Wednesday 27 November 2019

வேதபுரத்து வியாபாரிகள்



                  வேதபுரத்து வியாபாரிகள் 
                                     - இந்திரா பார்த்தசாரதி



இந்திரா பார்த்தசாரதி எழுதிய எதாவது ஒரு நாவலைப் படிக்கலாம் என நினைத்து இந்த நாவலை வாங்க ஆர்டர் செய்தேன் ஆனால் ஸ்டாக் இல்லாததால் கிடைக்கவில்லை. கடைசியில் எங்களது வீட்டிலேயே (பெற்றோர்கள்) நாவல் இருந்தது. கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல்.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் வசிக்கும் வேதபுரத்தை மூலமாகக் கொண்ட அபூர்வா என்கிற பெண்ணொருத்தி தன் தாய் நாடான வேதபுரத்துக்கு வருகிறாள். அங்கு உள்ள மக்களுடன் பழகி அந்த நாட்டை பற்றி புத்தகம் எழுதும் நோக்கத்துடன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் அவளுடைய நோக்கத்தை எப்படி திசை திருப்பி அவளை அரசியலில் தள்ளி, தலைவி ஆக்கியது என்பதுதான் கதை.

ஏதோ சுவாரசியமான கற்பனை கதை என நினைத்து விடாதீர்கள். ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல. கதை எழுதிய காலகட்டமான 1994-95  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடந்த ஆட்சியின் அலங்கோலங்களைத்தான் கிண்டல் கலந்த நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஆசிரியர் அமெரிக்கா, தமிழ்நாடு, இந்தியா எனக் குறிப்பிடவில்லை எனினும்  வேதபுரம் - தமிழ்நாடு, இந்திரப்பிரஸ்தம் - இந்தியா என எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என ஆசிரியர் கூறினாலும், நமக்கு அவர் கிண்டல் செய்யும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. பல உதாரணங்களை நான் எழுத நினைத்தேன் ஆனால் அந்த நையாண்டி கலந்த வரிகளை நீங்களே வாசித்தால்தான் மிகவும் ரசிக்க முடியும்.

இறுதியாக :

 இந்த மாதிரியான நாவல்களுக்கே உரியப் பிரச்சினைதான் இதிலும் உள்ளது. நாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான். ஏனெனில் நிஜக் கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அல்லது அந்த பிரச்சினைகளுக்கு ஆசிரியரால் தீர்வுகளைத் தந்தோ முடிக்கமுடியாது. என்ன நாவலில் நையாண்டியாகச் சொல்லப்பட்ட  பல செயல்கள் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

      

1 comment:

  1. இதுபோல் குறிப்பிட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் (current affairs) எக்காலத்திலும் வாசிப்பவர்கள் ரசிக்கும்படி எழுதுவது ஒரு கலை. இந்த நாவல் அந்த வகையில் அமைந்த நாவலல்ல. 1992-96 அரசியல் பற்றி தெரியாதவர்கள் இதனை வாசித்தால் எவ்வளவு தூரம் புரிந்து அதனுடன் பயணிப்பார்கள் என்பது சந்தேகமே.

    ReplyDelete