Monday 7 January 2019

வீரபாண்டியன் மனைவி



                         அரு  இராமநாதன் - வீரபாண்டியன் மனைவி 





   எப்பொழுதும் நான் அடுத்துப் படிக்கவேண்டியது எனப் புத்தகங்கள் பட்டியல் வைத்திருப்பேன் (மனதில்தான்) .. ஆனால் அருராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி புத்தகம் எப்பொழுதுமே அந்த லிஸ்டில் இருந்ததில்லை..

அகிலனின் வேங்கையின் மைந்தன் முடிந்தும் பாவை விளக்குதான் அடுத்தது வாசிக்க வேண்டும் என இருந்தேன்... தொடங்கிக் கூட விட்டேன்... ஆனால் திடீர் மனமாற்றம்... வீரபாண்டியன் மனைவி புத்தகம் கிடைத்து....

 நான் பள்ளியில் படிக்கும்போதே எங்கள் வீட்டில் வீரபாண்டியன் மனைவி புத்தகம் இருந்தது ஆனால் அதன் மூன்றாவது பாகம் மட்டும் எப்படியோ தவறி விட அதை வாசிக்க வேண்டும் என எண்ணம் வந்ததேயில்லை.

குலோத்துங்க சோழன் (III) ...  பாண்டிய மன்னன் வீரபாண்டியனை வெற்றி கொண்டு விக்ரமபாண்டியனை அரியணையில் அமர்த்திய வரலாற்றைக் கற்பனை கலந்து எழுதியுள்ளார்.

கதையில் என்னை ஈர்த்த மற்றும் கவனிக்க வைத்த கதாப்பாத்திரம் ஜனநாதன் கச்சிராயன்... ஆசிரியர் ( ராமநாதன் = ஜனநாதன்) தன்னுடைய கருத்துகளைத்தான் அந்தக் கதாப்பாத்திரம் வழியாகச் சொல்லுகிறாரோ எனத் தோன்றியது. ஜனநாதன் கதாப்பாத்திரம்தான் முழு நாவலையும் தாங்கி நிற்பதுடன் மற்ற நாவல்களில் இருந்து வேறு படுத்திக்காட்டுகிறது. அக்கால அரசியலைச் சாடும்  அவனது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் படி உள்ளது

தேசபக்தியை வைத்து அரசியல் செய்வது..

ஒருதேசம்... ஒரு கொடி... ஒரே கொள்கை... ஒரே மொழி....

ஆட்சியாளர்களின் புகழ் வேட்டை ....

     இது போன்றவற்றை பற்றி ஜனநாதன் கேலியாக சொல்லும் கருத்துக்கள் இரசிக்க வைக்கிறது.

ஜனநாதன் கதபர்த்திரத்தை நல்லவனா அல்லது கெட்டவனா எனக் கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் அந்த கதாப்பாத்திரம் சுவாரசியமாக படைக்கப் பட்டிருப்பது சிறப்பு.

சாமானியர்களையே கதையின் நாயர்களாக ஆக்கி இருப்பதும் மன்னர்களை வெகுவாக புகழ்ந்து, வீரதீரனாகக் காட்டாததும் மாறுபட்டு ரசிக்கும் படி இருக்கிறது.

இராமாயணம் காண்டங்கள் reverse ஆக வருவது... மற்றும் சில இடங்களில் இராமாயண கதாப்பாத்திரங்களை தொடர்புப் படுத்துவது.  எல்லா அத்தியாயங்களும் 'ம' தொடங்கும் வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிப்பது போன்றவை கவனிக்கும் படி இருந்தாலும் ... பாலகாண்டம் ( மூன்றாவது காண்டம்) பேருக்கும் கதைக்கும் நிறைய தொடர்பு இல்லை.

சோழர்களால் சிறை வைக்கப்பட்ட தன் மனைவியைப் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மீட்கச் செய்யும் முயற்சிகள்தான் கதை.

மீட்பு படலங்கள் மேலோட்டமாக இல்லாமல் விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டிருப்பதுதான் கதைக்கு நிறைய பலமும் கொஞ்சம் பலவீனமும்.

ஒரு கட்டத்தில் கொஞ்சம் அலுப்பூட்ட  ஆரம்பித்து விடுகிறது  ... அதற்கு கதையில் உள்ள காதலும் ஒரு காரணம்.

வீர பாண்டியன் மனைவி -  ஒரு சரித்திரக்காதல் கதை என்றுதான் முதலில் எனக்கு அறிமுகம் ஆனது ஆனால் கதையில் இருந்த காதல் என்னை ஈர்க்கவே இல்லை.

கதையின் நாயகன் வீர சேகரன் மற்றும் நாயகி  ஊர்மிளா இருவருக்கும் ஏற்கனவே மணமாகி அவர்களுக்கு மனைவி மற்றும் கணவன் இருக்கிறார்கள்.  என்னதான் ஆசிரியர் அவர்களின் திருமணங்கள் நடைபெற இக்கட்டான சூழ்நிலைகளையும்.. தவிர்க்க முடியாத நிகழ்வுகளையும் விளக்கிக் கூறினாலும்  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .
மற்றும் அவர்கள் இருவரின் தங்கள் தனிப்பட்ட மணவாழ்க்கை  ஏன் இயல்பாகவும் , இன்பமாகவும் .. இல்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

ஆனாலும் ஏனோ அவர்களின் காதல் என் மனதை ஈர்க்கவில்லை.

அவர்கள் உருகி.. உருகிக் காதலித்தாலும் ..அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற பரிதவிப்பு எனக்குத் தோன்றவேயில்லை.

அவர்கள் இருவரும் கடைசியில் மரண தண்டனையில்  இறப்பது  மிகவும் சரியான முடிவாகவே தோன்றியது. அவர்களின் அந்தத் துயர முடிவு கூட  என் மனதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பொதுவாக ஒரு பெரிய நாவலை வாசித்தபின் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கதாப்பாத்திரங்கள் என் மனதை விட்டு அகலாது குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது. வீரபாண்டியன் மனைவியை வாசித்த பின் ஜனநாதன் தவிர எந்த ஒரு பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.. எந்தத்  தாக்கத்தையும் தரவில்லை.


இறுதியாக :

    ஜனநாதன் கதாப்பாத்திரத்தின் பேச்சுக்கள்  மற்றும் கதையில் வரும் பல புரட்சிகரமான கருத்துக்களை பார்க்கும் பொழுது ஆசிரியர் மறுமணத்தை ஆதரித்து வீரசேகரன் மற்றும் ஊர்மிளா கதாப்பாத்திரங்கள் படைத்தாரோ எனத் தோன்றுகிறது. கதை எழுதப்பட்ட காலகட்டமான 1950'ல் இந்த மாதிரி கருத்துக்களை சொல்லுவது மற்றும் எழுதுவது எளிதல்ல.. காரணம் அதுவாக இருந்திருந்தால் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.


4 comments:

  1. அருமை நண்பா

    ReplyDelete
  2. மிக அருமை 👌

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மூன்றாம் பாகம் இல்லாததால் படிக்க முடியாமல் போன நாவலை இப்போது ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். வாசிக்க நெடுநாள் எடுத்துக் கொண்ட நாவல். சரித்திர பிண்ணனியின் நல்ல காதல் கதையாய் இருக்குமென ஏமாந்து போனேன். ஒரு சில விசயங்களை தவிர மிகவும் சாதாரணமான நாவலாய்தான் தோன்றுகிறது. இதை வாசிக்கத்தானா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. . உன்னுடைய விமர்சனத்தோடு முழுவதும் ஒத்துப் போகிறேன். ஏனென்றால் வாசிக்கும் போது எனக்கு தோன்றியதையே கூறியிருக்கிறாய். வீரபாண்டியனின் இரண்டாம் மனைவி என்று அறிமுகமாகும் சேர இளவரசி பாண்டியர்களின் தெய்வம் என புகழப் படும் அளவிற்கு அவர் என்ன செய்தார்.மன்னனையும் அவனது மிகைப்படுத்தப்பட்ட வீர தீரங்களை பற்றியே துதிபாடும் மற்ற வரலாற்று புதினங்களிலிருந்து வேறுபடுவது ஒன்றுதான் சிறப்பம்சம். காத்தவராயனை ஏன் மிகவும் மோசமானவனாக சித்தரிக்க வேண்டும் என புரியவில்லை. அவனும் தேவியின் விடுதலைக்குத்தானே முயற்சி செய்கிறான்..ஜனநாதன் கூறும் கருத்துக்கள் சுவாரசியமாய் மட்டுமில்லாமல்.. தற்போது ஒரு தேசிய கட்சியை ஆதரிப்பவர்களை சாடுவது போல் உள்ளது என எனக்கு தோன்றுகிறது..

    ReplyDelete