Thursday, 22 April 2021

உடையார்

 

                           உடையார் - பாலகுமாரன்

 

                பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை வாசிக்க சில நண்பர்களும், நாவலைக் கொடுத்து எனது சகோதரரும் பரிந்துரைத்தார்கள். ஆறு பாகங்களுடன்  (புத்தகங்கள்) சுமார் 2600 பக்கங்களைக் கொண்ட பெரிய நாவல். ஒரு வார இதழில் முதலிரண்டு பாகங்களை எழுதியுள்ளார். சில காரணங்களால் அவர்கள் நாவலைத் தொடர மறுக்க, இதர பாகங்களைத் தனிப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.  நாவலின் பிரமாண்டம்தான் வாசிப்பைத் தொடங்க பெரிய தயக்கத்தைத் தந்தது. இறுதியில் வாசிக்கத் தொடங்கி விட்டேன். நான் வாசித்து முடிக்கச் சிறிது அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுதான். ஆனால் அதற்குக் காரணம் நாவலின் நீளம் மட்டுமே  அல்ல..

              இராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார், அதில்  அவர் சந்தித்த சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு முறியடித்தார் என்பதுதான் நாவலின் மையக்கரு. நாவலின் பலமே பாலகுமாரனின் வசனங்கள் தான். அதுவும் உறவுகள் குறித்து கதாபாத்திரங்கள் பேசும், விவாதிக்கும் வார்த்தைகள் அனைத்தும் எக்காலத்திலும் ஏற்ற வகையில் உள்ளது. மன்னரைப் பற்றி மட்டுமே பேசாமல் அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறுபட்ட குடிமக்களையும், கோவில் கட்டுமானத்தில் பங்கேற்று உறுதுணையாக இருந்த பலதரப்பட்ட சமூகத்தினரின் பங்கையும் அவர்களிடையே இருந்த மோதல்களையும் பாலகுமாரன் நம் கண்முன்னே காட்டிவிடுகிறார் அவரின் எழுத்துக்களால்.

            செம்பியன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, இராஜராஜீ, சீருடையாள், பரவை நாச்சியார், குமுதினி, குந்தவை, கரிய மாணிக்கம், எச்சுமண்டை, உமையாள், குந்தவை (இராஜராஜனின் மகள்), மாதேவடியார், முத்தான பொன் நங்கை, அம்மங்கை, கடுவன்காரி, கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்மொழி, மலையனுர் சாம்பான்,  வந்தியத்தேவன், விமலாதித்தன், கருவூர்த்தேவர், ஈசான சிவபண்டிதர், ராஜராஜ பெருந்தச்சர், நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையன், சீராளன், சாவூர் பரஞ்ஜோதி, வைணவதாசன், குணசீலன், வீணை ஆதிச்சன், பரசு நம்பூதிரி, தொண்டை நாட்டு அந்தணர்கள் இப்படிப் பல கதாபாத்திரங்களை வடிவமைக்கப் பல பக்கங்களை ஒதுக்கி தேவரடியார்கள், அதிகாரிச்சிகள், ஒற்றர்கள், கருமார்கள், அந்தணர்கள், மெய்க்காவல் படை வீரர்கள், வேளாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என எல்லோரைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவதின் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையையும் சொல்லுகிறார்.

                    கோவிலைக் கட்டுவதற்கான மண்டப வரைபடங்களைக் கொண்டுவரும் தேவரடியார் இராஜராஜீயின் வண்டி காவிரி ஆற்றின் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ள அதனை மீட்கும் படலத்துடன் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது நாவல். அந்த காலத்தில் இவ்வளவு உயரமான கோவிலைக் கட்ட மன்னருக்குத் தோன்றியது என்பதே வியப்புதான்.  அதனை மக்கள் எப்படியெல்லாம் எதிர் கொண்டிருப்பார்கள், பேசியிருப்பார்கள், அவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும், என்னென்ன குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும், அரசன் எப்படி இருந்திருப்பான் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பங்கு என நிறைய விபரங்களை விரிவாகவும் எளிதாகவும் சொல்லியுள்ளார். நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் எல்லாம் இந்தியக்கண்டத்தைச் சேராத அல்லது வேற்று மத மன்னர்களின் படையெடுப்பை மட்டும் பெரும் படையுடன் வந்து கொள்ளையடித்துச் சென்றார்கள் என எழுதியிருப்பார்கள். ஆனால் அக்காலத்தில் குறிப்பாகத் தென்னகத்திலிருந்த மன்னர்களின் படையெடுப்புகள் எல்லாமே பொதுவாகக் கொள்ளையடித்துச் செல்வத்தை அவர்கள் நாட்டிற்குக் கவர்ந்து வருவது மட்டுமே காரணமாக இருந்தது என்ற உண்மையை நேர்மையாக எழுதியுள்ளார் பாலகுமாரன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காக மேலை சாளுக்கியத்தை வென்று நிறையப் பொருட்களைக் கொள்ளையடித்து வருகிறது இராஜராஜனின் படை. 

                                            நாவலை வாசித்து முடித்தவுடன் என் மனத்தில் தோன்றிய சில கேள்விகளை, சந்தேக எண்ணங்களை வரிசையாகத் தந்துள்ளேன்.

செம்பியன் மகாதேவியை ரவிதாசனின் வாரிசுகள் கடத்திக்கொண்டு செல்வது, இராஜேந்திர சோழனுக்கு எழுதப்பட்ட ஓலை மேலை சாளுக்கியர்களிடம் சிக்கிக்கொள்வது போன்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் சம்பவங்கள் எழுதிவிட்டு அதன் ஓட்டிய சம்பவங்கள் நாவலில் மீண்டும் சொல்லப்படாமல் இருப்பது இவ்வளவு பெரிய நாவலை விறுவிறுப்புடன் ஆர்வம் குறையாமல் வாசிக்கத் தடையாக உள்ளது.

 நாவலின் தலைப்பை உடையார் என்பதற்குப் பதில் பஞ்சவன் மாதேவி என்றே வைத்திருக்கலாம் போல. நாவல் முழுவதுமே அவள்தான் நிறைந்திருக்கிறாள். பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். தேவாரம் பாடும்போது கேட்ட இராஜராஜன் அதில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள காதல் நெருக்கம், வேதியலை ரொம்ப உருக்கமாக, உயர்வாக எழுதியுள்ளார். மன்னர் அன்பு செலுத்தியிருக்கலாம் ஆனால் ஒரு தேவரடியாருக்கு (அனுக்கி)  பட்டமகரிஷிக்கள் இருக்க அரசவையில் பாலகுமாரன் எழுதியிருக்கும் அதிகாரம் எல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.

பட்டத்து அரசியான உலகமகா தேவி, பஞ்சவன் மாதேவி காலில் விழுந்து என் மகன் இராஜேந்தினை கொன்று விடாதே என்று வேண்ட, பஞ்சவன் மாதேவியோ தன் கர்ப்பப்பையை மலடாக்கிக் கொள்கிறாள்.  பிற்காலத்தில் இராஜேந்திர சோழன், பஞ்சவன் மாதேவிக்குப் பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இதில் இரண்டு கேள்விகள் எழுந்தது என் மனதில். 1. இராஜேந்திரனின் தாயார் உலகமகா தேவி அல்ல வானதி தேவி என்றுதான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்.  2. இராஜராஜனுக்கு பல மனைவியர், ஏன் வேறு யாருடனும் குழந்தை பிறக்காதா?.   

கோவிலைச் சுற்றி அமைத்த மண் சாரத்தை நீக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளை விளாவாரியாக விளக்குபவர் அதைவிடக் கஷ்டமான பணியான மண் சாரத்தை அமைத்த நிகழ்வைப் பற்றி அதிகம் பேசவில்லை.

கால அளவுகளில் பல குழப்பம் உள்ளது. தேவரடியார் இராஜராஜீ கோவில் கட்ட துவங்கும் பொழுதுதான் அருண்மொழி (பிரம்மராயரின் மகன்) அறிமுகம் ஆகிறாள் ஆனால் இருவரும் 11 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்வதாகப் பாகம் 6'ல் வருகிறது. 

பெரிய கோவிலின் வாசலில்  கணபதி (பிள்ளையார்) சிலையை வைப்பதாக வருகிறது ஆனால் நான் படித்த/வாசித்த வரலாற்று ஆராய்ச்சி புத்தகங்களில் எல்லாம் மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலே பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டதாக உள்ளது.

அரசு கணக்குகளைப் பார்க்கும் அந்தணர்கள் பொய்க் கணக்கு எழுதுகிறார்கள். அரசு சொத்தை எப்படியெல்லாம் சந்தேகம் வராமல் கொள்ளையடிப்பது என வகுப்பெடுக்கிறார்கள். பாலகுமாரன் சொல்ல வருவதென்ன? அரசு வேலை செய்பவர்கள் அப்போதிலிருந்தே கறை படிந்தவர்கள்தான் என்கிறாரா?

ஒற்றர்களால் நாவல் நிரம்பி வழிகிறது. யாரும் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் ஒற்றர் வைத்துள்ளார்கள். ஒற்றரை ஒற்றறிய இன்னொரு ஒற்றர். கணக்கு பார்த்தால் படைவீரர்களை விட ஒற்றர்களின் எண்ணிக்கை அதிகம் போலத் தோன்றுகிறது.

சரித்திர கதைகளில் பெரும்பாலும் ஆசிரியரின் கற்பனையே நிரம்பியிருக்கும். வரலாற்று நிகழ்வுகளில் கற்பனை கதாபாத்திரங்கள் கதையின் போக்கைத் தீர்மானிப்பதைத் தவிர்த்திருப்பதாக முன்னுரையில் கூறும் பாலகுமாரன் சில மந்திர தந்திரங்கள் செய்யும் கருவூர்த்தேவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக எதனை மாற்ற விரும்புகிறார்?. இறுதியில் இராஜராஜன் மற்றும் பஞ்சவன் மாதேவியின் ஆன்மாவும் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலின் கோபுரவாசலிலிருந்து இன்னும் நம்மை வரவேற்பதாக வேறு எழுதியுள்ளார். 

நாவலில் முழுவதுமே தேவரடியார்கள்தான் அதிகாரம் செய்கிறார்கள். நாவல் முழுவதும் முக்கியத்துவம் பெற்று கதையை நகர்த்துவதே அவர்கள்தான். மன்னர், இளவரசர், சேனாதிபதி, சிற்பி, ஓவியன் என அனைவரும் அவர்களுக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவரடியார்கள்தான் நாட்டின் கண்கள் என வசனமே எழுதிவிட்டார். யாருடைய மனைவியர் பாத்திரமும் நாவலில் இம்மியளவும் வடிவமைக்கப் படவேயில்லை. 

மிக முக்கியமாக என் மனதை நாவல் முழுவதும் உறுத்திக்கொண்டே இருந்தது  நாவலின் கதை நிகழ்வுகள் ஏதோ 10 வருடங்களுக்கு முன்பு நடந்த மாதிரியே பல சம்பவங்களை எழுதியிருப்பது. மன்னரைச் சுற்றி நிற்கும் மெய்காவல் படையின் நடவடிக்கை, மன்னர் அவர்களை மீறி செயல் படுவது..... பல லட்சங்களில் வீரர்களின் கணக்கைச் சொல்லுகிறார்.  அவர்கள் அனைவரும் எப்பொழுதும் நெல் சோறுதான் சாப்பிடுகிறார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கூட  அனைவருக்கும் நெல் சோறு கிடைத்ததில்லை. மன்னரின் இரண்டாவது மகள் மாதேவடியார் காதல் கதையில் இப்போதைய டேட்டிங் மாதிரியான சம்பவங்கள் எல்லாம் வருகிறது. இதர சமூகத்தினர் அந்தணர்களுக்கு இணையான உரிமையெல்லாம் கேட்பது..

        பல இடங்களில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்புடைய செய்வதால் நாவல் மிக விரைவிலே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது. மொத்தமே இரண்டு பாகங்களாக எழுதவேண்டிய நாவலை ஆறு பாகங்களாக எழுதி (5 பாகம் நாவலை முறியடிக்கவோ)  நீண்ட கதை சொல்லலாக  வளர்ந்து உலகின் மிகச்சிறந்த கட்டுமானத்தைப் பேசும் நாவல் தனது நேர்த்தியான கட்டுமானத்தை இழந்து நிற்கிறது.

இறுதியாக :

              நாவலை வாசித்து முடித்த பின் மீண்டும் ஒருமுறையேனும் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று அதனை உயரத்தைப் பார்த்து ஒவ்வொரு சிலையாக ரசிக்க வேண்டும், சோழர்களின் காவல் தெய்வம் நிசும்ப சூதனி கோவிலுக்குச் சென்று வழிப்பட வேண்டும் எனத் தோன்றியது. இதுவரை தஞ்சை பிரகதீஸ்வரரைத் தரிசனம் செய்ததற்கும் நாவலை வாசித்தபின் செய்வதற்கும் நிச்சயம் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும் ஆனால் பலரும் கூறியதால் உடையார் நாவல் மீது ஒரு பிரமிப்பு, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.. நாவலை வாசிக்காமலே இருந்திருந்தால் அந்த பிரமிப்பு, எதிர்பார்ப்பு அப்படியே மனதிலிருந்திருக்கும்.

                              சோழம்!!    சோழம்!!   சோழம்!!

Sunday, 14 February 2021

ஒரு கடலோர கிராமத்தின் கதை

 

          ஒரு கடலோர கிராமத்தின் கதை

                                                                 தோப்பில் முஹம்மது மீரான்


     பலமுறை வாசிக்க நினைத்த நாவல். தோப்பில் முஹம்மது மீரான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சியம் கிடையாது. ஒரு கடலோர கிராமத்தின் கதை அவரின் முதல் நாவல். 1988'ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. பிற சமயத்தைச் சார்ந்த மக்களின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த நாவல்களை நான் அதிகம் வாசித்ததில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாசித்த ஒரு கடலோர கிராமத்தில் நடக்கும் கதை. வட்டார, சமூக வழக்குச் சொற்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடந்தாலும் எனக்குக் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் என்பதால் எங்கும் தடைப்படாத வாசிப்பனுபவத்தை  அது அளித்தது. 

               மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தின் அதிகார பலமிக்க முதலாளி வடக்கு வீட்டு அகமதுக் கண்ணு. தன்னுடைய அதிகாரத்தையும், போலி கவுரவத்தையும் தக்க வைக்க எதையும் செய்யத் துணிபவர். அனைத்திலும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த வேண்டும், தனக்கே எதிலும் முதல் மரியாதை செலுத்த வேண்டும் என்னும் அதிகாரப் பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை. சுறாப்பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூத் முதலில் அவரை எதிர்த்துப் பேசுகிறான். அகமதுக் கண்ணுவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். ஆங்கில அரசாங்கம் பள்ளிக்கூடத்தை அந்த ஊரில் நிறுவ முயற்சி செய்ய அதற்கு இடம் தர மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கிறார் முதலாளி. அறியாமையின் இருள் அகல வேண்டுமெனில் கல்வி அறிவு மிகவும் அவசியம் அதற்கு இங்குப் பள்ளி அமைவது இன்றியமையாதது. அதனால் தன் மகளின் திருமண செலவிற்காக வைத்திருக்கும் தன் நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்ட தானமாகக் கொடுக்கிறான்  மஹ்மூத். இதனால் மிகுந்த கோபம் கொள்ளும் முதலாளி அவனைப் பழிவாங்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? தன்னுடைய அதிகார பலத்தைத் தக்கவைத்தாரா என்பதே நாவலில் முடிவு.

               அகமதுக் கண்ணுவின் மகள் ஆயிஷா, இளம் வயதில் கணவனை இழந்த அவரது சகோதரி நூஹு பாத்திமா, அவளின் மனவளர்ச்சியில்லாத மகன் பரீது, மோதினார் அசனார் லெப்பை, நியாயவிலைக்கடை நடத்தும் உஸன்பிள்ளை, பள்ளியை நடத்தக் கிராம மக்கள் செய்யும் இடையூறுகளைக் கண்டும் மனம் தளராத பள்ளிகூட ஆசிரியர் மெஹபூப்கான், அவரின் மனைவி நூர்ஜஹான் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கால ஒரு இஸ்லாமியக் கிராமத்து நிகழ்வை நம் கண்முன்னே காட்சிகளாய் பதிவுசெய்துள்ளார் முஹம்மது மீரான் தன் எழுத்துகளால். தன் அத்தை மகன் பரீது மேல் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதை எழுதியவிதம் அருமை. நாவலில் பொறாமை, அதிகார துஷ்பிரயோகம், வன்மம், பழிவாங்கல், காதல், கோபம், அறியாமை என அனைத்தும் மிகையில்லாமல் யதார்த்தமாக உள்ளது. 

           இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள நம்மில் பலருக்குத் தெரியாத பிரச்சினைகளை வெளி உலகுக்கு ஒரு கடலோர கிராமம் நாவலின் வழியாக பதிவுசெய்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். ஆயிஷா, நூஹு பாத்திமா இருவரின் பாத்திரப்படைப்பு உங்களின் மனதை வெகுநேரம் அலைக்கழிக்க வைக்கலாம். மதத்தின் பெயரால் சிலர் மக்களின் அறியாமையை எவ்வாறெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறார். அதனால் நாவலுக்கு அப்பொழுது எதிர்ப்பும் கிளம்பியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் பொறுப்பான முறையில் தனது சமூகத்தின் மேலிருந்த அக்கறையினால் அதன் குறைபாடுகளைக் களையும் நோக்கில் எழுதப்பட்ட படைப்பாகவே ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் பார்க்கமுடிகிறது. வெறும் சீர்திருத்தப் பிரச்சாரமாக இல்லாமல் அன்றைய இஸ்லாம் சமூகம் குறித்த ஒரு எதார்த்தத்தை சித்தரித்ததின் மூலம் தமிழில் நீங்கள் வாசிக்கத் தவிக்கமுடியாத நாவலாக இருக்கிறது.

இறுதியாக :

              ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் கடல் சார்ந்த மீனவர்களைப் பற்றிய கதையாக இருக்கும் என எண்ணியே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகக் கதை பயணிக்கத் தொடங்கியது. தமிழில் இதுபோல் வேறு சமூகத்தினரின் கலாச்சாரம், சடங்குகளைப் பேசும் தமிழ் நாவல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால்  கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கவும். அதனையும் வாசிக்க முயற்சி செய்கிறேன்.  

Saturday, 26 December 2020

ரத்தம் ஒரே நிறம்

 

                       ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா


    புத்தக வாசிப்பைத் தாண்டி அவரின் பன்முகத்தன்மையால் பலருக்கும் அறிமுகமானவர் சுஜாதா. அவரது பல கதைகள், கட்டுரைகளைச் சிறுவயது முதலாகவே வாசித்து வந்துள்ளேன். சரித்திர கதைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.  ரத்தம் ஒரே நிறம் சரித்திர நாவலைக் குமுதம் வார இதழில் எழுதினார். சரித்திர நாவல் என்றவுடன் தின் தோள்களை கொண்ட மன்னர்களையும் அவர்களின் அழகான இளவரசிகளையும் பற்றி பேசி மிக அதிக தூரம் நம்மை அழைத்துச் செல்லாமல்  1857'ஆம் நடந்த சிப்பாய் கலவரம் (முதலாவது சுதந்திரப் போர்) நடந்த காலகட்டத்தின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதையைப் பின்னியுள்ளார். 

                     ஆலம்பாக்கம் ஊரைச் சேர்ந்த முத்துக்குமரன் சிலம்பாட்டத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றவன். ஊர் திருவிழாவில் சிலம்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக தன் குழுவினரோடு குதிரையில் செல்லும் வெள்ளைக்காரன் எட்வர்ட் மக்கின்ஸி,  முத்துக்குமரனுடன் வம்பிழுத்து மோதுகிறான். தோற்ற மக்கின்ஸி அவமானத்தில் முத்துக்குமரனை கொல்ல முயல எதிர்பாராதவிதமாக முத்துக்குமாரனின் தந்தையைக் கொன்று விடுகிறான். தன் அப்பனுக்கு அழையா எமனாக வந்த மக்கின்ஸியை பழிவாங்கும் எண்ணத்தில் அவனை தேடி அலைந்து பல முயற்சிகள் செய்யும் முத்துக்குமரன் இறுதியில் பழிதீர்த்தானா என்பதுதான் நாவலின் கரு. இதில் எங்கே சிப்பாய் கலவரம் வருகிறது என உங்களுக்குத் தோன்றலாம். 

                                வித்தைக்கார குழுவினரோடு சேர்ந்து சென்னை வரும் முத்துக்குமரன் தன்னுடைய முதல் பழிவாங்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறான். வெள்ளையர்களின் மாட்டிக்கொண்டவனை   மற்றுமொரு அதிகாரி ஆஷ்லி தப்பிக்க வைக்கிறான். வித்தைக்கார குழுவினைச் சேர்ந்த பூஞ்சோலைக்கு முத்துக்குமரன் மீது ஒரு ஈர்ப்பு. பைராகி என்பவனிடம் சென்று தற்காப்புக் கலைகளின் நுணுக்கங்களை கற்று மீண்டும் மக்கின்ஸியை கொலை செய்ய முயற்சி செய்கிறான்.  இதனிடையே வட இந்தியாவில் சிப்பாய் கலவரம் தீவிரமடைய அதனை முறியடிக்கச் சென்னையிலிருந்து செல்லும் படையில் மக்கின்ஸி மற்றும் ஆஷ்லியும் செல்கிறார்கள். மக்கின்ஸி துரத்திக்கொண்டு கான்பூர் செல்லும்  முத்துக்குமரன் தன் லட்சியத்தை நிறைவேற்றினானா? சிப்பாய் கலவரம் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதுதான் நாவலின் முடிவு. 

                                        ராகுல சாங்கிருத்தியானின் "வால்கா முதல் கங்கை வரை" குறிப்பிட்ட மாதிரி என்பீல்ட் நிறுவனத்தின் புதிய துப்பாக்கியில் பயன்படுத்திய கொழுப்பு தடவிய  குண்டை பற்றி வேண்டுமென்றே சதி எனச் செய்தி பரப்பப்பட்டது சிப்பாய்களை ஆங்கில அரசுக்கு எதிராகத் தூண்டுவதற்காக. சிப்பாய் கலவரத்தை முன்னிறுத்தி காழ்புணர்வு கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் செய்ததை மட்டுமில்லாமல் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களையும் முன்வைக்கிறார். நல்மனம் படைத்த ஆண் மீது ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாகிறாள். நாவலில் வரும் முத்துக்குமரன் - பூஞ்சோலை - ராக்கன், ஆஷ்லி - எமிலி - மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே கோணத்தில் பயணிக்கிறது. கல்கத்தா கரையோரமாக ஒரு 'சதி' (உடன்கட்டை) நிகழ்வை விரிவாக எழுதியுள்ளார். அது வாசிக்கும் அனைவரையும் பதைபதைப்பு அடையச்செய்யும். மேலும் அதனைப் போன்ற சம்பவங்களைப் பற்றி வெள்ளையர்கள் கொண்டிருந்த வேறுபட்ட கருத்துக்களையும் சொல்லுகிறார்.

                                     என்னதான் சரித்திர உண்மை சம்பவங்களைப் பின்னியாகக் கொண்டு எழுதியிருந்தாலும் நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போலத்தான் நகர்கிறது ரத்தம் ஒரே நாவல். அதுவும் முத்துக்குமரன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். பைராகி என்கிற சித்தர் போன்ற கதாபாத்திரம் நம்ப முடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். வட இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலவரத்தில் அந்த மக்களே கணிசமாக அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றுப் பயணித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம்தான் நாவலின் சிறப்பு.

 இறுதியாக :

           ரத்தம் ஒரே நிறம் நாவலை முதலில் குமுதத்தில் "கருப்பு சிவப்பு வெளுப்பு" எனும் பெயரில்தான் எழுதியுள்ளார். ஆனால் மூன்று வாரத்திற்குப் பின் ஒரு இனத்தவர்களின் கடுமையான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுஜாதா குறிப்பிடும் போது "எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டு வார்த்தைகள் எனக்குப் பாடமாயின. தொலைப்பேசியில் கொலை மற்றும் வலது கையை வெட்டி விடுவேன் மிரட்டல் விடுத்தார்கள்"...  இது இப்பொழுது ஒருவருக்கு நடந்தால்... சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்தையே இழுத்திருப்பார்கள். அதுவும் பலர் என்னவென்றே சரியாகத் தெரியாமல் புரியாமல் forward செய்வார்கள் 😒...