Wednesday 17 July 2019

சேப்பியன்ஸ்



                                              சேப்பியன்ஸ் 
    மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு


                   

 கொஞ்சக் காலமாக சமுக நாவல்களாகப் படித்துக்  கொண்டிருந்ததால் மாற்றத்திற்காக வரலாற்றின் பக்கம். யுவால் நோவா ஹராரி எழுதிய இந்த புத்தகத்தை ஒரு விமர்சனம் மூலமாகத்  தெரிந்த உடனே வாங்கிய வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

  இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த விஷயங்களைத் தொகுத்து எழுத, எவ்வளவு ஆராய்ச்சி மற்றும் வாசிப்பு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது.

 மனிதக்குலத்தின் வரலாற்றை நான்கு தொகுதிகளாக ஆசிரியர் பிரித்துள்ளார்.  1.அறிவு  புரட்சி, 2.வேளாண் புரட்சி, 3.மனிதக் குல ஒருங்கிணைப்பு,  4.அறிவியல் புரட்சி.


 இப்பொழுது மட்டும் அல்ல... அறிவு புரட்சி தோன்றிய நாள் முதலே, அதாவது சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்னாலே மனிதர்கள் இயற்கையையும், மற்ற உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் சோகம்.  நெருப்பைப் பயன் படுத்த ஆரம்பித்த உடனே மனிதன் Food Chain லில் மற்ற உயிரினங்களை எல்லாம் தாண்டி முதல் இடம் வந்து விட்டான்.

நாம் வேளாண் புரட்சி பத்தி பெருமையா பேசிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் ஆசிரியர் வேளாண் புரட்சி மக்கள்தொகை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதற்கும், சொகுசான மேட்டுக்குடியினர் என்ற ஒரு புதிய பிரிவு உருவாவதற்கும் மட்டுமே அது வழிவகுத்தது என்கிறார்.

வம்பு (Gossip) பேசுவதில் நம்மிடம் இருந்த  ஆர்வம்தான் மொழிகள் உருவாகக் காரணம் என விளக்கமாக சொல்லியிருப்பது ஆச்சரியத்தை அளித்தது. பேரரசுகள் மற்றும் மதங்கள் உருவாக்கப்பட்டதே மனிதக் குல ஒருங்கிணைப்புக்குத் தான் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். ஒருங்கிணைக்கத் தோற்றுவிக்கப் பட்ட மதங்கள் இப்பொழுது மனிதக்குலத்தைப் பிளவு படுத்துவதுதான் மிகவும் வேதனை.

ஐரோப்பிய நாட்டினருக்கு முன்பே, பல நாட்டினர் கடல் வழி பயன்களை மேற்கொண்டு உள்ளனர் ஆனால் அவர்களின் நோக்கம் செல்லும் இடங்களை வெற்றி பெற்று செல்வங்களை எடுத்துச் செல்வதுதாக இருந்தது. 

ஆனால் ஐரோப்பியர்கள் அவர்களது பயணத்தில் ஆய்வுக் குழுக்களையும், அழைத்துச்சென்றனர். ஆய்வு செய்தல் (Discovery Concept) பிறகு வெற்றி கொள்ளுதல்... அவர்களின் ஆக்கிரமிப்புகளால் எவ்வாறு பூர்விகவாசிகள் பாதிக்க மற்றும் அழிக்கப்பட்டனர் என்பதைப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது.

Time Zone எப்படித் தொடங்கியது, முதலாளித்துவம் எப்படி நம் வாழ்க்கை முறையினை  மாற்றி உள்ளது... என்பதையெல்லாம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. 

மனிதர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் கூறியுள்ளார். சூப்பர் மனிதர்கள் தோன்றலாம்.  அவர்கள் நம்மை விட மிகவும் திறமைசாலியாக (Well Advanced) இருக்கலாம். அதற்கு ஆசிரியர் சொல்லும் காரணங்களைப் பார்க்கும்போது நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் நீங்கள் வாசித்தால் மட்டுமே முழுமையாக  உணரமுடியும்.

இறுதியாக : 


முக்கியத்துவம் இல்லாத ஒரு விலங்காகத் தோன்றிய மனிதன் எப்படி படிப்படியாக வெவ்வேறு புரட்சிகள் மூலமாகத் தவிர்க்க முடியாத முதல் உயிரினமாக மாறினான் என்பதை விளக்குகிறது.  நான் வாசித்த புத்தகங்களில் ஒரு சிறந்த புத்தகம் எனக் கூறுவேன். எல்லோரும்  வாசிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்வேன்.

                   

2 comments:

  1. மிக அருமை 👌

    ReplyDelete
  2. மனிதகுல வரலாற்றை சிறப்பாக விளக்குகிறது. வரலாற்றை தெரிந்துக் கொள்ள விரும்பும் மக்களுக்கான புத்தகம்.

    ReplyDelete