வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம்
வேரில் பழுத்த பலா:
மத்திய அரசின் அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யும் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரியும் சரவணன் தரம் குறைந்த பொருட்களைக் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபட்ட தன் அலுவலர்களைக் கட்டுப்படுத்த முயல்கிறான். அலுவலகத்தையும், அலுவலர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கான்ட்ராக்டர் செளரிராஜன் தரும் நெருக்கடிகளை, சுற்றி நடக்கும் சதிகளை எதிர்கொள்வதுதான் நாவலின் சாராம்சம். சரவணனின் அம்மா, அண்ணி மற்றும் தங்கையின் பாத்திரப்படைப்பு யதார்த்தம். அலுவலகத்தில் அவனுக்கு உதவிகள் செய்து இறுதியில் காதல் வயப்படும் அன்னம் தனித்துத் தெரிகிறாள்.
அடித்தட்டில் வாழும் மக்களின் அவலங்களில் ஒன்றாக, அவர்கள் படித்து மேலுயுயர்ந்து வந்தாலும் வேலைத்தளங்களிலும், சமூகச் சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய உளவியல் எண்ணங்களைப் புலப்படுத்தினாலும் சாதிய போக்கு வேறுபாடுகளைப் பேசும் கதையில் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் ஒரே சாதியாகச் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சம் நெருடல். அரசு அலுவலகங்களில் நேர்மைக்கு என்ன விலை, நீதியின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது, அலுவலகங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை என்ன என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
ஒரு நாள் போதுமா:
வேலுவும் அவன் மனைவி அன்னவடிவும் பிழைப்பு தேடி கிராமத்தை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். சித்தாள் வேலை செய்யும் தாயம்மாள் உதவியால் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள். சிமென்ட் மூட்டை பாரத்தை அதிகமாக அவன் மீது கான்ட்ராக்டர் ஏற்றிவிட அதனால் உயிரை இழக்கிறான். அதற்காக நியாயம் கேட்டு போராட்டத்தை அன்னவடிவு வீரத்தோடு முன்னிறுத்துகிறாள்.
அதிகாரவர்க்கத்தினரால் பாட்டாளி மக்கள் எவ்வாறெல்லாம் நசுக்கப் படுகிறார்கள் அவர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை சு. சமுத்திரம் பதிவு செய்கிறார். மழைத் தவறி தண்ணீர் இல்லையெனில் முதலில் பாதிக்கப்படுவது விவசாயி அல்ல விவசாய கூலிதான். கட்டிட மற்றும் அன்றாட கூலிகளின் நிரந்தரமில்லா வேலை நிலைமைகளையும், அவர்களின் பொருளில்லா வாழ்வின் அவல நிலைமையையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்களின் எந்த அடிப்படை வசதியும் இல்லாத வாழ்வியல் பகுதிகள், தகுந்த இழப்பீடுகளைக் கொடுக்காமல் மூடி மறைக்க நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சக தன்மைகளுக்குப் போராட்டமே தீர்வு என்கிறார்.
இரண்டு குறுநாவல்களுமே வாசிப்பதற்கு எளிமையாக எழுதப்பட்டவைதான். அதனால் பெரிய இலக்கியத்தை வாசித்த பிரமிப்பை தரவில்லை எனினும் அவை அலசி பேசும் விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
இறுதியாக :
சாகித்ய அகாடமி விருதை இந்நாவல் கொடுத்தற்காகப் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது நாவல் மீதும் சு. சமுத்திரம் மீதும். வணிக எழுத்தாளர்களின் நாவல்கள் வாசிக்க எளிமையாக இருந்தால் அதை சில பக்கங்களை வசிப்பதற்குள்ளே எப்படி இலக்கியவாதிகளுக்குப் போர் அடிக்குமோ, அது போல் நேரிடையாகச் சொன்னாலே குழம்பிவிடும் தத்துவங்களை எளிமையான தர்க்கக் கட்டமைப்பில் சொல்லாமல், கவித்துவமான இலக்கிய நடையில் குறியீடுகளைக் கொண்டு விரித்துரைப்பது மற்றவர்களுக்குப் போர் அடிக்கலாம். அதனால் விருதுகள் எல்லோருக்கும் செல்லலாம்.
அருமையான பதிவு... நாவலின் விமர்சனம் மட்டும் அல்ல இறுதிப் பகுதியும்தான்.
ReplyDeleteSuper bro super
ReplyDelete