Friday 14 February 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்


           சில நேரங்களில் சில மனிதர்கள்
                                             - ஜெயகாந்தன்




இதுவே நான் வாசித்த  முதல் ஜெயகாந்தன் நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். 1972'ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். அவர் எழுதிய அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் தாக்கம்தான் அவரை இந்த நாவலை எழுதத் துண்டியது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போதெல்லாம் மனிதர்களின் உளவியலை பேசும் நாவல்கள்தான் என்னை மிகவும் கட்டிப்போடுவது போல் உணர்கிறேன். அத்தகைய நாவல்களை வாசித்துவிட்டு அதன் தாக்கத்திலிருந்து விடுபடக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகிறது. ஏன் சில இரவுகளின் தூக்கத்தை குறைக்கிறது. 



 ஒரு இக்கட்டான சூழ்நிலை மற்றும் குழப்பமான மனநிலையில் யாரென்று தெரியாத ஒருவனிடம் தன்னை இழந்துவிட்ட கங்காவை, அவளது சகோதரன் கணேசன் வீட்டை விட்டே அடித்துத் துரத்துகிறான். வெங்கு மாமாவின் உதவியால் கல்லூரி படிப்புகளை முடித்து நல்ல வேலையில் சேர்ந்தது தன் அம்மாவுடன் தனியே வசிக்கிறாள்.

 வெங்கு மாமாவின் சில்மிஷ செயல்கள், எகத்தாள பேச்சால் 12 ஆண்டுகளாக தனக்குத்தானே சிறை அமைத்துக் கொண்டு வாழும் கங்கா தன்னை சிதைத்தவனை எழுத்தாளர் ஆர்கேவி மூலமாக (பிரபுவை)  தேடிக் கண்டுபிடிக்கிறாள். பிரபுவை மீண்டும் ஒரு மழைநாளில் சந்திக்க, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கும் அவனிடம் பரஸ்பரம் நட்புக் கொள்கிறாள். இந்த சந்திப்புக்கு இருவரும் வரும் மனநிலையே அந்த நட்புக்கு அடித்தளமாக அமைகிறது என்பது எனது எண்ணம். அவளோ அலட்சியமாக அவனைப் பார்க்க வருகிறாள், அவனோ மனதில் ஒரு சின்ன நப்பாசையுடன் (பொதுவாக ஆண்களுக்கே உரிய) வருகிறான். அவர்களின் அந்த சந்திப்பதை ஜெயகாந்தன் எழுதியிருக்கும் விதம் fantastic. 

 அதன்பின் இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவனுமாக வந்து போகிறார்கள். இந்த நட்பு அவர்களின் வாழ்க்கை முறையிலும் சில நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்கள் இப்படி நட்பாகப் பழகுவதை எவரும் ஏற்கத் தயாராகவில்லை. பிரபுவின் மகள் மஞ்சுவுக்கும் கங்காவுக்கும் ஒரு புரிதல் நிகழ்கிறது. கங்காவின் மனது மெதுவாகப் பிரபுவின் தோழி என்ற ஸ்தானத்திலிருந்து உண்மையிலே  "கான்குபைனாக (concubine)" மாறத் தயாராகிறாள்.

 எழுத்தாளர் ஆர்கேவி  மூலமாக ஒரு வரன் சம்பந்தம் வர எல்லோரும் கங்காவை திருமணம் செய்து கொள்ள வலியிருத்துகிறரகள். பிரபு கூட "நான் வராம இருந்தால்தான் நீ கல்யாணம் பண்ணிப்பேன்னா, நான் இனிமேல் வரவே இல்ல. பாக்கவே இல்ல"  என்று அவளிடம் சொல்லுகிறான். இதனால் மனமுடையும் கங்கா எடுக்கும் முடிவுதான் நாவலின் நிறைவு.

 கங்காவே தன் கதையைச் சொல்வதாக நாவலை ஜெயகாந்தன் எழுதியுள்ளார். சுயவிருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி என கங்காவின் மன ஓட்டத்தின் மூலமாக பெண்களின் உளவியலை மிக அருமையாகச் சொல்லுகிறார். நாவலிருந்து நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே போகலாம் ஆனால் நாவலை வாசித்தால் மட்டுமே அதனை முழுமையாக உணரமுடியும். ஸ்ரீகாந்த், லட்சுமி நடிப்பில் திரைப்படமாகவும் வந்துள்ளது (Available on YouTube). கங்காவாக நடித்த லட்சுமிக்குச் சிறந்த நடிகைக்கான National Award கிடைத்துள்ளது. 


இறுதியாக : 

 முதலில் இந்த நாவல் காலங்கள் மாறும் என்ற தலைப்பில்தான் வந்துள்ளது. அதன்பின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என மாற்றப்பட்டது. உண்மையில் இந்த தலைப்புதான் நாவலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. 


3 comments:

  1. மிக அருமை 👌

    ReplyDelete
  2. திரைப்படத்தை பார்த்தேன். நாவல் தரும் முழுஉணர்வைத் தந்ததா எனக் கூறமுடியவில்லை ஆனால் லட்சுமியின் நடிப்பு அருமை.

    ReplyDelete