Sunday 15 September 2019

ஒரு புளியமரத்தின் கதை



                       ஒரு புளியமரத்தின் கதை - சு.ரா



சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல்தான் நான்  வாசித்த தமிழ் இலக்கியத் தரம் அளவுக்குள் வரும் முதல் நாவல். அது என்ன அளவுகோல் எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஒரு புளியமரத்தின் கதைதான் சு.ராவின் முதல் நாவல் கூட. இதனை சில வருடங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். பொதுவாக கல்கியின் சரித்திர நாவல்களைத் தவிர எந்த நாவலையும் பலமுறை வாசித்தது கிடையாது. நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் கதை என்பதும் தற்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருப்பதும் மற்றொருமுறை வாசிக்கத் தூண்டியது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது நடக்கும் கதை. புளிக்குளத்தின் மத்தியில் நிற்கும் புளியமரத்தை மையப்படுத்தி, அதனின் வாழ்தலும், வீழ்ச்சியும்தான்  கதையின் களம். புளியமரம் தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் சூழ்ச்சிகளையும், சுயநல போக்குகளையும் எதுவும் செய்ய முடியாமல் மெளனசாட்சியாய் நின்று நோக்குகிறது. முதலில் புளியமரத்தின் பழங்கதையினை  தாமோதர ஆசான், ஆசிரியரிடம் கூறுவது போலவும் பின்பு பிற்கால கதையை, ஆசிரியர் அவரின் பார்வையில் கூறுவது போலவும் உள்ளதது. ஆசானின் ஆர்ப்பாட்டமாய் கதைசொல்லும் பாணி, செல்லத்தாயின் மரணம், ஆசான் தனது சமயோசித புத்தியால் மரத்தை வெட்டாமல் காப்பாற்றுவது  என இதர நாவல்களை விடத் தனித்துப் பயணிக்கும் கதைக் களம் பின்பு இரண்டு வியாபாரிகளின் தொழில் போட்டி, தகராறு எனக் கொஞ்சம் இயல்பான நடைக்கு வந்தது விட்டது போல் எனக்குத் தோன்றியது. இது என்னுடைய பிரத்தியேக அனுபவம்தான். ஏன் எனில் சிலர் சண்டைக்கு வந்து விடலாம் நாவல் தொட்டிருக்கும் இலக்கியச் சிகரங்களையும், அதனுள் விவரிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் ஆழம் பற்றி ஆராயும் தகுதி  உனக்கில்லை என.

புளியமர  ஜங்ஷனில் கடைகள் வைத்திருக்கும் தாமு மற்றும் அப்துல் காதருக்கும் சிறு சிறு பொறியாகக் கிளம்பும் பகை பின்பு சிலரின் தூண்டுதலால் பெரிதாகி எவ்வாறு அந்தப் பகுதியின் அமைதியின்மைக்கே காரணமாகிறதென்றும், இரு தனி மனிதர்களின் தொழில் போட்டிப் பொறாமை எவ்வளவு தூரம் மதப் பிரச்சினையாகவும், அரசியலாகவும் உருவாக்கப் படலாம் என்பதனைக் காண்கிறோம். இடையில் பத்திரிக்கைகளின் ஒரு சார்ப்புத் தன்மை, ஜாதி மற்றும் மத ஓட்டு வங்கி அரசியல் எனச் சம காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. எதிர்த் தரப்பு புளியமரத்தை வெட்டத் திட்டம் தீட்ட, தாமு தரப்போ இரவோடு இரவாக மரத்தை சாமியாக்கி விடுகிறது. கடைசியில் மனிதர்களின் சுயநல சூழ்ச்சிகளுக்கு  முன்னால் எப்படி இயற்கை (புளியமரம்) போராட முடியாமல் தோற்றுப் போகிறது என்பதே சோகமான முடிவு. இன்று வரை புளியமரம் ஜங்ஷன் என்ற பெயர் மட்டும் மாறாமல் இருப்பது, ஆசானுக்குக் கிடைத்த சின்ன வெற்றியாக இருக்கலாம்.

நாவலில் உள்ள சில தகவல்கள் எனக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அப்போது இங்குள்ள M.L.A சட்டமன்ற கூட்டத்தில் கலந்தது கொள்ள திருவனந்தபுரம் செல்வது.  ராணித்தோட்டம் (மேற்றி ராணியார்) இடத்தின் பெயர்க் காரணம். மருத்துவா மலையின் சாரலில், அந்த காலத்தில் பறையன் குன்று எனச் செம்மண் குவிந்து கிடந்ததாம். அந்த மண்ணைக் கொண்டுதான் புளிக்குளத்தை நிரப்பி புளியமரத்தைச் சுற்றி ரோடு போட்டார்களாம். பின்பு குளத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நகரப் பூங்காவாக மாற்றப்பட்டதாம். நாகர்கோயில் நகரத்துடன் சிறுவயதிலிருந்தே தொடர்பு இருந்தாலும் ஒருமுறை கூட நான் அந்த பூங்காவிற்குச் சென்ற ஞாபகமில்லை. 


இறுதியாக :

வேப்பமூடு ஜங்ஷன் என்று இன்றும் நாகர்கோவிலில் சொல்லப்படும் இடமே நாவலில் வரும் புளியமர ஜங்ஷன். புளியமரம் என்பது எங்கள் ஊரில் நிற்கும் வேப்பமரம் என சு.ரா வே தன்னுடைய ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். கதையின் வசதிக்காக வேப்பமரத்தை சு.ரா, புளியமரமாக அதனை மாற்றி இருக்கலாம். வேப்பமரம் எனில் காய்களைக் குத்தகைக்கு விடுதல், தோட்டிகள் கல்லெறிந்து காய்களைக் கவர்வது போன்ற நிகழ்வுகளை நாவலில் வைக்க முடியாதே.

1 comment: