவர்களின் சுயநல செயல்பாடுகளால் எவ்வாறு அரசியல் தலைவர்களாக உருமாறுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

                        தொண்டை வலியால் அவதிப்படும் ருக்குமணியிடம் அவளது நாய் டைகர் செலுத்தும் ஆழமான அன்பை மிக அற்புதமாக தன்னுடைய எழுத்தால் வாசிக்கும் அனைவருக்கும் அதுபோல் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கடைசி அத்தியாயத்தில்தான்  நாவலின் தலைப்புக்குள் நுழைகிறது கதையின் போக்கு. காவல் துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் தொடக்கும் ஒரு சாதாரண சண்டை எப்படி பெரிய கலவரமாக, போராட்டமாக மாறியது. அதில் சம்பந்தமேயில்லாத தங்கராசு மாட்டிக்கொள்ள அது அவன் குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதுதான் நாவலின் முடிவு. 

                         மாவட்ட ஆட்சியர், அந்த கலவங்களைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார்.  சமூக போராட்டங்கள் எப்படி ஒரு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைக்கிறது என்பதுதான் நாவலின் அடிநாதம். நாவலின் சில இடங்களில்  தலபுராணங்கள் (கோவில்) வருகிறது அவை நாவலுக்கு எந்த வகையில் வலுசேர்க்கவில்லை.

இறுதியாக:                    

                   நாவலின் தலைப்பைப் பார்த்தவுடன் எதாவது கிரைம் விசாரணை நாவலாக இருக்குமோ என்று நினைத்துத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாவல் முற்றிலும் என் எண்ணத்திற்கு மாறாக ஒரு (பல) சமூகப் பிரச்சினையை மிக ஆழமாக அலசியது. காவல் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்குமான மோதல் போக்கு பற்றிய பல செய்திகளை நான் மாணவனாக இருந்த பொழுது நாளிதழ்களில் வாசித்துள்ளேன். அத்தகைய போக்கு இப்பொழுது குறைந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தந்தாலும் சமூக மோதல்களின் களங்கள் மாறியிருப்பது இன்னும் வருத்தமடையச் செய்கிறது. 

Thursday 24 June 2021

தோல்

 

                                  தோல் - டி. செல்வராஜ்

     

      2012'ஆம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல் நாவலை வாசிக்கச் சிலமுறை முயற்சி செய்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். ஆசிரியர் டி. செல்வராஜ், நாவலில் வரும் கதைமாந்தர்களின் பெயர் மற்றும் சிறுகுறிப்பை முதலிலே சொல்லி விடுகிறார். சுமார் 117 பேர்.. அதைப் பார்த்தவுடன் நாவலை வாசிப்பது கொஞ்சம் கடினமான பயணமோ என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. ஆனால் தொடங்கிய பின் டி. செல்வராஜின் எளிமையான நடை வாசிப்பை எளிதாக்கியது. 

             இந்தியா சுதந்திரம் பெறாத காலத்தில் (1940 காலகட்டத்தில்) திண்டுக்கல் நகரிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளி ஓசேப்பு தன் முதலாளி அஸன் ராவுத்தரின் மைத்துனன் முஸ்தாபா மீரானை அடித்துவிட்டதாகத் தொடங்கும் நாவல் அந்த தொழிலாளிகளின் வாழ்வையும், அவர்களுக்கு நிகழும் வதைகள், அதனையொட்டி துவங்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள், முதலாளிகளின் அடக்குமுறைகள், அந்த நெருக்கடிகளால் உருவாகும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்த வரலாற்றை விவரிப்பதுதான் தோல் நாவல். 

               இதுவரையில் ஒரு பறையனின் கரமும் தோல்ஷாப்பு முதலாளியின் மேல் பட்டதில்லை என்று ஆரம்பிக்கும் வரியிலே டி. செல்வராஜ் குறிப்பால் உணர்த்தி விடுகிறார். தொழிலாளியின் கரம் என்று கூறாமல் பறையனின் கரம் என்பதின் மூலமாக அக்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு வர்க்கப்போராட்டமாக மட்டுமில்லாமல் அடிப்படையில் சாதிரீதியான பிரச்சினையாகவும் இருந்தது என்பதைப் படம் பிடித்துக்கட்டுகிறார்.  மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளே நிலவிய தீண்டாமையையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவரான சுந்தரேச அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். அவரது மகன் வக்கீல் சங்கரன் அவர்களின் சமூக எதிர்ப்புகளையும் மீறிப் படாத பாடுபட்டு தொழிற்சங்கத்தையும் உருவாக்கி அந்த தொழிற்சங்கங்களை நசுக்க அரசு மற்றும் முதலாளிகள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்துப் போராடி அவர்கள் நலனே தன் நலன் என்று வாழ்கிறான். 

                    தொழிற்சங்கங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அமைந்த அரசுகளும் தங்கள் அதிகாரத்தையும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியும்  முடக்கவே முயற்சி செய்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் சாதி அரசியில், உண்மையாக தேசவிடுதலைக்கு பாடுபட்ட சில தொண்டர்களின் நிலைமை, உணவுப் பஞ்சத்தின் போது அரசாங்கம் மற்றும் சில வியாபாரிகளின் செயல்பாடு என வரலாற்றையும் பதிவுசெய்கிறார் டி. செல்வராஜ். ஓசேப்பு நகரசபை தலைவர் ஆவதாக நாவலை முடித்திருப்பது அடிப்படை உரிமைகளை இறுதியில் அவர்கள் போராட்டங்களின் வாயிலாகப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.  மேலும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழும் சங்கரனின் தாயார் அம்புஜத்தம்மாள், தேவதாசிக் குலத்துப் பெண்ணான வடிவாம்பாளை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதும் சிறப்பு.

                    எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் ஓசேப்பு, ஆசிரியர் இருதயசாமி, கழுவத்தேவன், வேலாயுதம், சந்தனத் தேவன், மினிசாமி, துண்டு பாய் என்கிற சவுக்கத்து அலி, தாயம்மாள், அருக்காணி, தேவசகாயம், வெள்ளைத்துரை, வீராயி போன்ற பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. அந்த மக்களின் ஆதரவற்ற நிலைமை நேரடியாக மிகைப்படுத்துதல் எதுவுமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை உறிஞ்சும் வகையில் எல்லா முதலாளிகளும் இனம், மதம், அரசியல் வேறுபாடு பார்க்காமல் இணைந்து செயல்படுவதைத் தோலுரித்துக் காட்டுகிறார். 

                தோல் நாவலை டி. செல்வராஜ் ஒரு சோஷியலிஸ யதார்த்தவாத நாவலாக எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வு பெற்று சங்கங்கள் அமைத்து அதன் வழியே  ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதுதான் நாவலின் மையக்கரு. தொழில்நுட்பங்கள் பெரிய வளர்ச்சி அடையாத காலத்தில் தோல் தொழிற்சாலைகளின் சுண்ணாம்புக் குழியில் முறி எழுதிக்கொடுத்து அடிமையாக வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களை, எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்தரிக்கிறது. ஆனால் பிற்பகுதியில் உரிமைப் போராட்டங்கள், தலைமறைவு வாழ்க்கை, அரசாங்கங்களுக்கு எதிரான குரல்களையே பேசுவதால் பொதுவுடைமை இலக்கிய பிரச்சார நெடியாகச் சில இடங்களில் தோன்றினாலும் ஆசிரியர் தன்னுடைய எழுத்தாற்றலால் அதனைப் போக்க முயன்றுள்ளார்.       

  இறுதியாக:        

        உலகத்தில் பொதுவாக எல்லா இயக்கங்களும் அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து மக்களை அவர்களின் நிலைகளிலிருந்து மேம்படுத்தி மீட்கவே தோன்றின. காலமாற்றங்களில் அந்த இயக்கங்களின் மேல் மிகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது அதனால் மிகவும் பயன்பெற்ற இன்றைய தலைமுறையினரால் கூட. அதற்கான ஒரு காரணம் அந்த இயக்கங்கள் அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்காததும். இதுபோன்ற நாவல்கள் அந்த குறையைக் கொஞ்சம் போக்குகிறது. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்ப அந்த இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொள்ளாததும் இன்னொரு பெரிய காரணம். 

Thursday 20 May 2021

செல்லாத பணம்

 

                  செல்லாத பணம் - இமயம்     


    இமயத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் வாசித்துவிட்டு அது தந்த அனுபவத்தை எழுதியுள்ளேன். செல்லாத பணம் நாவலுக்கு 2020'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தி கிடைத்தவுடன் நாவலை வாங்கி வாசித்தேன். 

        செல்லாத பணம் நாவல் நீண்டதொரு கதையைச் சொல்லும் நாவல் அல்ல. ஒரு சம்பவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதனை மிக யதார்த்தமாக, பெரிய திடீர் திருப்பங்கள் கிடையாது ஆனால் வாசிப்பவரை  பதைபதைப்போடு அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இமயம் எழுதியுள்ளார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் நடேசன், அமராவதி தம்பதியினருக்கு முருகன், ரேவதி என இருபிள்ளைகள். பொறியியல் படிக்கும் ரேவதி எதிர்பாராதவிதமாக ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலித்து திருமணம் செய்கிறாள். குணநலன்கள் சரியில்லாத ரவியால் மிகவும் சித்திரவதைகள் படும் அவள் ஒருநாள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். நடேசனின் குடும்பம் எவ்வளவு பணம் செலவழித்தும் ரேவதியைக்  காப்பாற்ற முயற்சி செய்ய அந்த பணம் அவளைக் காப்பாற்றியதா என்பதுதான் நாவலின் முடிவு.

             ரேவதி பர்மா பஜாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியைக் காதலிப்பதும், அதற்குப் பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதும், அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதால் வேறு வழியின்றி அவனுக்கே திருமணம் செய்துக்கொடுப்பதுமான கதையின் முன்பகுதி சுமார் 25 பக்கங்கள்தான். நாவலின் மீதி பக்கங்கள் அனைத்தும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரேவதி கிடக்கும் பொழுதுதான் நடக்கிறது. பெரும்பாலும் உரையாடல்களின் ஊடாக, அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல். ரேவதி தற்கொலை செய்யத் தீக்குளித்தாளா?, ரவிதான் கொளுத்தினானா? இல்லை தவறுதலாக நடந்த விபத்தா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ரேவதியின் குடும்பம் ரவிதான் கொளுத்தினான் என அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அவனை வஞ்சகம் தீர்க்க.

               புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் தீக்காயத்திற்கான அவரச சிகிச்சை நடைமுறைகள், அங்குள்ள ஊழியர்களின் செயல்பாடுகள், நோயாளிகளின் உறவினர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் வெகு இயல்பாக எழுதியுள்ளார். நாவலை வாசிக்கும்போது இமயத்தின் சொல்லாட்சியில் ஏதோ நாமே அந்த மருத்துவமனையிலிருந்து சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. நாவலில் ரவி, முருகனின் மனைவி  அருள்மொழியிடம் தன் பக்க ஆதங்கத்தைப் பேசும் பகுதி முக்கியமானது. ரேவதியின் உறவினர்கள் எல்லோரும் தங்கள் பக்கம் மட்டுமே  சிந்திக்க, அருள்மொழி மட்டும் கொஞ்சம் ரவியின் பக்கமும் சிந்திக்கிறாள். ஆனாலும் ரவியின் தர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

                  கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்புகள், மிக யதார்த்தமான உணர்ச்சி பொங்கும் உரையாடல்களைக் கொண்டு இரண்டு வரிக்கதையை 200 பக்கங்களுக்கு மேல் நாவலாக இமயம் படைத்துள்ளார். நாவலில் வரும் சில கதைமாந்தர்கள் மிகச் சாதாரணமாகப் பணத்தை வீச வேண்டியதுதானே என்கிறார்கள் ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் பணம்  மட்டுமே அத்தியாவசியமானதல்ல என்பதை ஆசிரியர் இறுதியில் உணர்த்துகிறார். இமயத்தின் கதை சொல்லும் ஆற்றல் உங்கள் உள்ளத்தை ஊடுருவி கண்களில் கண்ணீரைத் துளிக்க வைக்கலாம். மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி ஏற்றத்தாழ்வுகள் எத்தனை சமூக சிக்கல்களை என்பதை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள வாசிக்கவேண்டிய நாவல் இந்த செல்லாத பணம். 

இறுதியாக :

         இதுபோன்ற வலிகளைப் பேசும் பல நாவல்கள் அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. அதனால் சிலருக்கு நாவல் பேசும் பிரச்சினையின் ஆழம்  புரியாமல் வெவ்வேறு விதமாக அலசுவார்கள். 

            இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 48 - புத்தகங்களைப் பற்றிய என் மனதில் பட்ட எண்ணங்கள், 2- என் மனதில் தோன்றிய சொந்த கதைகள். பெரிய திட்டமிடல் எதுவுமின்றி ஆரம்பித்த பயணம் 50'தை தாண்டி தொடர்கிறது. இதுவரை ஆதரவு தந்து உற்சாகப் படுத்திய அனைவருக்கும், இனி வரும்காலத்தில் தொடரும் பயணத்தில் சேர்ந்து பயணிக்க வருகை தரப்போகிறவர்களுக்கும் நன்றி 🙏...


Monday 10 May 2021

பேசாத பேச்செல்லாம்...

 

               பேசாத பேச்செல்லாம்...   ப்ரியா தம்பி

       

     ஆனந்த விகடனில் வெளிவந்த  போதே வாரம் தவறாமல் பேசாத பேச்செல்லாம் கட்டுரை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தேன். ஏன் வார இதழ் கையில் கிடைத்தவுடன் முதலில் வாசித்ததே ப்ரியா தம்பி எழுதிய இந்த  பேசாத பேச்செல்லாம்.. கட்டுரையைத்தான். கட்டுரை தொகுப்பு புத்தகமாக வெளிவந்த பொழுது வாங்கப் பல முயற்சிகள் செய்து இரண்டாம் பதிப்பில்தான் கிடைத்தது.  மீண்டும் ஒருமுறை வாசித்தேன் என் எண்ணங்களைப் பதிவுசெய்ய. 

         முதல் கட்டுரையிலே தூங்கச் சொல்லி தொந்தரவு செய்தால் 100'க்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்துவிடுவேன் என்பதான அவருக்கும், அவரின் மகளுக்கும் இடையேயான உரையாடலை மையப்படுத்தி, இன்றைய குழந்தைகளின் விசாலமான அறிவையும், தைரியத்தையும் எடுத்துரைத்து நாம் வளர்ந்த சூழ்நிலைகளை ஒப்பிடுவதில் தொடங்கி, ஒரு தாயாக, மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக எல்லோரின் குரலாகவும், பொது வெளியில் பேசத் தயங்குகிற எல்லாவற்றையும் பேசுகிறது இந்த  பேசாத பேச்செல்லாம். 

        பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றிச் சொல்லுபவர் அவர்கள் வைத்திருப்பது வண்டியல்ல, "அவர்களின் இறக்கைகள்" என்கிறார். கண்டிப்பாக 10-15 வருடங்களுக்கு முன்பு பல பெண்கள் முதன் முதலில் வண்டியை ஓட்டும் பொழுது மனதால் பறந்திருப்பார்கள். முன்பெல்லாம் குடும்பப் பயணம், திருவிழாக்களுக்குத் தயார் செய்யப் பெண்கள் சமையல் அறையிலே அடைந்து கிடந்தது, பெண்களின் உடை, பாலியல் வன்முறை செய்யப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினரின் மனநிலையை, பாலியல் தொழிலாளிகளின் மனதின் உணர்வுகள், திருநங்கைகளின் மீதான சமூகத்தின் பார்வைகள், அம்மா- மகள் பாச உறவு, அப்பா -மகள் பாச உறவு, ஆண் - பெண் நட்பின் சாத்தியக்கூறுகள் என உள்ளபடி உள்ளதாகச் சித்தரிக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் மேற்பூச்சுகள் எதுவுமின்றி வெளிப்படையோடு நேர்மையாகப் பிரச்சினைகளை அலசுகிறது.

                    பொதுவாகப் பெண்ணியம் பேசும் நாவல்கள்/கட்டுரைகள் எல்லாம் ஆண்கள் மீது, ஆணாதிக்க சமுகத்தின் மீது சாடுவது போலிருக்கும். அத்தகைய போக்கு இதில் இல்லாமல் ஆண்களின் மனநிலையும் அவர்களின் "ஆண்மை" போக்குகளுக்கு நமது குடும்பம், சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வரையறையே என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறார். பெண்களுக்கு முதல் எதிரி பெண்களே சிறு விசயங்களில் அவர்களுக்கு இருக்கும் சின்ன தயக்கமே ஒரு பலவீனத்தைக் கொடுக்கிறது. அவர்களின் அரைகுறைப் பெண்ணிய புரிதல்களைப் பற்றித் தெளிவாகவும் மிகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். 

          ப்ரியா தம்பி குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாகர்கோவில் சுற்றுவட்டார இடங்களைப் பற்றி (பிரபு ஹோட்டல் உட்பட) நிறையக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புத்தகப் பிரியர்களுக்குக் கட்டுரை தொகுப்புகளை விடக் கதைகள் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனால் பேசாத பேச்செல்லாம் வாசிக்கும் அனைவரையும் ஆசிரியரின் எழுத்து நடை தன்பால் இழுப்பது மட்டுமில்லாமல் உங்களை உலுக்கிப் பல கேள்விகளை எழுப்புவதுடன் தங்களைப் பற்றிய ஓர் சுயவிமர்சனத்தையும் உங்களுக்குள் தோற்றுவிக்கும்.  இந்த கட்டுரை தொகுப்புகள் பெண்களுக்கானது மட்டுமானதல்ல, பெண்களைப் புரிந்து கொள்ளாமல் புலம்பும் ஆண்களுக்குமானதுதான் இந்த பேசாத பேச்செல்லாம்...

இறுதியாக :

        இந்த கட்டுரைகள்  பேசும் மனநிலை கொண்டவர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். எனக்குத் தெரிந்த பல பெண்கள் படித்து நல்ல வேலையில் இருப்பார்கள் ஆனால் ஒரு ATM சென்று பணம் எடுக்கத் தெரிந்திருக்காது. தனியாக ஒரு இடத்திற்கு, கடைகளுக்குச் செல்லத் தயங்குவார்கள். அதையெல்லாம் அவர் பார்த்துப்பார், அவற்றைப் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனப் பெருமையாகவும் பேசுவார்கள். அவர்களையெல்லாம் பொருத்தவரை கணவன் சமையலுக்குக் காய்கறி நறுக்கித் தருவதுதான் பெண்ணிய சமநிலைப்பாடு😂 ...   


Thursday 22 April 2021

உடையார்

 

                           உடையார் - பாலகுமாரன்

 

                பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை வாசிக்க சில நண்பர்களும், நாவலைக் கொடுத்து எனது சகோதரரும் பரிந்துரைத்தார்கள். ஆறு பாகங்களுடன்  (புத்தகங்கள்) சுமார் 2600 பக்கங்களைக் கொண்ட பெரிய நாவல். ஒரு வார இதழில் முதலிரண்டு பாகங்களை எழுதியுள்ளார். சில காரணங்களால் அவர்கள் நாவலைத் தொடர மறுக்க, இதர பாகங்களைத் தனிப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.  நாவலின் பிரமாண்டம்தான் வாசிப்பைத் தொடங்க பெரிய தயக்கத்தைத் தந்தது. இறுதியில் வாசிக்கத் தொடங்கி விட்டேன். நான் வாசித்து முடிக்கச் சிறிது அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுதான். ஆனால் அதற்குக் காரணம் நாவலின் நீளம் மட்டுமே  அல்ல..

              இராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார், அதில்  அவர் சந்தித்த சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு முறியடித்தார் என்பதுதான் நாவலின் மையக்கரு. நாவலின் பலமே பாலகுமாரனின் வசனங்கள் தான். அதுவும் உறவுகள் குறித்து கதாபாத்திரங்கள் பேசும், விவாதிக்கும் வார்த்தைகள் அனைத்தும் எக்காலத்திலும் ஏற்ற வகையில் உள்ளது. மன்னரைப் பற்றி மட்டுமே பேசாமல் அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறுபட்ட குடிமக்களையும், கோவில் கட்டுமானத்தில் பங்கேற்று உறுதுணையாக இருந்த பலதரப்பட்ட சமூகத்தினரின் பங்கையும் அவர்களிடையே இருந்த மோதல்களையும் பாலகுமாரன் நம் கண்முன்னே காட்டிவிடுகிறார் அவரின் எழுத்துக்களால்.

            செம்பியன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, இராஜராஜீ, சீருடையாள், பரவை நாச்சியார், குமுதினி, குந்தவை, கரிய மாணிக்கம், எச்சுமண்டை, உமையாள், குந்தவை (இராஜராஜனின் மகள்), மாதேவடியார், முத்தான பொன் நங்கை, அம்மங்கை, கடுவன்காரி, கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்மொழி, மலையனுர் சாம்பான்,  வந்தியத்தேவன், விமலாதித்தன், கருவூர்த்தேவர், ஈசான சிவபண்டிதர், ராஜராஜ பெருந்தச்சர், நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையன், சீராளன், சாவூர் பரஞ்ஜோதி, வைணவதாசன், குணசீலன், வீணை ஆதிச்சன், பரசு நம்பூதிரி, தொண்டை நாட்டு அந்தணர்கள் இப்படிப் பல கதாபாத்திரங்களை வடிவமைக்கப் பல பக்கங்களை ஒதுக்கி தேவரடியார்கள், அதிகாரிச்சிகள், ஒற்றர்கள், கருமார்கள், அந்தணர்கள், மெய்க்காவல் படை வீரர்கள், வேளாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என எல்லோரைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவதின் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையையும் சொல்லுகிறார்.

                    கோவிலைக் கட்டுவதற்கான மண்டப வரைபடங்களைக் கொண்டுவரும் தேவரடியார் இராஜராஜீயின் வண்டி காவிரி ஆற்றின் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ள அதனை மீட்கும் படலத்துடன் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது நாவல். அந்த காலத்தில் இவ்வளவு உயரமான கோவிலைக் கட்ட மன்னருக்குத் தோன்றியது என்பதே வியப்புதான்.  அதனை மக்கள் எப்படியெல்லாம் எதிர் கொண்டிருப்பார்கள், பேசியிருப்பார்கள், அவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும், என்னென்ன குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும், அரசன் எப்படி இருந்திருப்பான் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பங்கு என நிறைய விபரங்களை விரிவாகவும் எளிதாகவும் சொல்லியுள்ளார். நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் எல்லாம் இந்தியக்கண்டத்தைச் சேராத அல்லது வேற்று மத மன்னர்களின் படையெடுப்பை மட்டும் பெரும் படையுடன் வந்து கொள்ளையடித்துச் சென்றார்கள் என எழுதியிருப்பார்கள். ஆனால் அக்காலத்தில் குறிப்பாகத் தென்னகத்திலிருந்த மன்னர்களின் படையெடுப்புகள் எல்லாமே பொதுவாகக் கொள்ளையடித்துச் செல்வத்தை அவர்கள் நாட்டிற்குக் கவர்ந்து வருவது மட்டுமே காரணமாக இருந்தது என்ற உண்மையை நேர்மையாக எழுதியுள்ளார் பாலகுமாரன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காக மேலை சாளுக்கியத்தை வென்று நிறையப் பொருட்களைக் கொள்ளையடித்து வருகிறது இராஜராஜனின் படை. 

                                            நாவலை வாசித்து முடித்தவுடன் என் மனத்தில் தோன்றிய சில கேள்விகளை, சந்தேக எண்ணங்களை வரிசையாகத் தந்துள்ளேன்.

செம்பியன் மகாதேவியை ரவிதாசனின் வாரிசுகள் கடத்திக்கொண்டு செல்வது, இராஜேந்திர சோழனுக்கு எழுதப்பட்ட ஓலை மேலை சாளுக்கியர்களிடம் சிக்கிக்கொள்வது போன்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் சம்பவங்கள் எழுதிவிட்டு அதன் ஓட்டிய சம்பவங்கள் நாவலில் மீண்டும் சொல்லப்படாமல் இருப்பது இவ்வளவு பெரிய நாவலை விறுவிறுப்புடன் ஆர்வம் குறையாமல் வாசிக்கத் தடையாக உள்ளது.

 நாவலின் தலைப்பை உடையார் என்பதற்குப் பதில் பஞ்சவன் மாதேவி என்றே வைத்திருக்கலாம் போல. நாவல் முழுவதுமே அவள்தான் நிறைந்திருக்கிறாள். பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். தேவாரம் பாடும்போது கேட்ட இராஜராஜன் அதில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள காதல் நெருக்கம், வேதியலை ரொம்ப உருக்கமாக, உயர்வாக எழுதியுள்ளார். மன்னர் அன்பு செலுத்தியிருக்கலாம் ஆனால் ஒரு தேவரடியாருக்கு (அனுக்கி)  பட்டமகரிஷிக்கள் இருக்க அரசவையில் பாலகுமாரன் எழுதியிருக்கும் அதிகாரம் எல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.

பட்டத்து அரசியான உலகமகா தேவி, பஞ்சவன் மாதேவி காலில் விழுந்து என் மகன் இராஜேந்தினை கொன்று விடாதே என்று வேண்ட, பஞ்சவன் மாதேவியோ தன் கர்ப்பப்பையை மலடாக்கிக் கொள்கிறாள்.  பிற்காலத்தில் இராஜேந்திர சோழன், பஞ்சவன் மாதேவிக்குப் பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இதில் இரண்டு கேள்விகள் எழுந்தது என் மனதில். 1. இராஜேந்திரனின் தாயார் உலகமகா தேவி அல்ல வானதி தேவி என்றுதான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்.  2. இராஜராஜனுக்கு பல மனைவியர், ஏன் வேறு யாருடனும் குழந்தை பிறக்காதா?.   

கோவிலைச் சுற்றி அமைத்த மண் சாரத்தை நீக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளை விளாவாரியாக விளக்குபவர் அதைவிடக் கஷ்டமான பணியான மண் சாரத்தை அமைத்த நிகழ்வைப் பற்றி அதிகம் பேசவில்லை.

கால அளவுகளில் பல குழப்பம் உள்ளது. தேவரடியார் இராஜராஜீ கோவில் கட்ட துவங்கும் பொழுதுதான் அருண்மொழி (பிரம்மராயரின் மகன்) அறிமுகம் ஆகிறாள் ஆனால் இருவரும் 11 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்வதாகப் பாகம் 6'ல் வருகிறது. 

பெரிய கோவிலின் வாசலில்  கணபதி (பிள்ளையார்) சிலையை வைப்பதாக வருகிறது ஆனால் நான் படித்த/வாசித்த வரலாற்று ஆராய்ச்சி புத்தகங்களில் எல்லாம் மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலே பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டதாக உள்ளது.

அரசு கணக்குகளைப் பார்க்கும் அந்தணர்கள் பொய்க் கணக்கு எழுதுகிறார்கள். அரசு சொத்தை எப்படியெல்லாம் சந்தேகம் வராமல் கொள்ளையடிப்பது என வகுப்பெடுக்கிறார்கள். பாலகுமாரன் சொல்ல வருவதென்ன? அரசு வேலை செய்பவர்கள் அப்போதிலிருந்தே கறை படிந்தவர்கள்தான் என்கிறாரா?

ஒற்றர்களால் நாவல் நிரம்பி வழிகிறது. யாரும் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் ஒற்றர் வைத்துள்ளார்கள். ஒற்றரை ஒற்றறிய இன்னொரு ஒற்றர். கணக்கு பார்த்தால் படைவீரர்களை விட ஒற்றர்களின் எண்ணிக்கை அதிகம் போலத் தோன்றுகிறது.

சரித்திர கதைகளில் பெரும்பாலும் ஆசிரியரின் கற்பனையே நிரம்பியிருக்கும். வரலாற்று நிகழ்வுகளில் கற்பனை கதாபாத்திரங்கள் கதையின் போக்கைத் தீர்மானிப்பதைத் தவிர்த்திருப்பதாக முன்னுரையில் கூறும் பாலகுமாரன் சில மந்திர தந்திரங்கள் செய்யும் கருவூர்த்தேவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக எதனை மாற்ற விரும்புகிறார்?. இறுதியில் இராஜராஜன் மற்றும் பஞ்சவன் மாதேவியின் ஆன்மாவும் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலின் கோபுரவாசலிலிருந்து இன்னும் நம்மை வரவேற்பதாக வேறு எழுதியுள்ளார். 

நாவலில் முழுவதுமே தேவரடியார்கள்தான் அதிகாரம் செய்கிறார்கள். நாவல் முழுவதும் முக்கியத்துவம் பெற்று கதையை நகர்த்துவதே அவர்கள்தான். மன்னர், இளவரசர், சேனாதிபதி, சிற்பி, ஓவியன் என அனைவரும் அவர்களுக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவரடியார்கள்தான் நாட்டின் கண்கள் என வசனமே எழுதிவிட்டார். யாருடைய மனைவியர் பாத்திரமும் நாவலில் இம்மியளவும் வடிவமைக்கப் படவேயில்லை. 

மிக முக்கியமாக என் மனதை நாவல் முழுவதும் உறுத்திக்கொண்டே இருந்தது  நாவலின் கதை நிகழ்வுகள் ஏதோ 10 வருடங்களுக்கு முன்பு நடந்த மாதிரியே பல சம்பவங்களை எழுதியிருப்பது. மன்னரைச் சுற்றி நிற்கும் மெய்காவல் படையின் நடவடிக்கை, மன்னர் அவர்களை மீறி செயல் படுவது..... பல லட்சங்களில் வீரர்களின் கணக்கைச் சொல்லுகிறார்.  அவர்கள் அனைவரும் எப்பொழுதும் நெல் சோறுதான் சாப்பிடுகிறார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கூட  அனைவருக்கும் நெல் சோறு கிடைத்ததில்லை. மன்னரின் இரண்டாவது மகள் மாதேவடியார் காதல் கதையில் இப்போதைய டேட்டிங் மாதிரியான சம்பவங்கள் எல்லாம் வருகிறது. இதர சமூகத்தினர் அந்தணர்களுக்கு இணையான உரிமையெல்லாம் கேட்பது..

        பல இடங்களில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்புடைய செய்வதால் நாவல் மிக விரைவிலே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது. மொத்தமே இரண்டு பாகங்களாக எழுதவேண்டிய நாவலை ஆறு பாகங்களாக எழுதி (5 பாகம் நாவலை முறியடிக்கவோ)  நீண்ட கதை சொல்லலாக  வளர்ந்து உலகின் மிகச்சிறந்த கட்டுமானத்தைப் பேசும் நாவல் தனது நேர்த்தியான கட்டுமானத்தை இழந்து நிற்கிறது.

இறுதியாக :

              நாவலை வாசித்து முடித்த பின் மீண்டும் ஒருமுறையேனும் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று அதனை உயரத்தைப் பார்த்து ஒவ்வொரு சிலையாக ரசிக்க வேண்டும், சோழர்களின் காவல் தெய்வம் நிசும்ப சூதனி கோவிலுக்குச் சென்று வழிப்பட வேண்டும் எனத் தோன்றியது. இதுவரை தஞ்சை பிரகதீஸ்வரரைத் தரிசனம் செய்ததற்கும் நாவலை வாசித்தபின் செய்வதற்கும் நிச்சயம் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும் ஆனால் பலரும் கூறியதால் உடையார் நாவல் மீது ஒரு பிரமிப்பு, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.. நாவலை வாசிக்காமலே இருந்திருந்தால் அந்த பிரமிப்பு, எதிர்பார்ப்பு அப்படியே மனதிலிருந்திருக்கும்.

                              சோழம்!!    சோழம்!!   சோழம்!!

Sunday 14 February 2021

ஒரு கடலோர கிராமத்தின் கதை

 

          ஒரு கடலோர கிராமத்தின் கதை

                                                                 தோப்பில் முஹம்மது மீரான்


     பலமுறை வாசிக்க நினைத்த நாவல். தோப்பில் முஹம்மது மீரான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சியம் கிடையாது. ஒரு கடலோர கிராமத்தின் கதை அவரின் முதல் நாவல். 1988'ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. பிற சமயத்தைச் சார்ந்த மக்களின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த நாவல்களை நான் அதிகம் வாசித்ததில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாசித்த ஒரு கடலோர கிராமத்தில் நடக்கும் கதை. வட்டார, சமூக வழக்குச் சொற்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடந்தாலும் எனக்குக் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் என்பதால் எங்கும் தடைப்படாத வாசிப்பனுபவத்தை  அது அளித்தது. 

               மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தின் அதிகார பலமிக்க முதலாளி வடக்கு வீட்டு அகமதுக் கண்ணு. தன்னுடைய அதிகாரத்தையும், போலி கவுரவத்தையும் தக்க வைக்க எதையும் செய்யத் துணிபவர். அனைத்திலும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த வேண்டும், தனக்கே எதிலும் முதல் மரியாதை செலுத்த வேண்டும் என்னும் அதிகாரப் பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை. சுறாப்பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூத் முதலில் அவரை எதிர்த்துப் பேசுகிறான். அகமதுக் கண்ணுவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். ஆங்கில அரசாங்கம் பள்ளிக்கூடத்தை அந்த ஊரில் நிறுவ முயற்சி செய்ய அதற்கு இடம் தர மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கிறார் முதலாளி. அறியாமையின் இருள் அகல வேண்டுமெனில் கல்வி அறிவு மிகவும் அவசியம் அதற்கு இங்குப் பள்ளி அமைவது இன்றியமையாதது. அதனால் தன் மகளின் திருமண செலவிற்காக வைத்திருக்கும் தன் நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்ட தானமாகக் கொடுக்கிறான்  மஹ்மூத். இதனால் மிகுந்த கோபம் கொள்ளும் முதலாளி அவனைப் பழிவாங்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? தன்னுடைய அதிகார பலத்தைத் தக்கவைத்தாரா என்பதே நாவலில் முடிவு.

               அகமதுக் கண்ணுவின் மகள் ஆயிஷா, இளம் வயதில் கணவனை இழந்த அவரது சகோதரி நூஹு பாத்திமா, அவளின் மனவளர்ச்சியில்லாத மகன் பரீது, மோதினார் அசனார் லெப்பை, நியாயவிலைக்கடை நடத்தும் உஸன்பிள்ளை, பள்ளியை நடத்தக் கிராம மக்கள் செய்யும் இடையூறுகளைக் கண்டும் மனம் தளராத பள்ளிகூட ஆசிரியர் மெஹபூப்கான், அவரின் மனைவி நூர்ஜஹான் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கால ஒரு இஸ்லாமியக் கிராமத்து நிகழ்வை நம் கண்முன்னே காட்சிகளாய் பதிவுசெய்துள்ளார் முஹம்மது மீரான் தன் எழுத்துகளால். தன் அத்தை மகன் பரீது மேல் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதை எழுதியவிதம் அருமை. நாவலில் பொறாமை, அதிகார துஷ்பிரயோகம், வன்மம், பழிவாங்கல், காதல், கோபம், அறியாமை என அனைத்தும் மிகையில்லாமல் யதார்த்தமாக உள்ளது. 

           இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள நம்மில் பலருக்குத் தெரியாத பிரச்சினைகளை வெளி உலகுக்கு ஒரு கடலோர கிராமம் நாவலின் வழியாக பதிவுசெய்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். ஆயிஷா, நூஹு பாத்திமா இருவரின் பாத்திரப்படைப்பு உங்களின் மனதை வெகுநேரம் அலைக்கழிக்க வைக்கலாம். மதத்தின் பெயரால் சிலர் மக்களின் அறியாமையை எவ்வாறெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறார். அதனால் நாவலுக்கு அப்பொழுது எதிர்ப்பும் கிளம்பியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் பொறுப்பான முறையில் தனது சமூகத்தின் மேலிருந்த அக்கறையினால் அதன் குறைபாடுகளைக் களையும் நோக்கில் எழுதப்பட்ட படைப்பாகவே ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் பார்க்கமுடிகிறது. வெறும் சீர்திருத்தப் பிரச்சாரமாக இல்லாமல் அன்றைய இஸ்லாம் சமூகம் குறித்த ஒரு எதார்த்தத்தை சித்தரித்ததின் மூலம் தமிழில் நீங்கள் வாசிக்கத் தவிக்கமுடியாத நாவலாக இருக்கிறது.

இறுதியாக :

              ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் கடல் சார்ந்த மீனவர்களைப் பற்றிய கதையாக இருக்கும் என எண்ணியே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகக் கதை பயணிக்கத் தொடங்கியது. தமிழில் இதுபோல் வேறு சமூகத்தினரின் கலாச்சாரம், சடங்குகளைப் பேசும் தமிழ் நாவல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால்  கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கவும். அதனையும் வாசிக்க முயற்சி செய்கிறேன்.