Monday 10 May 2021

பேசாத பேச்செல்லாம்...

 

               பேசாத பேச்செல்லாம்...   ப்ரியா தம்பி

       

     ஆனந்த விகடனில் வெளிவந்த  போதே வாரம் தவறாமல் பேசாத பேச்செல்லாம் கட்டுரை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தேன். ஏன் வார இதழ் கையில் கிடைத்தவுடன் முதலில் வாசித்ததே ப்ரியா தம்பி எழுதிய இந்த  பேசாத பேச்செல்லாம்.. கட்டுரையைத்தான். கட்டுரை தொகுப்பு புத்தகமாக வெளிவந்த பொழுது வாங்கப் பல முயற்சிகள் செய்து இரண்டாம் பதிப்பில்தான் கிடைத்தது.  மீண்டும் ஒருமுறை வாசித்தேன் என் எண்ணங்களைப் பதிவுசெய்ய. 

         முதல் கட்டுரையிலே தூங்கச் சொல்லி தொந்தரவு செய்தால் 100'க்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்துவிடுவேன் என்பதான அவருக்கும், அவரின் மகளுக்கும் இடையேயான உரையாடலை மையப்படுத்தி, இன்றைய குழந்தைகளின் விசாலமான அறிவையும், தைரியத்தையும் எடுத்துரைத்து நாம் வளர்ந்த சூழ்நிலைகளை ஒப்பிடுவதில் தொடங்கி, ஒரு தாயாக, மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக எல்லோரின் குரலாகவும், பொது வெளியில் பேசத் தயங்குகிற எல்லாவற்றையும் பேசுகிறது இந்த  பேசாத பேச்செல்லாம். 

        பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றிச் சொல்லுபவர் அவர்கள் வைத்திருப்பது வண்டியல்ல, "அவர்களின் இறக்கைகள்" என்கிறார். கண்டிப்பாக 10-15 வருடங்களுக்கு முன்பு பல பெண்கள் முதன் முதலில் வண்டியை ஓட்டும் பொழுது மனதால் பறந்திருப்பார்கள். முன்பெல்லாம் குடும்பப் பயணம், திருவிழாக்களுக்குத் தயார் செய்யப் பெண்கள் சமையல் அறையிலே அடைந்து கிடந்தது, பெண்களின் உடை, பாலியல் வன்முறை செய்யப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினரின் மனநிலையை, பாலியல் தொழிலாளிகளின் மனதின் உணர்வுகள், திருநங்கைகளின் மீதான சமூகத்தின் பார்வைகள், அம்மா- மகள் பாச உறவு, அப்பா -மகள் பாச உறவு, ஆண் - பெண் நட்பின் சாத்தியக்கூறுகள் என உள்ளபடி உள்ளதாகச் சித்தரிக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் மேற்பூச்சுகள் எதுவுமின்றி வெளிப்படையோடு நேர்மையாகப் பிரச்சினைகளை அலசுகிறது.

                    பொதுவாகப் பெண்ணியம் பேசும் நாவல்கள்/கட்டுரைகள் எல்லாம் ஆண்கள் மீது, ஆணாதிக்க சமுகத்தின் மீது சாடுவது போலிருக்கும். அத்தகைய போக்கு இதில் இல்லாமல் ஆண்களின் மனநிலையும் அவர்களின் "ஆண்மை" போக்குகளுக்கு நமது குடும்பம், சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வரையறையே என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறார். பெண்களுக்கு முதல் எதிரி பெண்களே சிறு விசயங்களில் அவர்களுக்கு இருக்கும் சின்ன தயக்கமே ஒரு பலவீனத்தைக் கொடுக்கிறது. அவர்களின் அரைகுறைப் பெண்ணிய புரிதல்களைப் பற்றித் தெளிவாகவும் மிகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். 

          ப்ரியா தம்பி குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாகர்கோவில் சுற்றுவட்டார இடங்களைப் பற்றி (பிரபு ஹோட்டல் உட்பட) நிறையக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புத்தகப் பிரியர்களுக்குக் கட்டுரை தொகுப்புகளை விடக் கதைகள் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனால் பேசாத பேச்செல்லாம் வாசிக்கும் அனைவரையும் ஆசிரியரின் எழுத்து நடை தன்பால் இழுப்பது மட்டுமில்லாமல் உங்களை உலுக்கிப் பல கேள்விகளை எழுப்புவதுடன் தங்களைப் பற்றிய ஓர் சுயவிமர்சனத்தையும் உங்களுக்குள் தோற்றுவிக்கும்.  இந்த கட்டுரை தொகுப்புகள் பெண்களுக்கானது மட்டுமானதல்ல, பெண்களைப் புரிந்து கொள்ளாமல் புலம்பும் ஆண்களுக்குமானதுதான் இந்த பேசாத பேச்செல்லாம்...

இறுதியாக :

        இந்த கட்டுரைகள்  பேசும் மனநிலை கொண்டவர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். எனக்குத் தெரிந்த பல பெண்கள் படித்து நல்ல வேலையில் இருப்பார்கள் ஆனால் ஒரு ATM சென்று பணம் எடுக்கத் தெரிந்திருக்காது. தனியாக ஒரு இடத்திற்கு, கடைகளுக்குச் செல்லத் தயங்குவார்கள். அதையெல்லாம் அவர் பார்த்துப்பார், அவற்றைப் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனப் பெருமையாகவும் பேசுவார்கள். அவர்களையெல்லாம் பொருத்தவரை கணவன் சமையலுக்குக் காய்கறி நறுக்கித் தருவதுதான் பெண்ணிய சமநிலைப்பாடு😂 ...   


2 comments:

  1. அருமை... வாசிக்கத் தூண்டும் பதிவு..

    ReplyDelete
  2. Madhan தம்பியின் good review :) nice conclusion and I fully agree; until the day women feels that it’s their responsibility to take care of them financially and men feels that they have equal responsibility in all household chores, together they will never be able to impart those qualities to next generation (their kids) and there will always be ‘perceived’ notion of what a man and women must do and what’s right/wrong!

    ReplyDelete