Monday, 10 May 2021

பேசாத பேச்செல்லாம்...

 

               பேசாத பேச்செல்லாம்...   ப்ரியா தம்பி

       

     ஆனந்த விகடனில் வெளிவந்த  போதே வாரம் தவறாமல் பேசாத பேச்செல்லாம் கட்டுரை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தேன். ஏன் வார இதழ் கையில் கிடைத்தவுடன் முதலில் வாசித்ததே ப்ரியா தம்பி எழுதிய இந்த  பேசாத பேச்செல்லாம்.. கட்டுரையைத்தான். கட்டுரை தொகுப்பு புத்தகமாக வெளிவந்த பொழுது வாங்கப் பல முயற்சிகள் செய்து இரண்டாம் பதிப்பில்தான் கிடைத்தது.  மீண்டும் ஒருமுறை வாசித்தேன் என் எண்ணங்களைப் பதிவுசெய்ய. 

         முதல் கட்டுரையிலே தூங்கச் சொல்லி தொந்தரவு செய்தால் 100'க்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்துவிடுவேன் என்பதான அவருக்கும், அவரின் மகளுக்கும் இடையேயான உரையாடலை மையப்படுத்தி, இன்றைய குழந்தைகளின் விசாலமான அறிவையும், தைரியத்தையும் எடுத்துரைத்து நாம் வளர்ந்த சூழ்நிலைகளை ஒப்பிடுவதில் தொடங்கி, ஒரு தாயாக, மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக எல்லோரின் குரலாகவும், பொது வெளியில் பேசத் தயங்குகிற எல்லாவற்றையும் பேசுகிறது இந்த  பேசாத பேச்செல்லாம். 

        பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றிச் சொல்லுபவர் அவர்கள் வைத்திருப்பது வண்டியல்ல, "அவர்களின் இறக்கைகள்" என்கிறார். கண்டிப்பாக 10-15 வருடங்களுக்கு முன்பு பல பெண்கள் முதன் முதலில் வண்டியை ஓட்டும் பொழுது மனதால் பறந்திருப்பார்கள். முன்பெல்லாம் குடும்பப் பயணம், திருவிழாக்களுக்குத் தயார் செய்யப் பெண்கள் சமையல் அறையிலே அடைந்து கிடந்தது, பெண்களின் உடை, பாலியல் வன்முறை செய்யப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினரின் மனநிலையை, பாலியல் தொழிலாளிகளின் மனதின் உணர்வுகள், திருநங்கைகளின் மீதான சமூகத்தின் பார்வைகள், அம்மா- மகள் பாச உறவு, அப்பா -மகள் பாச உறவு, ஆண் - பெண் நட்பின் சாத்தியக்கூறுகள் என உள்ளபடி உள்ளதாகச் சித்தரிக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் மேற்பூச்சுகள் எதுவுமின்றி வெளிப்படையோடு நேர்மையாகப் பிரச்சினைகளை அலசுகிறது.

                    பொதுவாகப் பெண்ணியம் பேசும் நாவல்கள்/கட்டுரைகள் எல்லாம் ஆண்கள் மீது, ஆணாதிக்க சமுகத்தின் மீது சாடுவது போலிருக்கும். அத்தகைய போக்கு இதில் இல்லாமல் ஆண்களின் மனநிலையும் அவர்களின் "ஆண்மை" போக்குகளுக்கு நமது குடும்பம், சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வரையறையே என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறார். பெண்களுக்கு முதல் எதிரி பெண்களே சிறு விசயங்களில் அவர்களுக்கு இருக்கும் சின்ன தயக்கமே ஒரு பலவீனத்தைக் கொடுக்கிறது. அவர்களின் அரைகுறைப் பெண்ணிய புரிதல்களைப் பற்றித் தெளிவாகவும் மிகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். 

          ப்ரியா தம்பி குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாகர்கோவில் சுற்றுவட்டார இடங்களைப் பற்றி (பிரபு ஹோட்டல் உட்பட) நிறையக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புத்தகப் பிரியர்களுக்குக் கட்டுரை தொகுப்புகளை விடக் கதைகள் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனால் பேசாத பேச்செல்லாம் வாசிக்கும் அனைவரையும் ஆசிரியரின் எழுத்து நடை தன்பால் இழுப்பது மட்டுமில்லாமல் உங்களை உலுக்கிப் பல கேள்விகளை எழுப்புவதுடன் தங்களைப் பற்றிய ஓர் சுயவிமர்சனத்தையும் உங்களுக்குள் தோற்றுவிக்கும்.  இந்த கட்டுரை தொகுப்புகள் பெண்களுக்கானது மட்டுமானதல்ல, பெண்களைப் புரிந்து கொள்ளாமல் புலம்பும் ஆண்களுக்குமானதுதான் இந்த பேசாத பேச்செல்லாம்...

இறுதியாக :

        இந்த கட்டுரைகள்  பேசும் மனநிலை கொண்டவர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். எனக்குத் தெரிந்த பல பெண்கள் படித்து நல்ல வேலையில் இருப்பார்கள் ஆனால் ஒரு ATM சென்று பணம் எடுக்கத் தெரிந்திருக்காது. தனியாக ஒரு இடத்திற்கு, கடைகளுக்குச் செல்லத் தயங்குவார்கள். அதையெல்லாம் அவர் பார்த்துப்பார், அவற்றைப் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனப் பெருமையாகவும் பேசுவார்கள். அவர்களையெல்லாம் பொருத்தவரை கணவன் சமையலுக்குக் காய்கறி நறுக்கித் தருவதுதான் பெண்ணிய சமநிலைப்பாடு😂 ...   


Thursday, 22 April 2021

உடையார்

 

                           உடையார் - பாலகுமாரன்

 

                பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை வாசிக்க சில நண்பர்களும், நாவலைக் கொடுத்து எனது சகோதரரும் பரிந்துரைத்தார்கள். ஆறு பாகங்களுடன்  (புத்தகங்கள்) சுமார் 2600 பக்கங்களைக் கொண்ட பெரிய நாவல். ஒரு வார இதழில் முதலிரண்டு பாகங்களை எழுதியுள்ளார். சில காரணங்களால் அவர்கள் நாவலைத் தொடர மறுக்க, இதர பாகங்களைத் தனிப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.  நாவலின் பிரமாண்டம்தான் வாசிப்பைத் தொடங்க பெரிய தயக்கத்தைத் தந்தது. இறுதியில் வாசிக்கத் தொடங்கி விட்டேன். நான் வாசித்து முடிக்கச் சிறிது அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுதான். ஆனால் அதற்குக் காரணம் நாவலின் நீளம் மட்டுமே  அல்ல..

              இராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார், அதில்  அவர் சந்தித்த சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு முறியடித்தார் என்பதுதான் நாவலின் மையக்கரு. நாவலின் பலமே பாலகுமாரனின் வசனங்கள் தான். அதுவும் உறவுகள் குறித்து கதாபாத்திரங்கள் பேசும், விவாதிக்கும் வார்த்தைகள் அனைத்தும் எக்காலத்திலும் ஏற்ற வகையில் உள்ளது. மன்னரைப் பற்றி மட்டுமே பேசாமல் அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறுபட்ட குடிமக்களையும், கோவில் கட்டுமானத்தில் பங்கேற்று உறுதுணையாக இருந்த பலதரப்பட்ட சமூகத்தினரின் பங்கையும் அவர்களிடையே இருந்த மோதல்களையும் பாலகுமாரன் நம் கண்முன்னே காட்டிவிடுகிறார் அவரின் எழுத்துக்களால்.

            செம்பியன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, இராஜராஜீ, சீருடையாள், பரவை நாச்சியார், குமுதினி, குந்தவை, கரிய மாணிக்கம், எச்சுமண்டை, உமையாள், குந்தவை (இராஜராஜனின் மகள்), மாதேவடியார், முத்தான பொன் நங்கை, அம்மங்கை, கடுவன்காரி, கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்மொழி, மலையனுர் சாம்பான்,  வந்தியத்தேவன், விமலாதித்தன், கருவூர்த்தேவர், ஈசான சிவபண்டிதர், ராஜராஜ பெருந்தச்சர், நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையன், சீராளன், சாவூர் பரஞ்ஜோதி, வைணவதாசன், குணசீலன், வீணை ஆதிச்சன், பரசு நம்பூதிரி, தொண்டை நாட்டு அந்தணர்கள் இப்படிப் பல கதாபாத்திரங்களை வடிவமைக்கப் பல பக்கங்களை ஒதுக்கி தேவரடியார்கள், அதிகாரிச்சிகள், ஒற்றர்கள், கருமார்கள், அந்தணர்கள், மெய்க்காவல் படை வீரர்கள், வேளாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என எல்லோரைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவதின் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையையும் சொல்லுகிறார்.

                    கோவிலைக் கட்டுவதற்கான மண்டப வரைபடங்களைக் கொண்டுவரும் தேவரடியார் இராஜராஜீயின் வண்டி காவிரி ஆற்றின் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ள அதனை மீட்கும் படலத்துடன் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது நாவல். அந்த காலத்தில் இவ்வளவு உயரமான கோவிலைக் கட்ட மன்னருக்குத் தோன்றியது என்பதே வியப்புதான்.  அதனை மக்கள் எப்படியெல்லாம் எதிர் கொண்டிருப்பார்கள், பேசியிருப்பார்கள், அவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும், என்னென்ன குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும், அரசன் எப்படி இருந்திருப்பான் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பங்கு என நிறைய விபரங்களை விரிவாகவும் எளிதாகவும் சொல்லியுள்ளார். நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் எல்லாம் இந்தியக்கண்டத்தைச் சேராத அல்லது வேற்று மத மன்னர்களின் படையெடுப்பை மட்டும் பெரும் படையுடன் வந்து கொள்ளையடித்துச் சென்றார்கள் என எழுதியிருப்பார்கள். ஆனால் அக்காலத்தில் குறிப்பாகத் தென்னகத்திலிருந்த மன்னர்களின் படையெடுப்புகள் எல்லாமே பொதுவாகக் கொள்ளையடித்துச் செல்வத்தை அவர்கள் நாட்டிற்குக் கவர்ந்து வருவது மட்டுமே காரணமாக இருந்தது என்ற உண்மையை நேர்மையாக எழுதியுள்ளார் பாலகுமாரன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காக மேலை சாளுக்கியத்தை வென்று நிறையப் பொருட்களைக் கொள்ளையடித்து வருகிறது இராஜராஜனின் படை. 

                                            நாவலை வாசித்து முடித்தவுடன் என் மனத்தில் தோன்றிய சில கேள்விகளை, சந்தேக எண்ணங்களை வரிசையாகத் தந்துள்ளேன்.

செம்பியன் மகாதேவியை ரவிதாசனின் வாரிசுகள் கடத்திக்கொண்டு செல்வது, இராஜேந்திர சோழனுக்கு எழுதப்பட்ட ஓலை மேலை சாளுக்கியர்களிடம் சிக்கிக்கொள்வது போன்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் சம்பவங்கள் எழுதிவிட்டு அதன் ஓட்டிய சம்பவங்கள் நாவலில் மீண்டும் சொல்லப்படாமல் இருப்பது இவ்வளவு பெரிய நாவலை விறுவிறுப்புடன் ஆர்வம் குறையாமல் வாசிக்கத் தடையாக உள்ளது.

 நாவலின் தலைப்பை உடையார் என்பதற்குப் பதில் பஞ்சவன் மாதேவி என்றே வைத்திருக்கலாம் போல. நாவல் முழுவதுமே அவள்தான் நிறைந்திருக்கிறாள். பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். தேவாரம் பாடும்போது கேட்ட இராஜராஜன் அதில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள காதல் நெருக்கம், வேதியலை ரொம்ப உருக்கமாக, உயர்வாக எழுதியுள்ளார். மன்னர் அன்பு செலுத்தியிருக்கலாம் ஆனால் ஒரு தேவரடியாருக்கு (அனுக்கி)  பட்டமகரிஷிக்கள் இருக்க அரசவையில் பாலகுமாரன் எழுதியிருக்கும் அதிகாரம் எல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.

பட்டத்து அரசியான உலகமகா தேவி, பஞ்சவன் மாதேவி காலில் விழுந்து என் மகன் இராஜேந்தினை கொன்று விடாதே என்று வேண்ட, பஞ்சவன் மாதேவியோ தன் கர்ப்பப்பையை மலடாக்கிக் கொள்கிறாள்.  பிற்காலத்தில் இராஜேந்திர சோழன், பஞ்சவன் மாதேவிக்குப் பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இதில் இரண்டு கேள்விகள் எழுந்தது என் மனதில். 1. இராஜேந்திரனின் தாயார் உலகமகா தேவி அல்ல வானதி தேவி என்றுதான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்.  2. இராஜராஜனுக்கு பல மனைவியர், ஏன் வேறு யாருடனும் குழந்தை பிறக்காதா?.   

கோவிலைச் சுற்றி அமைத்த மண் சாரத்தை நீக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளை விளாவாரியாக விளக்குபவர் அதைவிடக் கஷ்டமான பணியான மண் சாரத்தை அமைத்த நிகழ்வைப் பற்றி அதிகம் பேசவில்லை.

கால அளவுகளில் பல குழப்பம் உள்ளது. தேவரடியார் இராஜராஜீ கோவில் கட்ட துவங்கும் பொழுதுதான் அருண்மொழி (பிரம்மராயரின் மகன்) அறிமுகம் ஆகிறாள் ஆனால் இருவரும் 11 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்வதாகப் பாகம் 6'ல் வருகிறது. 

பெரிய கோவிலின் வாசலில்  கணபதி (பிள்ளையார்) சிலையை வைப்பதாக வருகிறது ஆனால் நான் படித்த/வாசித்த வரலாற்று ஆராய்ச்சி புத்தகங்களில் எல்லாம் மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலே பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டதாக உள்ளது.

அரசு கணக்குகளைப் பார்க்கும் அந்தணர்கள் பொய்க் கணக்கு எழுதுகிறார்கள். அரசு சொத்தை எப்படியெல்லாம் சந்தேகம் வராமல் கொள்ளையடிப்பது என வகுப்பெடுக்கிறார்கள். பாலகுமாரன் சொல்ல வருவதென்ன? அரசு வேலை செய்பவர்கள் அப்போதிலிருந்தே கறை படிந்தவர்கள்தான் என்கிறாரா?

ஒற்றர்களால் நாவல் நிரம்பி வழிகிறது. யாரும் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் ஒற்றர் வைத்துள்ளார்கள். ஒற்றரை ஒற்றறிய இன்னொரு ஒற்றர். கணக்கு பார்த்தால் படைவீரர்களை விட ஒற்றர்களின் எண்ணிக்கை அதிகம் போலத் தோன்றுகிறது.

சரித்திர கதைகளில் பெரும்பாலும் ஆசிரியரின் கற்பனையே நிரம்பியிருக்கும். வரலாற்று நிகழ்வுகளில் கற்பனை கதாபாத்திரங்கள் கதையின் போக்கைத் தீர்மானிப்பதைத் தவிர்த்திருப்பதாக முன்னுரையில் கூறும் பாலகுமாரன் சில மந்திர தந்திரங்கள் செய்யும் கருவூர்த்தேவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக எதனை மாற்ற விரும்புகிறார்?. இறுதியில் இராஜராஜன் மற்றும் பஞ்சவன் மாதேவியின் ஆன்மாவும் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலின் கோபுரவாசலிலிருந்து இன்னும் நம்மை வரவேற்பதாக வேறு எழுதியுள்ளார். 

நாவலில் முழுவதுமே தேவரடியார்கள்தான் அதிகாரம் செய்கிறார்கள். நாவல் முழுவதும் முக்கியத்துவம் பெற்று கதையை நகர்த்துவதே அவர்கள்தான். மன்னர், இளவரசர், சேனாதிபதி, சிற்பி, ஓவியன் என அனைவரும் அவர்களுக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவரடியார்கள்தான் நாட்டின் கண்கள் என வசனமே எழுதிவிட்டார். யாருடைய மனைவியர் பாத்திரமும் நாவலில் இம்மியளவும் வடிவமைக்கப் படவேயில்லை. 

மிக முக்கியமாக என் மனதை நாவல் முழுவதும் உறுத்திக்கொண்டே இருந்தது  நாவலின் கதை நிகழ்வுகள் ஏதோ 10 வருடங்களுக்கு முன்பு நடந்த மாதிரியே பல சம்பவங்களை எழுதியிருப்பது. மன்னரைச் சுற்றி நிற்கும் மெய்காவல் படையின் நடவடிக்கை, மன்னர் அவர்களை மீறி செயல் படுவது..... பல லட்சங்களில் வீரர்களின் கணக்கைச் சொல்லுகிறார்.  அவர்கள் அனைவரும் எப்பொழுதும் நெல் சோறுதான் சாப்பிடுகிறார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கூட  அனைவருக்கும் நெல் சோறு கிடைத்ததில்லை. மன்னரின் இரண்டாவது மகள் மாதேவடியார் காதல் கதையில் இப்போதைய டேட்டிங் மாதிரியான சம்பவங்கள் எல்லாம் வருகிறது. இதர சமூகத்தினர் அந்தணர்களுக்கு இணையான உரிமையெல்லாம் கேட்பது..

        பல இடங்களில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்புடைய செய்வதால் நாவல் மிக விரைவிலே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது. மொத்தமே இரண்டு பாகங்களாக எழுதவேண்டிய நாவலை ஆறு பாகங்களாக எழுதி (5 பாகம் நாவலை முறியடிக்கவோ)  நீண்ட கதை சொல்லலாக  வளர்ந்து உலகின் மிகச்சிறந்த கட்டுமானத்தைப் பேசும் நாவல் தனது நேர்த்தியான கட்டுமானத்தை இழந்து நிற்கிறது.

இறுதியாக :

              நாவலை வாசித்து முடித்த பின் மீண்டும் ஒருமுறையேனும் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று அதனை உயரத்தைப் பார்த்து ஒவ்வொரு சிலையாக ரசிக்க வேண்டும், சோழர்களின் காவல் தெய்வம் நிசும்ப சூதனி கோவிலுக்குச் சென்று வழிப்பட வேண்டும் எனத் தோன்றியது. இதுவரை தஞ்சை பிரகதீஸ்வரரைத் தரிசனம் செய்ததற்கும் நாவலை வாசித்தபின் செய்வதற்கும் நிச்சயம் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும் ஆனால் பலரும் கூறியதால் உடையார் நாவல் மீது ஒரு பிரமிப்பு, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.. நாவலை வாசிக்காமலே இருந்திருந்தால் அந்த பிரமிப்பு, எதிர்பார்ப்பு அப்படியே மனதிலிருந்திருக்கும்.

                              சோழம்!!    சோழம்!!   சோழம்!!

Sunday, 14 February 2021

ஒரு கடலோர கிராமத்தின் கதை

 

          ஒரு கடலோர கிராமத்தின் கதை

                                                                 தோப்பில் முஹம்மது மீரான்


     பலமுறை வாசிக்க நினைத்த நாவல். தோப்பில் முஹம்மது மீரான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சியம் கிடையாது. ஒரு கடலோர கிராமத்தின் கதை அவரின் முதல் நாவல். 1988'ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. பிற சமயத்தைச் சார்ந்த மக்களின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த நாவல்களை நான் அதிகம் வாசித்ததில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாசித்த ஒரு கடலோர கிராமத்தில் நடக்கும் கதை. வட்டார, சமூக வழக்குச் சொற்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடந்தாலும் எனக்குக் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் என்பதால் எங்கும் தடைப்படாத வாசிப்பனுபவத்தை  அது அளித்தது. 

               மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தின் அதிகார பலமிக்க முதலாளி வடக்கு வீட்டு அகமதுக் கண்ணு. தன்னுடைய அதிகாரத்தையும், போலி கவுரவத்தையும் தக்க வைக்க எதையும் செய்யத் துணிபவர். அனைத்திலும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த வேண்டும், தனக்கே எதிலும் முதல் மரியாதை செலுத்த வேண்டும் என்னும் அதிகாரப் பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை. சுறாப்பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூத் முதலில் அவரை எதிர்த்துப் பேசுகிறான். அகமதுக் கண்ணுவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். ஆங்கில அரசாங்கம் பள்ளிக்கூடத்தை அந்த ஊரில் நிறுவ முயற்சி செய்ய அதற்கு இடம் தர மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கிறார் முதலாளி. அறியாமையின் இருள் அகல வேண்டுமெனில் கல்வி அறிவு மிகவும் அவசியம் அதற்கு இங்குப் பள்ளி அமைவது இன்றியமையாதது. அதனால் தன் மகளின் திருமண செலவிற்காக வைத்திருக்கும் தன் நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்ட தானமாகக் கொடுக்கிறான்  மஹ்மூத். இதனால் மிகுந்த கோபம் கொள்ளும் முதலாளி அவனைப் பழிவாங்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? தன்னுடைய அதிகார பலத்தைத் தக்கவைத்தாரா என்பதே நாவலில் முடிவு.

               அகமதுக் கண்ணுவின் மகள் ஆயிஷா, இளம் வயதில் கணவனை இழந்த அவரது சகோதரி நூஹு பாத்திமா, அவளின் மனவளர்ச்சியில்லாத மகன் பரீது, மோதினார் அசனார் லெப்பை, நியாயவிலைக்கடை நடத்தும் உஸன்பிள்ளை, பள்ளியை நடத்தக் கிராம மக்கள் செய்யும் இடையூறுகளைக் கண்டும் மனம் தளராத பள்ளிகூட ஆசிரியர் மெஹபூப்கான், அவரின் மனைவி நூர்ஜஹான் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கால ஒரு இஸ்லாமியக் கிராமத்து நிகழ்வை நம் கண்முன்னே காட்சிகளாய் பதிவுசெய்துள்ளார் முஹம்மது மீரான் தன் எழுத்துகளால். தன் அத்தை மகன் பரீது மேல் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதை எழுதியவிதம் அருமை. நாவலில் பொறாமை, அதிகார துஷ்பிரயோகம், வன்மம், பழிவாங்கல், காதல், கோபம், அறியாமை என அனைத்தும் மிகையில்லாமல் யதார்த்தமாக உள்ளது. 

           இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள நம்மில் பலருக்குத் தெரியாத பிரச்சினைகளை வெளி உலகுக்கு ஒரு கடலோர கிராமம் நாவலின் வழியாக பதிவுசெய்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். ஆயிஷா, நூஹு பாத்திமா இருவரின் பாத்திரப்படைப்பு உங்களின் மனதை வெகுநேரம் அலைக்கழிக்க வைக்கலாம். மதத்தின் பெயரால் சிலர் மக்களின் அறியாமையை எவ்வாறெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறார். அதனால் நாவலுக்கு அப்பொழுது எதிர்ப்பும் கிளம்பியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் பொறுப்பான முறையில் தனது சமூகத்தின் மேலிருந்த அக்கறையினால் அதன் குறைபாடுகளைக் களையும் நோக்கில் எழுதப்பட்ட படைப்பாகவே ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் பார்க்கமுடிகிறது. வெறும் சீர்திருத்தப் பிரச்சாரமாக இல்லாமல் அன்றைய இஸ்லாம் சமூகம் குறித்த ஒரு எதார்த்தத்தை சித்தரித்ததின் மூலம் தமிழில் நீங்கள் வாசிக்கத் தவிக்கமுடியாத நாவலாக இருக்கிறது.

இறுதியாக :

              ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் கடல் சார்ந்த மீனவர்களைப் பற்றிய கதையாக இருக்கும் என எண்ணியே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகக் கதை பயணிக்கத் தொடங்கியது. தமிழில் இதுபோல் வேறு சமூகத்தினரின் கலாச்சாரம், சடங்குகளைப் பேசும் தமிழ் நாவல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால்  கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கவும். அதனையும் வாசிக்க முயற்சி செய்கிறேன்.