Thursday 8 August 2019

கடல்புரத்தில்



                            கடல்புரத்தில் - வண்ணநிலவன்




       கதைக்களம் மணப்பாடு என்று
தெரிந்தவுடன் இந்த நாவலை வாங்கிவிட்டேன். நமக்குக் கொஞ்சம் பரிட்சியமான  இடம்  என்பதால். இதுவும் சிறிய நாவல்தான். கதையில் வரும் ஊர்களான உவரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் என எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பழகிய இடங்களாக இருப்பது ஒருவிதமான நெருக்கத்தை நாவல் வாசிக்கும்போது கொடுக்கிறது. மீனவ குடும்பங்களின் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

மிக்கேல் குருஸினை அவரது மகன் செபஸ்தி, அவரின் வல்லம் மற்றும் வீட்டை விற்று விட்டு, ஆசிரியர் வேலை பார்க்கும் ஊரில் தன்னுடன் வந்தது இருக்குமாறு அழைக்கிறான். குருசுக்கு அதில் விருப்பம் இல்லை கடைசிவரை தன் வல்லத்தை விடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். கடைசி மகள் பிலோமியோ தன் தந்தைக்குப் பிடிக்காத லாஞ்சிகாரர் ஒருவரின் மகன் சாமிதாஸை காதலிக்கிறாள். தான் விரும்பும் சாமிதாஸ்வுடன் தனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை எனத்  தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பு கொண்டு ஒரு கட்டத்தில் தன்னையே இழந்தாலும்,  பின்பு அவனின் பலவினங்களை தன் தோழி ரஞ்சியின் உதவியினால் யதார்த்தமாக ஏற்றக் கொள்கிறாள். தோழி ரஞ்சி மற்றும் அவளது அண்ணன் செபஸ்தி  காதலும் நிறைவேறவில்லை அந்த காரணம் கதையில் சொல்லப்படவும் இல்லை. அந்த ஊரில் உள்ள வாத்திக்கும், தன் தாய் மாரியம்மைக்கும்  இடையேயான நட்பினால்  பிலோமி அந்த வாத்தியை வெறுக்கிறாள். ஆனால் குடிபோதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, ஒரு கட்டத்தில்  மன உளைச்சலில் இருக்கும் பிலோமிக்கு அந்த வாத்தியுடன் நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் பிலோமி நாளை வாத்தியின் வீட்டுக்கே போய்விடப் போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை நமது ஊகத்திற்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். 

நாவலில் கடற்கரை கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின்  (வல்லம் - லாஞ்ச்)  விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள், உரசல்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப உரையாடலாக உள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே ஆன பந்தம், வலத்தின் மீது அவர்களுக்கு உள்ள பாசம்  என அவர்களின் வாழ்க்கையைக் கண் முன்னே காட்டுகிறார். ஒரு சமயத்தில் தன் மனைவியைப் பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றொரு சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்கிடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்கு நாவலில் சில நெருடல்களும் தோன்றியது... மிக்கேலின் நண்பன் ஐசக் தன் மனைவியை விரட்டி விட்டு பிலோமியை அடைய நினைப்பது, ஒரு சூழ்நிலையில் மிக்கேலிடம் கையாளாக இருக்கும் சிலுவையடியான் அவள் மீது ஆசைப் படுவது. மேலும் பிலோமிக்கு தான் வெறுக்கும் வாத்தியுடன் நெருக்கமான நட்பு ஏற்படச் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு மிகவும் அழுத்தமானதாக  இல்லை. ஆண்களுக்கு உள்மனதில் தோன்றும் சலாப ஆசைகளைத்தான் ஆசிரியர் வெளிச்சம் படுத்தியுள்ளார் எனவும் சிலரின் கருத்து உள்ளது. 

இறுதியாக :

     இந்த நாவல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செந்தாமரை, சோ, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்து தொடராக வந்துள்ளது. எனக்கும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. மீண்டும் அதைப் பார்க்க வீடியோக்களை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை யாருக்காவது கிடைத்தால் தெரியப்படுத்தவும். 


1 comment: