Tuesday 27 August 2019

ரோமாபுரிப் பாண்டியன்



                  
                              ரோமாபுரிப் பாண்டியன் 



   இடையிடையே கொஞ்சம் எளிமையான நடை மற்றும் கதைக் களங்கள் கொண்ட  நாவல்களையும் வாசிக்கலாம் எனச் சிலவற்றை வாங்கினேன் அதில் ஒன்று கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன். வெவ்வேறு எழுத்தாளர்களின் பாணி மற்றும் கருத்து நடைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் ஒரு காரணம். கருணாநிதி எழுதிய ஏதாவது ஒரு நாவலை மட்டும் முதலில் வாங்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் எதை வாங்குவது என்பதில்தான் குழப்பம் பின்பு எனது மாமாவின் சிபாரிசினால் ரோமாபுரிப் பாண்டியன் நாவலைத் தேர்ந்தெடுத்தேன். 


மற்றுமொரு சரித்திர கதை... கி.மு 20-ஆம் ஆண்டில் நடப்பதாகக் கதை உள்ளது. கரிகால்சோழனும், பெருவழுதிப்பாண்டியனும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரிகாலனால் தோற்கடிக்கப் பட்ட குறுநில மன்னனான இளங்கோவேள் அவனை வீழ்த்த செய்யும் முயற்சியை முறியடிக்கிறான் பாண்டிய வீரன் செழியன். காயம்பட்ட செழியனை இளங்கோவேளின் ஆட்கள் சிறைப்படுத்த அவனை மீட்கப் புலவர் காரிக்கண்ணாரின் மகள் முத்துநகை ஆண் வேடம் அணிந்து புறப்படுகிறாள்.

     மாறுவேடத்தில் இருக்கும் இளங்கோவேளிடம், முத்துநகை காதல் வசப்படுகிறாள். சிறையில் இருக்கும் செழியன்,  இளங்கோவேளின் தங்கை தாமரைதான் முன்பு தனக்காகப் பார்த்த பெண் என்பதனை தெரிந்து கொண்டு அவள் மீது ஆசைப் படுகிறான். ஆண் வேடத்தில் இருக்கும் முத்துநகையிடம் தாமரை மயங்குகிறாள். ஒரு கட்டத்தில் இளங்கோவேளின் மனைவியே கரிகாலனைக் கொல்ல முயற்சி செய்ய பல குழப்பங்களுக்கு இடையே இளங்கோவேள் முத்து நகையால் கொலை செய்யப் படுகிறான். 

     இதுவரை கொஞ்சம் சுவாரசியமாகச் சென்ற கதை தடம்புரள்கிறது. தாமரை மீது பாண்டிய இளவரசன் இளம்பெருவழுதியின் காதல்... செழியனின் ரோமாபுரிப் பயணம்...  அங்கு உள்ள ஜூனோ... அவளைப் பற்றிய ரகசியம் என. இளங்கோவேளின் பழிவாங்கும் படலத்தை  மட்டுமே இன்னும் கொஞ்சம் சுவாரசிய படுத்தி நீட்டி எழுதியிருந்தால்,  ஒரு நல்ல நாவல் படித்த உணர்வைத் தந்திருக்கலாம். என்ன ரோமாபுரிப் பாண்டியன் கிடைத்திருக்க மாட்டான்.  

     பிறப்பின் ரகசியங்களே பொதுவாகச் சரித்திர கதைகளின் மூலமாக உள்ளது. இதிலும் அது இருந்தாலும்... அது சொல்லப்பட்ட விதம் பெரிய உணர்வுகளை ஏற்படுத்தவில்லை. ரோமாபுரிப் பாண்டியன் என்னை ரொம்பக் கவராமல் போனதற்குக் காரணம், கொஞ்சக் காலமாக நான் யதார்த்தமான நாவல்களுக்கு மாறி விட்டது கூட இருக்கலாம். இந்த நாவலில்  ஒரு சதவீதம்தான் வரலாறு  மீதியெல்லாம் கற்பனை என நினைக்கிறேன். 


இறுதியாக:

நாவலாசிரியர் கருணாநிதி, அந்நிய மொழியைச் சிலர் புகுத்த நினைப்பதைத் தடுத்துப் போராடுவது. சுயாட்சி, கூட்டாட்சி தத்துவங்கள், பகுத்தறிவு தத்துவங்கள் போன்ற தன்னுடைய கருத்துக்களையும் நாவலில் அழகாக ஆங்காங்கே அள்ளி தெளித்துவிட்டார்.   மேலும் தளபதி நெடுமாறன், மன்னருக்குப் பின் அவரது மகனைத் தள்ளிவிட்டு தான்தான் அரியணையில் ஏற வேண்டும் என சில வேலைகளைச் செய்கிறான்.. அது யாரை மனதில் வைத்து எழுதப்பட்டதோ....😜


Thursday 8 August 2019

கடல்புரத்தில்



                            கடல்புரத்தில் - வண்ணநிலவன்




       கதைக்களம் மணப்பாடு என்று
தெரிந்தவுடன் இந்த நாவலை வாங்கிவிட்டேன். நமக்குக் கொஞ்சம் பரிட்சியமான  இடம்  என்பதால். இதுவும் சிறிய நாவல்தான். கதையில் வரும் ஊர்களான உவரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் என எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பழகிய இடங்களாக இருப்பது ஒருவிதமான நெருக்கத்தை நாவல் வாசிக்கும்போது கொடுக்கிறது. மீனவ குடும்பங்களின் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

மிக்கேல் குருஸினை அவரது மகன் செபஸ்தி, அவரின் வல்லம் மற்றும் வீட்டை விற்று விட்டு, ஆசிரியர் வேலை பார்க்கும் ஊரில் தன்னுடன் வந்தது இருக்குமாறு அழைக்கிறான். குருசுக்கு அதில் விருப்பம் இல்லை கடைசிவரை தன் வல்லத்தை விடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். கடைசி மகள் பிலோமியோ தன் தந்தைக்குப் பிடிக்காத லாஞ்சிகாரர் ஒருவரின் மகன் சாமிதாஸை காதலிக்கிறாள். தான் விரும்பும் சாமிதாஸ்வுடன் தனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை எனத்  தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பு கொண்டு ஒரு கட்டத்தில் தன்னையே இழந்தாலும்,  பின்பு அவனின் பலவினங்களை தன் தோழி ரஞ்சியின் உதவியினால் யதார்த்தமாக ஏற்றக் கொள்கிறாள். தோழி ரஞ்சி மற்றும் அவளது அண்ணன் செபஸ்தி  காதலும் நிறைவேறவில்லை அந்த காரணம் கதையில் சொல்லப்படவும் இல்லை. அந்த ஊரில் உள்ள வாத்திக்கும், தன் தாய் மாரியம்மைக்கும்  இடையேயான நட்பினால்  பிலோமி அந்த வாத்தியை வெறுக்கிறாள். ஆனால் குடிபோதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, ஒரு கட்டத்தில்  மன உளைச்சலில் இருக்கும் பிலோமிக்கு அந்த வாத்தியுடன் நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் பிலோமி நாளை வாத்தியின் வீட்டுக்கே போய்விடப் போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை நமது ஊகத்திற்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். 

நாவலில் கடற்கரை கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின்  (வல்லம் - லாஞ்ச்)  விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள், உரசல்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப உரையாடலாக உள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே ஆன பந்தம், வலத்தின் மீது அவர்களுக்கு உள்ள பாசம்  என அவர்களின் வாழ்க்கையைக் கண் முன்னே காட்டுகிறார். ஒரு சமயத்தில் தன் மனைவியைப் பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றொரு சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்கிடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்கு நாவலில் சில நெருடல்களும் தோன்றியது... மிக்கேலின் நண்பன் ஐசக் தன் மனைவியை விரட்டி விட்டு பிலோமியை அடைய நினைப்பது, ஒரு சூழ்நிலையில் மிக்கேலிடம் கையாளாக இருக்கும் சிலுவையடியான் அவள் மீது ஆசைப் படுவது. மேலும் பிலோமிக்கு தான் வெறுக்கும் வாத்தியுடன் நெருக்கமான நட்பு ஏற்படச் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு மிகவும் அழுத்தமானதாக  இல்லை. ஆண்களுக்கு உள்மனதில் தோன்றும் சலாப ஆசைகளைத்தான் ஆசிரியர் வெளிச்சம் படுத்தியுள்ளார் எனவும் சிலரின் கருத்து உள்ளது. 

இறுதியாக :

     இந்த நாவல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செந்தாமரை, சோ, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்து தொடராக வந்துள்ளது. எனக்கும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. மீண்டும் அதைப் பார்க்க வீடியோக்களை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை யாருக்காவது கிடைத்தால் தெரியப்படுத்தவும். 


Sunday 4 August 2019

கோபல்ல கிராமம்


               
          கோபல்ல கிராமம்  - கி. ராஜநாராயணன்



                 
   சிறந்த புத்தகங்களின் வரிசையில் மற்றும் ஒரு நாவல். மற்ற நாவல்களை ஒப்பிடும்போது சிறிய நாவல்தான்.  வாங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் என் சகோதரர் மூலமாகக் கிடைத்தது. இது ஒரு  கதைச் சொல்லி நாவல். வாசிக்கும்போது நமக்கு ஒரு தாத்தா, பாட்டி கதை சொல்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாவலிலும் முக்கால்வாசி கதையை 139 வயது மங்கயத்தாயரு என்ற பாட்டி சொல்வது போலவே வருகிறது.

தெலுங்கு மொழி பேசும் ஒரு பிரிவினரின் வீட்டுப் பெண்ணுக்கு அவர்களை ஆட்சி செய்யும் துலுக்க ராஜாவால் தொல்லைகள் வருகிறது. அந்த ராஜாவின் படைகளிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு தெற்கு நோக்கி புலம் பெய்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் வாழ ஏதுவாய் தோன்றும் ஒரு காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனை அழித்து  வசிப்பதற்கு ஏற்ற இடமாய் மாற்றுகிறார்கள். பசுக்கள் நிறைந்த இடமாக இருப்பதால் கோபல்ல கிராமம் எனப் பெயர் பெறுகிறது. கோட்டையார் குடும்பம் என்று அழைக்கப்படும் ஊரின் வசதியான குடும்பம் மற்ற மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவ்வூரில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கின்றனர். அங்கு வாழும் மக்கள் இயற்கையாலும், பின்பு வந்த ஆங்கிலேயராலும் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. 

ஆசிரியர் பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அறிமுகப் படுத்தும் போது அவர்களின் குணாதிசயங்களைச் சொன்ன விதம் மற்றும் வர்ணனைகள் கச்சிதம். அக்கையா பாத்திரம் செய்யும் குசும்புகள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. இது ஒரு முறை படித்து விட்டு வைத்து விடும் நாவல் அல்ல.. சில பக்கங்கள் நம்மை யோசிக்க வைக்கும்.. இது உண்மையா?? பொய்யா?? எனக் குழப்பவும் வைக்கும் ஆனாலும் திரும்பத் திரும்ப அலுப்பில்லாமல் ரசித்து வாசிக்கவல்ல ஒருவித பாண்டசி கலந்த காமெடிதான்.

இறுதியாக :
    
முதல் மரியாதை படத்தில் ஆற்றுக்குத் தண்ணீர் குடிக்க வரும் ரஞ்சனியின் காதில் உள்ள அணிகலன்களை பறித்து, கொல்லும் பொழுது அவனது  கால் கட்டை விரலை அவள் கடிக்கும் காட்சி இந்த நாவலிலிருந்துதான் எடுக்க (சுட) பட்டுள்ளது.
.