தி ஜானகிராமனின் மோக முள்
இந்நாவலை
வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் சில ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான
வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. வாசித்து முடித்த உடன் எழுதப்பட்டு இவ்வளவு
ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் பலரால் பேசப்படுகிறது, வாசிப்பவர்களை எல்லாம் ஏன் கவர்ந்திழுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
தி ஜாவின் அம்மா வந்தாள்
வாசிக்கும் பொழுது கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் (வட்டார நடை) எனக்கு அதிகம் பரிட்சியமானதாக இல்லை. அதனால்
தொடக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது ஆனால் மோக முள்ளில் அந்த பிரச்சினை
எழவில்லை. சொற்கள் மற்றும் தி.ஜா வின் நடை எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது போல.
சிறுவயது முதலே
இசையில் ஈர்ப்பு ஏற்படுமாறு நாயகன் பாபு அவனுடைய தந்தையால் (வைத்தி) வளர்க்கப்படுகிறான்.
யமுனா தமிழ் தந்தைக்கும், மராட்டிய
வம்சாவளி தாயிக்கும் (பார்வதி- இரண்டாந்தாரம்) பிறந்தவள். யமுனா மிகவும் அழகான பெண்ணாக பாபுவின் பார்வையின் மூலமாக விவரிக்கப் படுகிறாள்.
தன்
சிறுவயதிலிருந்தே தன்னை விட பத்து வயது அதிகமான யமுனாவுடன் பழகி வரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளைத் தெய்வத்தின் உருவமாகப் பார்க்கிறான். பல்வேறு காரணங்களால் 30 வயது ஆகிய பின்பும் தள்ளிப் போகும் அவளின் திருமணத்தை நடத்தவும் முயற்சி செய்கிறான் ஆனால் யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருமாறுகிறது. அதுவும் ஓர் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல். ஆனால் ஆரம்பத்தில் பாபுவால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஒரு நல்ல மற்றும் உயர்வான இடத்தில் இருக்க வேண்டியவள் என்று மட்டுமே நினைக்கும் பாபுவுக்கு, சமய சந்தர்ப்பத்தால் பக்கத்து வீட்டு வயதானவரின் இளம் மனைவியுடன் (இரண்டாம்தாரம்) கூடிய பின்தான் யமுனாவின் மீது உள்ள காதல்
புலனாகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜம் அதை முதலிலே புரிந்து கொள்கிறான். தங்கம்மா தற்கொலை செய்து விட பாபு மயானத்தில் குற்றவுணர்வில் நிற்பதை வாசிக்கும் போது என் இதயம் கனமாகி விட்டது.
சற்றே வரம்பு மீறிய காதலை யமுனா நிராகரிப்பதால் ஏக்கம் மற்றும் வலியுடன் இசைப் பயிற்றுவார் ரங்கண்ணாவிடம் முழு வீச்சில் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான். பின்னாளில் குரு ரங்கண்ணாவும் இறந்து விட மெட்ராஸ் சென்று பணிபுரிந்து வரும் பாபுவை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகத் தேடிவரும் யமுனா இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு
மலைக்கிறாள்.
ஒரு கட்டத்தில் தன் இளமையை, இத்தனை காலம் தனக்காக எவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுத்து விட்டு, இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று யமுனா, பாபுவிடம் கேட்பது என் மனதில் மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. நாவலை முழுமையாக, உணர்வுப் பூர்வமாக வாசித்தால் மட்டுமே அந்த ஒரு
வார்த்தையின் வலிமையைப் புரிந்து கொள்ள முடியும்.
நாவல் முழுதும்
வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக
எடுத்துரைக்கின்றது. குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு), பாபு-ராஜம் (நட்பு). அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம்
விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக வருவதால் அக்கால சமுதாய சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளை நாம் அறிய உதவுகிறது.
பொதுவாக
ஆண்களுக்கு, பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு இரு வகைப்படும். சிலரைப் பார்த்தால் காமுறுவர், சில பெண்களைப் பார்த்தால் பரவசம் கொள்வார்கள். ஆனால் அந்த பரவசத்துக்கும் அடித்தள அடிப்படை காமமே என்பதைச் சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் அடிப்படை என்பதை பாபு மூலம் அழகாக தி ஜானகிராமன் உணர வைக்கிறார்.
இறுதியாக :
அரு இராமநாதன் எழுதிய குண்டு மல்லிகை நாவலிலும் நாயகன் தன்னைவிட மூத்த பெண்ணை காதலிப்பதுதான்
கரு. ஆனால் இரு கதைகளின் தளங்களும், எழுதப்பட்ட விதமும் முற்றிலும் வேறு . இருந்தாலும் என்னை இரண்டு பாத்திரங்களுமே (உமா
மற்றும் யமுனா) கவர்ந்து விட்டது. இன்னொரு முறை கும்பகோணம் சென்றால் கட்டாயம்
யமுனா வாழ்ந்த தூக்காம்பாளையத் தெருவில் கால்பதித்து விட்டு வர முடிவு செய்துவிட்டேன்.