Friday 25 September 2020

அன்னா கரீனினா

 

            அன்னா கரீனினா  - லியோ டால்ஸ்டாய்


   எவ்வளவு நாட்கள்தான் உள்ளூர் நாவல்களையே தேடிப்பிடித்து வாசித்துக்கொண்டிருப்பது சற்று வெளியையும் சென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தினால் உலக இலக்கியத்தைத் தெரிந்தவர்களின் பேச்சில் சரளமாகப் புரளும் லியோ டால்ஸ்டாயின் உலகத்தின் மிகச்சிறந்த நாவலாகப் பெரும்பான்மையானவர்களால் கொண்டாடப்படும் அன்னா கரீனினா நாவலை வாங்கி விட்டேன்.  ஆனால் வாங்கிய பின் நாவலின் நீளம்தான் (மொத்தம் எட்டு பாகங்கள்) கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது அதனை வாசிக்கத் தொடங்க.... லியோ டால்ஸ்டாய் இந்த நாவலை 1873' ஆம் ருஷ்ய மொழியில் எழுத ஆரம்பித்துள்ளார். நான் வாசித்தது நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்பு.

    தனது சகோதரன் ஆப்லான்ஸ்கி மற்றும் அவரது மனைவி டாலிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்துவைக்க அன்னா பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மாஸ்கோ நகருக்கு வருகிறாள். அவளோடு இரயிலில் இராணுவத்தில் வேலை செய்யும் பிரபு விரான்ஸ்கியின் தாயாரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறாள். தாயை வரவேற்க வந்த விரான்ஸ்கியை அன்னா சந்திக்கிறாள். கண்களோடு கண்கள் பேசி ஒருவித ஈர்ப்பில் இருவரும் விழுகிறார்கள். டாலியின் சகோதரி கிட்டி மீது கொண்ட காதலால் கிராமத்திலிருந்து மாஸ்கோ வரும் லெவின் அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க அவளோ, அவளது தாயின் விருப்பத்தின்படி விரான்ஸ்கியை மணக்கும் நோக்கத்தோடு மறுத்து விடுகிறாள். ஆனால் விரான்ஸ்கியோ அன்னாவை பார்த்தபின் அவள் மீது கொண்ட மோகத்தால் கிட்டியை மறந்து அன்னாவை துரத்திக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் செல்லுகிறான். அன்னாவோ தனக்கு அரசாங்கத்தில் முக்கிய வேலையிருக்கும் கரீனின் என்பவருடன் திருமணமாகி எட்டு வயதில் செரோஷா என்ற மகனும் இருப்பதைக்  கூறி அவனிடமிருந்து விலகுகிறாள்.

          அன்னாவை விடாமல் துரத்தி அவளது மனதையும் கரைத்து அவளையும் அடைகிறான் விரான்ஸ்கி.  இதனால் கர்ப்பம் அடையும் அன்னா, கரீனினனிடம் அனைத்தையும் கூறித் தான் விரான்ஸ்கியோடு வாழ விவாகரத்து தருமாறு வேண்டுகிறாள். கரீனினனோ தன்னுடைய சமூக அந்தஸ்தைப் பறிகொடுத்து விடாமலிருக்க அவளை மன்னித்து ஏற்றக்கொள்வதாகக் கூறுகிறான். மகப்பேறு தொடர்பான கடுமையான காய்ச்சலில்  உடல் குன்றியிருக்கும் பொழுது அன்னா இறந்துவிடுவாள் என நினைத்து விரான்ஸ்கி தற்கொலைக்கு முயன்று தோற்கிறான். அதிலிருந்து மீளும்  விரான்ஸ்கி இராணுவத்தில் தனக்குக் கிடைக்கும் பதவி உயர்வைத் துறந்து அங்கிருந்து வெளியேறி அன்னாவுடன் வெளிநாடு செல்கிறான்.

          விரான்ஸ்கியால் நிராகரிக்கப்பட்ட கிட்டி  அதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறாள். அங்குக் கிடைக்கும் அனுபவங்களால் மனப்பக்குவமடைபவள் மீண்டும் ருஷ்யா வந்து தன் சகோதரி டாலியின் உதவியால் லெவினை மணக்கிறாள். வெளிநாட்டிலிருந்து மீண்டும் ருஷ்யா திரும்பும் விரான்ஸ்கி மற்றும் அன்னா ஒரு கிராமத்தில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அன்னவோ தன்னுடைய மகன் செரோஷாவை எண்ணி வாடுகிறாள். கரீனின் அவளுக்கு விவாகரத்து தர மறுக்க, அவளுடைய சமூக அங்கீகாரத்தை எண்ணி வருந்துகிறாள். அவளில் மனதில் அமைதி தேய்ந்தது கொண்டே வருகிறது. அதனால் அவள் மனதில் ஐயம் குடி கொண்டு விரான்ஸ்கி மீதும் நம்பிக்கை இழந்து சந்தேகிக்கிறாள். அனாவசியமாக விரான்ஸ்கி அவள் கட்டுப்படுத்த முயல அவர்களிடையே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் நிகழ்கிறது. அதுபோல் ஒரு சிறிய ஊடலுக்குப் பின் தன் தாயைப் பார்க்கச் சென்ற விரான்ஸ்கியை தொடரும் அன்னா உச்சக்கட்ட மனக்குழப்பத்தில் வெறுப்பின் உச்சத்தில் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவும் கூட. 

                   அன்னாவை மட்டுமே நாவல் முன்னிலைப் படுத்தாமல் லெவின், கிட்டியின் காதல் வாழ்வும் இணையாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் லெவினின் சகோதரர்களின் கிளைக்கதைகளும் உள்ளது. வெறும் காதல் கதையாக மட்டுமில்லாமல் கதை நகரும் தளத்தினை பயன்படுத்தி அன்றைய  மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் நகரங்கள், ருஷ்யாவின் கிராமங்களை கண்முன்னே நிறுத்துகிறார். அரசியல் சூழ்நிலை, நகர மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்திற்குள்ள வேறுபாடு, சமய நம்பிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என நாவல் அலசும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை. பெண்களின் நுட்பமான உணர்வுகளை, உணர்ச்சிகளை, அவர்களின் மனவோட்டங்களை டால்ஸ்டாய் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். கதையின் ஊடாக பயணிக்கும் லெவினின் பழக்க வழக்கங்களாக, கருத்துக்களாகத் தனது எண்ணங்களைப் பதிவுசெய்வதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆண், பெண்களின் உளவியலை நாவல் பேசினாலும் இன்னும் பல ஆண்டுகள் கடந்து யார் வாசித்தாலும் அவரின்  நெஞ்சையும் நெருடும். 

  நாவலின் பரந்த பின்னணி, நிகழ்வுகளின் விசாலமான சித்தரிப்பு, யதார்த்தமான உரையாடல்கள், கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை, விவாதிக்கும் சமூகப் பிரச்சினைகள் என லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் நிலையிலிருந்து விலகி அமரகாவியமாகிறது. குடும்பத்தில் தோன்றும் ஒரு சிறிய பிரச்சினை குடும்ப உறவுகளுக்கிடையே புயல், சூறாவளியெல்லாம் தோற்றுவித்து எவ்வாறு சின்னாபின்னமாக்குகிறது. டால்ஸ்டாய்  பேசும் மனித உறவுகள், மனித நேயம் அன்னா கரீனினாவை வாசிக்கும் அனைவரையும் முதல் வாசிப்பிலே கவரும்படி உள்ளது. வாசிப்பின்போது நீங்கள் அறிந்த, பழகிய மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் தோன்றலாம். காரணம் மனிதர்களின் குணநலன்கள், செயல்பாடுகள், உறவின் சிக்கல்கள்  பல நூற்றாண்டுகளைத் தாண்டியும், புவியியல் எல்லைகளைக் கடந்தும் இன்றும் மாறாமல் இருப்பதுதான். வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தவற விடாமல் கட்டாயம் வாசித்தனுபவிக்க வேண்டிய காவியம் அன்னா கரீனினா.  

        வாசித்து முடிக்கும் போது பொதுவாகப் பெரிய நாவல்கள் ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, கனத்த மனதை உண்டாக்கிவிடும். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றாய் பயணித்து, அவர்களின் வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்து விட்டு, சட்டென்று அவர்களைப் பிரிவதைப் போன்ற உணர்வின் விளைவாய் இருக்கலாம். அன்னா கரீனினா என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் விலக சில நாட்கள் என்ன?  சில வாரங்களே ஆகலாம். 

இறுதியாக :

     அன்னா கரீனாவை திரைப்படமாக இதுவரை  பத்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஆனால் எதுவுமே வெற்றி பெறவில்லையாம். டால்ஸ்டாயின் நயமிக்க இலக்கிய சுவையை, அழகான கவித்துவத்தை யாராலும் திரையில் முழு உணர்வுப்பூர்வமாகக் கொண்டு வர முடியாது என்பதே என் எண்ணம். 


Saturday 5 September 2020

சொ. க - 2. கனவு தேவதைகள்



                                         கனவு தேவதைகள்



யாரோ பலமாக அடித்தது போன்ற சத்தத்தைத் தொடர்ந்து  வெளியில்  மேகம் கூக்குரலோடு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தது...  நான் என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாரும் பார்க்கா வண்ணம் துடைத்துக்கொண்டே டிவியை ஆப் செய்தேன். இதயம் வலித்தது. ஜெயித்தது அக்காதான்... அதுவும் அவளுக்கும் இந்த வெற்றி மிகவும் தேவைப்பட்ட ஒன்று. கடைசி இரண்டு ஆண்டுகளாக எந்த முக்கிய போட்டிகளிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை... ஏன் அரையிறுதியைத் தாண்டியே முன்னேறிச் செல்லவில்லை.... கடவுளுக்கே தெரியும்.. நான் எனக்காக அவரிடம் வேண்டியதை விட அவளுக்காக வேண்டியதுதான் அதிகம்... எத்தனை பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்... ஆனாலும்... இப்பொழுது... எப்படி மனம் இடமாறியது.. நான் மட்டும்தான் இப்படியா??? எல்லோரும் இப்படித்தான் மாறிவிடுவார்களா?? அக்காவின் வெற்றியைக் கொண்டாட முடியாமல் தோற்றவளின் கண்ணீர் மனதைப் பிசைந்தது ஏன்?... எங்கே? எப்படி? எவ்வாறு அவள் என்னுள் நுழைந்தாள்... 

                                ------  xx  ------ xx -------

      டேய்... அவளைப் பாரு.... திருநெல்வேலிகாரன் பால்கனியிலிருந்து அலறினான்.. யாரைடா  பார்க்கச் சொல்லுகிறாய், என்று கூறியவாறே நான் பால்கனியில் நுழைய அதற்குள் "அதோ தலையில் வழுக்கை விழுந்த அவளைத்தான்" நாகர்கோயில்காரனின் கிண்டலான வார்த்தைகள் ஒலித்தது..  வந்து பார்த்த எனக்கு மயக்கம் வராத குறைதான்... How is it possible??? உலகத்தில் ஒருவரை மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்பார்களே... அது நிஜம்தானா... இல்லை அவளே இங்கு வந்துவிட்டாளா???  அவளின் ஏறு நெற்றியை ஏளனமாக எப்பொழுதும் பேசும் நாகர்கோயில்காரன், நல்லா பாருடா அந்த வழுக்கைத் தலை,  எடுப்பான பல், கலரு எல்லாம் அப்படியே நகல் எடுத்த மாதிரி இருக்கிறது. அதற்குள் நம்ம அவசரக்குடுக்கை திருச்சிக்காரன் வந்து யாருன்னு பார்த்து விசாரித்து வரவா எனக் கேட்க... அவனை திருநெல்வேலிகாரன் உள்ளே கூப்பிட்டுச் செய்த அர்ச்சனை வார்த்தைகளை இங்கே எழுதமுடியாது. 

                             ------  xx  ------ xx -------

        நாங்கள்  வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு எங்களின் இதர நண்பர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். நீளவாக்கில் இருந்த எங்கள் குடியிருப்பின் முடிவின் இருபக்கமும் ரோடு. ஒருபக்கம் அந்த நகரின் பிரபல இனிப்பு கடை+ ஹோட்டல். அதனையொட்டி மெயின் ரோடு. அடுத்தபக்கம்தான் எங்கள் பிளாட் மற்றும் பால்கனி... அதன் கீழே என்ன கடை தெரியுமா?.  நாங்கள் பையைக் கயிற்றில் கட்டி அனுப்பி வாங்க வசதியாக Wine Shop with Bar. அது பெரிய வீதியில்லை எனினும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்திருந்தன. கல்யாணமான நண்பர்களின்  மன வருத்தங்களைத் துரத்தும் புகலிடமாகவும், கல்யாணமாகாத நண்பர்களின் பார்ட்டி ஹாலாகவும் விளங்கியது எங்கள் வீடு. மாதக்கடைசியில் காலி பாட்டில்களை வைத்தே சிலபல முழு பாட்டில்களையே வாங்கிவிடலாம் எனில் பார்த்துக்கொள்ளுங்கள். 

                      ------  xx  ------ xx -------

     ண்பா... இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் மனதை எப்படியோ  மாற்றி ஏமாற்றிவிட்டான்.. ஏதாவது செய்யவேண்டும்??
"நிச்சயம் விடக்கூடாது டா...."
சாமி சத்தியமா..
"சத்தியமா... டா... "
நீயேச் சொல்லு.. சரி நான்தான் வேண்டாம் என்று வைத்துக்கொண்டாலும்... உனக்கு என்னடா குறைச்சல்..
"அதுவும் ரெண்டாம் தாரமாக அவனுக்கு... நினைத்தாலே வெறுப்பா, எரிச்சலா இருக்கு.."
ஆமா 😢....  அமலா... நம்ம அமலா டா...
"கவலைப்படாதே நண்பா ஏதாவது செய்து எப்படியும் திருமணத்தை நிறுத்திவிடுவோம்"
என்னடா செய்ய முடியும்... நாளைக்கு physics எக்ஸாம் வேறு இருக்கு ராஜ்....
"எக்ஸாம் எல்லாம் முடியட்டும்... போய் நாகர்ஜுனாவை வெட்டுகிறோம்... கல்யாணத்தை நிறுத்துகிறோம்...."
சூப்பர் ராஜ்..... வெட்டுகிறோம் அவனை... ஒரே வெட்டு.... ஒரே வெட்டு.......

டேய் என்னடா.... எழும்பு டா.... தூக்கத்தில் வெட்டு... வெட்டு என உளறிக்கிட்டு இதான் பகலில் தூங்காதே என்கிறது... என்னடா கனவு கண்டாய் என்றான் என்னைத் தட்டி எழுப்பிய நாகர்கோயில்காரன்.. 

                    ------  xx  ------ xx -------

              ல்லோருக்கும் நிச்சயமாக கனவு தேவதைகள் இருப்பார்கள். பலருக்கு அவ்வப்போது மாறிக்கொண்டும் சிலருக்கு மாறாமலும்... அவர்களுடன் நாம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கவும் செய்வோம். கனவு தேவதைகள் நம் மனதில் ஊடுருவி இதயத்திற்குள் எவ்வாறு குடியேறுகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.. அதுபோலத்தான் மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis). இதோ இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை எங்கே? எப்படி? எவ்வாறு அவள் என் மனதுக்குள்ளேயே நுழைந்தாள்... எதற்காக அவளை பார்க்கும் பொழுதெல்லாம் பட்டாம்பூச்சி பறப்பது போல் பரவசம் ஏற்படுகிறது. அன்னா கோர்னிகோவா (Anna Kournikova), சபாடினி (Gabriela Sabatini) போலப் பெரிய அழகெல்லாம் கிடையாது இருந்தாலும் அவள்தான் என் கனவு தேவதை. ஒரு மழைக்காலத்தில் அவள் தோற்று அழ, நான் கண்ணீர் வடித்த நிகழ்ச்சி நடந்தது 1999 French Open Final. ஜெயித்தது நான் அக்காவாக நினைக்கும் ஸ்டெப்பி கிராப்தான் (Steffi Graf)... பிற்காலத்தில் ஸ்டெப்பி அக்கா எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத அகசியை (Andre Agassi) திருமணம் செய்தது மற்றுமொரு அதிர்ச்சி. அந்தக் கதை இப்பொழுது வேண்டாம். 

                       ------  xx  ------ xx -------

       ப்படியே அவளை மாதிரியே அச்சி அசலாக இருக்காடா.... என்ற திருநெல்வேலிகாரனிடம், இதற்கு முன்பு இவளை இங்குப் பார்த்ததில்லையே எப்போது வந்தாள்? எந்த வீட்டிற்கு வந்துள்ளாள் டா எனக் கேட்டேன். அந்த பெண்ணை பற்றிய குழப்பத்திலே என் அறைக்குள் நுழைந்தவனைக் கட்டிலுக்கு நேர் எதிரே ஒட்டப்பட்டிருந்த ஹிங்கிஸ் முறைத்துப்பார்த்தாள். வழக்கம்போல் அடுத்தகட்ட நிகழ்வுகளைத் தீர்மானிக்கக் கூட்டம் கூட்டப்பட்டது. "நீங்கள் எப்படியும் போங்கள்" நாகர்கோயில்காரன் விலக்கிக்கொள்ள எங்களுக்குக் கொஞ்சம் உள்ளூர சந்தோஷம்தான். போனமுறை மாதிரி சொதப்பி விடக்கூடாது எனச் திருச்சிக்காரனை எச்சரித்துவிட்டு அவளைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது பற்றி யோசிக்கும் பொழுது அவன் சொன்னான் முதலில் அவள் யாருக்கு என முடிவு செய்துவிடுவோம். நான் திரும்பி மிகுந்த கோபத்தில் அவனை உற்று நோக்க நிலைமையை உணர்ந்து கொண்ட திருநெல்வேலிக்காரன், இதில் என்ன சந்தேகம் அவள் பார்க்க ஹிங்கிஸ் மாதிரியிருப்பதால் நாம் விலக்கிக் கொள்வதுதான் சரி எனத் திருச்சிக்காரனைப் பார்த்துக்கூறினான். 

                  ------  xx  ------ xx -------

     ங்கள் வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது... விடிய விடியக் கொண்டாட்டம். என் பிறந்தநாள்.... அதற்கான சிறப்பு விருந்துக்குப் பல நண்பர்கள் குவிய கேக்  வெட்டிய பின்... Sony five CD Exchanger அதிரப்பாட்டு, நடனம், கண்ணாடி குவளைகளின் சத்தம் ஒரே கும்மாளம்தான். ஹிங்கிஸ் படம் போட்ட, ஒட்டிய பல Greeting Cards.....  இதனிடையே போன வாரம் எதிர் apartment வீட்டுப் பெண்ணை பற்றி கொஞ்சம் விசாரித்தும் விட்டோம்.. ஒரு கம்பெனியில் வேலை செய்வதாகவும் தனியாகத்தான் இங்கு வீடு எடுத்துத் தங்கியிருப்பதாகவும் தெரிந்தவந்தது. திருச்சிக்காரன்தான் இது நீ ஹிங்கிஸ்க்கு செய்யும் துரோகம்... அவளை விட்டுவிட்டு அவளை மாதிரியே இருக்கும் பெண்ணை பார்ப்பது தவறு, அநியாயம் எனப் புலம்பிக்கொண்டிருந்தான். பார்ட்டிக்கு வந்த நண்பர்களுக்கெல்லாம் அவளைப் பெருமையாக, இறுமாப்புடன் காட்டினேன். இனி அவளைப் பார்த்துப் பேசி அடுத்துக்கட்ட நடவடிக்கைகளுக்குப் போகுமாறு உற்சாக பானம் தந்த உற்சாகத்தில் அவர்கள் கத்தினார்கள். Second shift பார்த்து விட்டு பார்ட்டிக்கு தாமதமாக வந்த திருச்சிக்காரன் என்னை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே திருநெல்வேலிகாரனிடம் எப்பா "நம்ம ஹிங்கிஸ் வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்கப்பா" என்றான் நக்கலான தோணியில்.... 

                           ------  xx  ------ xx -------

       மெல்லிய குளிர் காற்று என் உடலை வருடிச்சென்றது. எங்கும் பச்சைப்பசேல் எனப் புல்வெளி.. டார்க் சாக்லேட்டை ஒரு கடி கடித்துவிட்டு யார் முதலில் ஆரம்பிப்பது என்றவளிடம் நீயே ஆரம்பி எனப் பந்தைத் தூக்கிப்போட்டேன். லவ் ஆல்.... என சர்வீஸ் செய்தவளைப் பார்த்து ... நோ... நோ... ஒன்லி லவ் மீ எனச் சிரித்துக்கொண்டே சொல்லி பந்தை டென்னிஸ் ராக்கெட்டால் திருப்பி அடித்தேன்.  
Come On...... Super shot ...... 

இவன் பக்கத்தில் தூங்குவதே இம்சைதான் போல.... ஏன்டா என்னை அடிக்கிறாய்... எதிர்வீட்டுக்காரிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது எனச் சொன்னதுடனே உன் மூஞ்சி போன போக்கே சரியில்லையே... எழும்புடா... ஆபீஸ் போக வேண்டும்.....நாகர்கோயில்காரனின் சத்தம். 

             அடப்பாவி... அப்போ இவ்வளவு நேரம் கனவில்தான் ஹிங்கிஸ் கூட டென்னிஸ் விளையாடினோமா???  இரவு திருச்சிக்காரன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்து நெஞ்சை முள்ளாய் குத்தியது.... எதிர்வீட்டில்  இருப்பவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.  புதிய வேலை கிடைத்ததால் அவள் அதில் சேர முதலில் வந்துள்ளாள். பேங்க்கில் வேலை பார்க்கும் அவளது கணவனுக்கு இப்பொழுதுதான் மாறுதல் கிடைக்கக் குழந்தையோடு இன்று வந்துள்ளான்.  இதைச் சொன்னதுடன் பார்டியின் போக்கே மாறிவிட்டது.... என்ன உற்சாகமாக அருந்தியவர்கள்... அதன்பின் சோகமாக அருந்தினார்கள்...   சிலர் என் மனத்தேற்ற இன்னமும் முயற்சிகளாம் டா... அதுத் தப்பில்லை என (அ)நியாயம் பேசினார்கள்... நான் அவர்களுக்குச் சொன்னதெல்லாம் அமலாவுக்காக, நாகர்ஜுனா செய்ததைத் தவறு என்று சொன்ன நியாயவாதிகள் நாங்கள்😎.. கடவுளாகப் பார்த்து நான் ஹிங்கிஸ்க்கு செய்யவிருந்த துரோகத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்😛... 

       
                        ல்லாம் சோகமாக... சுகமாக முடிந்து ஒரு வாரம் இருக்கும்... எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தோம்.... டேய் டேய்... சேனலை மாத்தாதே.... சின்ன பெண்ணா அழகா இருக்காளே இவள் யாருடா...

லைலா.... டா உனக்குத் தெரியாதா.... 

ஓ... இது நம்ம லைலாவா😍......   கண்களில் மின்னல் தோன்ற முகம் மலர்ந்த என்னை  மூவரும் முறைத்தார்கள்...


இறுதியாக:

முதல் கதைக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பு 😄 இரண்டாவது கதையையும் எழுதலாம் என்கின்ற நம்பிக்கையைக் கொடுத்தது. பலர் அடுத்த கதை எப்பொழுது வெளிவரும் எனப் பலமுறை கேட்கவும் செய்தார்கள். மீண்டும் கூறுகிறேன் சிறிது காத்திருங்கள் மீண்டுமொரு தேவதை நிச்சயம் வருவாள் 💝.


சொ. க - 1. பால்கனி தேவதைகள்  வாசிக்க கிளிக் செய்யவும்