Monday 22 July 2019

தலைமுறைகள்



                        தலைமுறைகள் - நீல பத்மநாதன்





     மீண்டும் ஒரு வட்டார வழக்கு மொழியில் வந்த நாவல். பலரின் சிறந்த நாவல்களின் பட்டியலில் இருக்கும் நாவல். குமரி மாவட்ட வட்டார வழக்கு என்பதால் எனக்குக் கொஞ்சம் எளிதாக வாசிக்க முடிந்தது, இதர இத்தகைய நாவல்களை ஒப்பிடும்போது. 

1968'ல் வெளிவந்த இந்த நாவல் செட்டியார் சமூகத்தைத் சேர்ந்த திரவியம் குழந்தையில்லாதக் காரணத்தால் கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட  தன் சகோதரியை மீண்டும் குடும்ப வாழ்வில் இணைக்க முயல்வதுதான் கதை. இதை நாவலாகச் சமூகத்தில் நடைபெறும் சடங்குகள்விசேஷங்கள் மூலமாக மிகவும் லாவலாக நகர்த்தி உள்ளார்.


 அந்த காலத்தில் நடந்த திருமணம்பெண் பெரியவளானதும் நடக்கும் சடங்குவளைகாப்புஇறந்த வீட்டுச் சடங்குகள்  போன்ற அனைத்து விசேஷங்கள் மற்றும் அதனையொட்டிய நடக்கும் சடங்குகள் அதனால் சராசரி குடும்பத்தலைவன் அடைந்த கஷ்டங்கள் விரிவாகவும், சுவையாகவும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான கதாபாத்திரங்கள் இருப்பதால் முதலில் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகள் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் போகப் போக அனைத்து பாத்திரங்களும் நன்கு பரிசம் ஆகிவிடுகிறது. மேலும் ஒவ்வொரு பாத்திரங்களின் குணங்களும் வெவ்வேறாக இருப்பதும், நாம் பார்த்துப் பழகியதுமாக இருப்பதும் நம்மை கதையுடம் ஒன்றி விடச் செய்கிறது. 

அந்தக்காலத்தில் சாதி மீது தாக்கம் கொண்ட கட்டுக்கோப்பான ஊரில் தன் அக்காவுக்கு மறுமணம் செய்யத் திரவியம் முயற்சி செய்வதை எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் சொல்லுகிறார். திரவியம் தன் அப்பா கடைமைகளைச் செய்யப் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படும் போதும், தன் அக்காவின் நிலையை எண்ணித் தவிர்ப்பதும்  வாழ்க்கையின் யதார்த்த நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பொதுவாக இலக்கியப் படைப்புகளில் கதை மையம் அல்லது கதை சொல்லி அறிவாளியாகவோ, மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப் படுவதே வழக்கம்.  காரணம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே. ஆனால் திரவியம் மிகச் சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான். நடுத்தரவர்க்கத்துக்கே உரிய எல்லா கோழைத்தனங்களும், தயக்கங்களுள்ள ஒருவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் புரட்சியாளனோ கலகக்காரனோ அல்ல. அவன் சற்று படித்து அதன் மூலம் நவீனக் காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம். இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மை தெரிகிறது. 

கதையின் முடிவுதான் டக் என முடிந்தது போல இருக்கிறது.. நான் கொஞ்சம் கூட எதிர்பாராத முடிவுதான். கிளைமாக்ஸ்தான் நாவலின் பலவீனமான பகுதி என ஒரு விமர்சனமும் உள்ளது. 


இறுதியாக :

  இந்த கதையை  கௌதம் இயக்கி, நடித்து 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. You Tube 'ல் கொஞ்சம் பார்த்தேன்.. மேலும் அதை பற்றி சொல்லுவதுக்கு ஒன்றுமில்லை மக்கா ...

          

1 comment: