Thursday 10 December 2020

பாண்டியன் மகள்

 

                   பாண்டியன் மகள் -  விஷ்வக்சேனன்

     

     கல்கி வார இதழின் பொன்விழா பரிசுப் போட்டியில் 1993'ஆம் ஆண்டு முதல் பரிசு வென்ற சரித்திர நாவல் விஷ்வக்சேனன் எழுதிய பாண்டியன் மகள். எனது அன்னை வாசித்து விட்டு பரிந்துரையும் செய்ததால் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.

          பாண்டியன் மகள் என்று நாவலின் பெயர் இருந்தாலும் சோழர்களின் வீரத்தை, புகழைப் பாடும் மற்றுமொரு நாவல்தான். நாவலின் கதைக்களம் இராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்க சோழன் அரியணையேறிய காலம். குலோத்துங்க சோழன் வடக்கே சாளுக்கியர்களை எதிர்த்துப் போர்புரியப் பெரும்படையுடன் செல்ல அந்த சூழ்நிலையையே சாதகமாகப் பயன்படுத்தி பாண்டியன் மார்த்தாண்டன் மதுரையை மீண்டும் கைப்பற்றி தன் மருமகன் மாறவர்மனை அரியணையில் ஏற்ற முயற்சி செய்கிறான். இத்திட்டத்திற்குப் பிரிந்தது கிடக்கும் பாண்டியர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பதுடன், சேர மற்றும் ஈழ மன்னர்களிடமும் படை உதவி கேட்கிறான். போரில் வென்றால் மாறவர்மனுக்கு ஈழத்து இளவரசி அஞ்சனாதேவியை மணமுடித்து பாண்டிய நாட்டில் தங்களது செல்வாக்கு நிலைநாட்டலாம் என ஈழ மன்னனும், வென்றால் தங்களுக்குக் கிடைக்கும் நிலப்பகுதிகளுக்காகச் சேர மன்னனும் சம்மதிக்கிறார்கள்.

                         சேர இளவரசி அம்மங்கை தேவியை கடத்தி சென்று மேலைமங்கல கோட்டையில் அடைக்கிறான் மாறவர்மன். ஒரே இரவில் இளவரசியை மீட்டு மேலைமங்கல கோட்டையையும் கைப்பற்றுகிறான் கவி நாராயண பட்டரின் சீடன் அரையன் மதுராந்தகன். இதனால் சோழ இளவல் விக்கிரமனின் நட்பையும் அம்மங்கையின் காதலையும் பெறுகிறான். அதன்பின் பொதிகைக்கு வரும் அரையன் அங்கு ஜடாவர்மா பாண்டியனின் மகள் கயல்விழியை மீட்டு சோழ நாட்டிற்கு அனுப்பி விட்டுச் சேர நாட்டின் விழிஞ்சம் கடற்படைத் தளத்திற்குச் சேர ஒற்றன் சமுத்திரபந்தன் என்னும் மாறுவேடத்தில் செல்கிறான். பாண்டியன் மகளைப் பற்றிய ரகசியங்களை சேரலாதன், ஈழத்து தண்டநாயகன்,  இளவரசி அஞ்சனாதேவியிடம் கூறி பாண்டியர்களுக்கு உதவி செய்வதில் தயக்கமேற்பட வைக்கிறான். சில காலத்திற்கு முன்பு மார்த்தாண்டனின் துரோகத்தால் ஜடாவர்மா பாண்டியன் கொல்லப்பட அரசி மங்கையையர்கரசியை,  நாராயண பட்டர் காப்பாற்றிப் பாதுகாப்பு கொடுக்கிறார். சிறுமி கயல்விழியை ஓர் சேர படைத்தலைவன் தூக்கிச்சென்று அவள் யாரென்ற உண்மையைச் சொல்லாமலே வளர்க்கிறான்.

                          குலோத்துங்க மன்னனைச் சந்திக்கச் சோழ ஒற்றன் ஜெயந்தனுடன் செல்லும் அரையன் மதுராந்தகன் வழியில் நவிலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சோழ இரண்டாவது இளவல் ராஜராஜனை சாளுக்கிய ஜெயதுங்கனுடன் வாட்போரிட்டு வென்று மீட்கிறான். இதனிடையே மாறவர்மனிடம் நம்பிக்கை இழக்கும் ஈழத்து இளவரசன் பராக்கிரமபாகு, கொங்குப்பாண்டிய இளவல் குலசேகரனை மதுரை அரியணையில் அமர வைத்து அஞ்சனாதேவியை மணமுடித்து  வைக்கச் சதித்திட்டம் ஈடுகிறான். மதுரை அரியணையனைக்கு உரிமையுடைய பாண்டிய இளவரசி கயல்விழியைக் கொல்ல மதுரைக்கு வரும் ஈழத்து மார்க்கீயன், பாண்டிய மார்த்தாண்டனிடமிருந்து  காப்பாற்றிப் பாதுகாப்பு தரும் விக்கிரமன் மீது அவள் காதல் கொள்கிறாள். குலோத்துங்கனின் அன்புக்குப் பாத்திரமாகும் அரையனின் போர் வியூகங்களால் பாண்டியர்கள் மற்றும் அவர்களின் நேசப்படைகள் எவ்வாறு ஒடுக்கப்பட்டது.   அம்மங்கை மற்றும் கயல்விழியின் காதல் கை கூடியதா என்பதே நாவலில் சுகமான முடிவு. 

                              எல்லா சரித்திர ( மன்னர்களைப் பற்றிய) நாவலைப் போலத்தான் இதிலும் கதாநாயகனே அனைத்தையும் அறிந்தவன். அவனது வீரம், மதிநுட்பம் எல்லோராலும் போற்றி புகழப்படும். எங்குப் பிரச்சினை தோன்றினாலும் அவன் அங்கு வந்து தனியொருவனாக அதனை முறியடிப்பான். கல்கி மற்றும் சாண்டில்யனின் பாணிகளைக் கலந்து சுவாரசியமாகப் பாண்டியன் மகள் நாவலை விஷ்வக்சேனன் படைத்துள்ளார். பொதுவாகச் சரித்திர நாவலுக்கென்றே சில எழுதப்படாத விதிகள் உள்ளன. மிக அழகான ராஜகுமாரிகள் அவர்களைப்பற்றிய வருணிப்புகள், எதிரிகளை எளிதில் மாறுவேடம் பூண்டு ஏமாற்றி விடும் ஒற்றர்கள், யவன வியாபாரிகள், பாண்டிய/சோழர்களின் வீரம் இவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமெனில் உங்களுக்கான நாவல்தான் இந்த பாண்டியன் மகள். 

இறுதியாக :

         பாண்டியன் மகளைத் தவிர இன்னும் சில சரித்திர நாவல்களையும் விஷ்வக்சேனன் எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்திர தனுசு நாவலையும் எங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். ஆனால் சரித்திரத்தை மட்டுமே பேசாதே இதுபோன்ற நாவல்கள் என்னை இப்போதெல்லாம் மிகவும் கவர்வதில்லை. ஆதலால் அந்த நாவலை இப்போதைக்கு வாசிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.              


3 comments:

  1. வாசிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தபின் இது போன்ற நாவல்கள் போரடிக்கத்தான் செய்யும். ஆனால் என்ன அவ்வப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வாசிக்க இவை உதவும்.

    ReplyDelete
  2. Great review as always! May be time read Subha and Balakumaran stories to spice it up

    ReplyDelete