Wednesday 11 September 2019

கோவேறு கழுதைகள்



                              கோவேறு கழுதைகள் - இமயம்


சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பு இமயம் எழுதிய நாவல். அவரின் முதல் நாவல். படித்த, இன்றைய நகரத்து மக்களின் பார்வைகளுக்கு எட்டாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் இலக்கியம். கொஞ்சம் பொறுமை தேவை நாவலை வாசித்து அதனுடன் பயணிக்க. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை விட ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். நான் அவ்வாறு சொல்லக் காரணம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட காலணிக்கும் அப்பால்,
காலணிவாசிகளாலும் ஒடுக்கப்படும் 
வண்ணான்களான சவுரி, ஆரோக்கியம் தம்பதியினரின் வாழ்வின் சில பக்கங்கள்தான் கோவேறு கழுதைகள் நாவல். கதையின் நாயகியான ஆரோக்கியமே நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறாள். 

அவர்களுக்கு மிகவும் இயல்பாகி விட்ட, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்,  இந்த காலகட்டத்தில் நாவலை வாசிக்கும் யாவரையும் அதிரவைக்கும். சாவு, சடங்கு, திருமணம், பேறுகாலம் என காலணி மக்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் நிறைந்து இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ (சோறு, தானியம்....) அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மிகவும் சொற்பமாக உள்ளது. பகலில், ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று அழுக்குத் துணிகளை வாங்கி வந்து வண்ணான் குட்டையில் துவைக்கிறார்கள் (தொரப்பாட்டை). இரவில் அதே வீடுகளுக்குச் சென்று, மிச்சம் மீதி உள்ள சாப்பாட்டை வாங்கிவந்து சாப்பிடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த வாழ்க்கை அவர்களுக்கு இயல்பாகிப்போனதும், இதிலிருந்து விலகி வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட  தோன்றாத அளவுக்கு இந்த அடிமைத் தன்மை அவர்கள் வாழ்வாகவே மாறியிருப்பதுமான அவலம்தான் நாவலின் அடிநாதம். 

ஆரோக்கியம், சவரி, மேரி, சகாயம்  ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கிறது. அதுவும் ஆரோக்கியம் அடிக்கடி சொல்லும் "வண்ணாத்தி மவ வந்திருக்கிறேன் சாமி",  "இந்த வண்ணாத்தி மகளை மறந்திடாதீர்கள் சாமி"  வார்த்தைகள் நாவலைப் படித்து முடித்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தோனியார் கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் பணம் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் உச்சக்கட்ட லட்சியம். மேரி, பாலியல்ரீதியான துன்பம் அனுபவித்து, அதனை ஆரோக்கியம் மட்டும் மேரி அணுகும் முறையைப் படிக்கும் போதே மனம் கசிகிறது. ஆரோக்கியம் தன்னுடைய இயலாமையை நினைத்து எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் அவர்களின் நிலைமை அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

சவரி சின்னப் பிள்ளையாக இருந்தபோது 'ஒலவத்துல சண்ட ஆரம்பிச்சிக்கிச்சி' என்று மீசை முளைக்காத, படிக்கத் தெரியாதவர்களையெல்லாம் இழுத்துப் போனார்கள். அவன் எப்போதாவது உலகச் சண்டை பற்றி நினைப்பான். 'இந்த ஊருக்கு வெளுக்க ஆள் இல்லாமல  பூடுமே!' என்று வருந்துவான். இந்த வரிகளைப் படிக்கும் போது சவரியின் அப்பாவித்தனத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. 

வேலை எதுவும் செய்யாமல் மினுக்கிக் கொண்டு இருக்கும் மருமகள் சகாயத்தை ஆரோக்கியத்துக்குப் பிடிக்கும். சமயம் கிடைக்கும் போது எல்லாம் சகாயத்தின் தோலின் நிறம், வடிவம், முடி  பற்றியெல்லாம் ஊராரிடம் பெருமையாகச் சொல்லுவாள். ஆனால் தனக்குப் பிடித்திருக்கும் விசயம் சகாயத்திற்க்குத் தெரிந்துவிடுமோ அஞ்சியே சில நேரம் அவளிடம் சண்டை போடுவாள். இந்த வரிகள் எனக்குத் தெரிந்த ஒருவரை ஞாபகம் வரச் செய்தது. சிறுவயதில் நானும் இவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்திருந்தாலும் நிகழ்வுகள் அதிகம் ஞாபகம் இல்லை. 


இறுதியாக:

பொதுவாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை கதையின் நாயகர்களாக நாவல்களில் முடிவிலோ அல்லது இடையிலோ  அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வாக ஆசிரியர் தன் புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தி விடுவார். அதுவே அரசியலாக்கப் பட்டுவிடும். அவ்வாறு ஏதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக  நாவலை முடித்து இருப்பது மாறுபட்டு உள்ளது. எனினும் அவர்களது பிள்ளைகள் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் வழியைத் தாமே அமைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருந்தது இந்த அவலங்களுக்கு நேர்மையான ஒரு தீர்வை முன்வைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 


2 comments:

  1. அருமை ஜெகன்

    ReplyDelete
  2. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை பற்றி பல நாவல்கள் இருந்தாலும் இது குறுப்பிடத்தக்க ஒன்று.... உங்கள் விமர்சனம் அருமை. மேலும் எழுதுங்கள்.

    ReplyDelete