Sunday, 2 August 2020

சிந்து முதல் கங்கை வரை



                         சிந்து முதல் கங்கை வரை 
                                                     - ராகுல சாங்கிருத்தியான்

     
 
  ராகுல சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை புத்தகம் மீண்டும் தந்த வாசிப்பு அனுபவம் அவர் எழுதிய சிந்து முதல் கங்கை வரை நாவலை வாசிக்கத் தூண்டியது. எங்கள் வீட்டில் 1988 'லிருந்து  இந்நாவலிருந்தாலும் நான் முன்பு வாசித்ததில்லை. வால்கா முதல் கங்கை வரையில் இடம் பெற்றிருக்கும் பந்துல மல்லன் (புத்தர்) காலத்துக் கதையை சிம்ஹ சேனாதிபதி என்ற தலைப்பில் அந்த புத்தகத்திற்கு முன்பே எழுதிய நாவலிது. வால்கா முதல் கங்கை கிடைத்த வரவேற்பு, புகழினால் பின்பு இந்த நாவலின் தலைப்பைச் சிந்து முதல் கங்கை வரை என மாற்றி விட்டார்கள் என்றெண்ணுகிறேன்.

    வைசாலி நாட்டை சேர்ந்த லிச்சவி இன இளைஞன் சிம்மன், தட்சசீலத்திற்கு வந்து ஆச்சாரியார் பஹுளாஸ்வரரிடம்  மாணவனாகச் சேருகிறான். பல நாட்டை சேர்ந்த இளைஞர்களும் போர்ப் பயிற்சி முறைகளை அவரிடம் கற்று வருகிறார்கள். அக்காலகட்டத்தில் தட்சசீலம் மற்றும் வைசாலியில் குடியாட்சியும் மற்ற தேசங்களில் முடியாட்சியும் நடைபெறுகிறது. பலவித கலைகளையும் திறம்பட கற்றுத் தேறும் சிம்மனை உதவி ஆசிரியனாக நியமிக்கிறார்.  ஆச்சாரியாரின் மகள் ரோகிணியும் அவன் மீது காதல் கொள்கிறாள். பாரசீக மன்னன் தட்சசீலம் மீது படையெடுத்து வர சிம்மன் மற்றும் மேலும் சில வைசாலி நாட்டு மாணவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து பாரசீக படையைத் தோற்கடிக்கிறார்கள். சிம்மனின் சேவையை, வீரத்தைப் பாராட்டி ரோகிணியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதுடன் தட்சசீல குடியுரிமையும் அளிக்கிறார்கள். 

   சில மாதங்கள் கழித்து வைசாலி திரும்ப முடிவு செய்யும் சிம்மனோடு, தட்சசீல வீரன் கபில் தலைமையில் ஒரு நல்லிணக்க குழுவும் பரிசுகளோடு கிளம்புகிறது. மகத நாட்டு மன்னன் பும்பிசாரனின் மகன் அஜாதசத்ருவின் தூண்டுதலால் வைசாலி மீது போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் அவர்கள் வைசாலியியை வந்தடைகிறார்கள். வைசாலி குடியரசு சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறும் சிம்மனை தட்சிண சேனைத் தலைவனாகவும் நியமிக்கிறார் குடியரசுத் தலைவர் கணபதி சுனந்தர். சிம்மனின் யோசனைக்கு ஏற்ப இராணுவத்தில் பெண்களும் சேர்க்கப்பட்ட அதற்கு அவனது அண்ணி பாமா தலைமைத் தாங்குகிறாள். சிம்மன் மற்றும் கபிலின் வியூகங்களால் மகத படைப் போரில் தோல்வித் தழுவ சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

    சிம்மன் சேனாதிபதியாகப் பதவி உயர்வு பெறுகிறான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கௌதம புத்தரும் மகாவீரரும் வைசாலிக்கு வர, சிம்மன் ஜைனவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அஹிம்சை, புலால் மறுப்பு என மாறுகிறான். ஆனால் சுற்றியுள்ள அனைவரும் புத்தரின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்ய, புத்தரை ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் அவனது ஆவலை  ஜைன மதாச்சாரியார் தடுத்து விடுகிறார். இறுதியில் அவரை மீறி கௌதம புத்தரைத் தரிசிக்கச் செல்கிறான். அங்குப் புத்தரின் மோகன சக்தியில் கட்டுண்டு அவரின் கோட்பாடுகளை அறிந்து, புரிந்து பௌத்த தர்மத்தில் சரணடைந்து விடுகிறான். 

  முழு நாவலையும் உரை நடை பாணியிலே ராகுல சாங்கிருத்தியான் நகர்த்துகிறார்.  இதிலும் தன்னுடைய பல கருத்துக்களைப் புகுத்தி குடியாட்சி முறையைத் தூக்கிப் பிடிக்கிறார். ஆரியர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டதாலே குடியாட்சி ஒழிந்து முடியாட்சி தோன்றியதாகக் கூறுகிறார். ஜைனவ மற்றும் புத்த சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கி பௌத்த மார்க்கம் புலால் உண்ணுபவதைத் தடுப்பதில்லை என்கிறார். பாமா கதாபாத்திரம் மூலம் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே.. அவர்களாலும் எதனையும் பேசவும், செய்யவும் முடியும் என முன் வைக்கிறார். மொத்தத்தில் நாவல் கொஞ்சம் சாண்டில்யன் டைப் கதைதான் (நினைவில் கொள்க -ராகுல சாங்கிருத்தியான்தான் சாண்டில்யனுக்கு முன்னோடி). கதாநாயகன்தான் எதனையும் தனியாக (சில பெண்களின் உதவியோடும் 😍) செய்து முடிக்கும் One man Show நாவல்தான். யூகிக்கும் வகையிலே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலில் ஆசிரியர் வைத்த ஒரே முடிச்சு போரில் மகத நாட்டின் பட்டத்து யானையை அடக்கிய வீரனைப் பற்றியதுதான்😛.  வால்கா முதல் கங்கை வரையை மனதில் கொள்ளாமலோ அல்லது சிந்து முதல் கங்கை வரை முதலில் வாசித்திருந்தாலோ இந்நாவலைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மாறுபட்டு இருந்திருக்கலாம். 

இறுதியாக :

  இந்த நாவலிற்கான குறிப்புக்களை  எடுத்த பழங்கால 1600 செங்கற்கள் இன்றும் பாட்னா மியூசியத்தில் இருப்பதாக தன் முன்னுரையில் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார். செங்கற்கள் அவருக்குக் கிடைத்த நிகழ்வையே மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். என்ன எனக்குத் தெரிந்த பும்பிசாரன் வைசாலி நாட்டை சேர்ந்த இளவரசி செல்லானாவையும் மணந்தவர் தன் மகன்  அஜாதசத்ருவால் சிறை பிடிக்கப்பட்டு அங்கே உயிர்நீத்தவர். 

Thursday, 23 July 2020

வால்கா முதல் கங்கை வரை



                    வால்கா முதல் கங்கை வரை 
                                  -  ராகுல சாங்கிருத்தியான்


ராகுல சாங்கிருத்தியான் 1942'ல் எழுதிய வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தை நான் கல்லூரி நாட்களிலே வாசித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகம் தந்த அனுபவம். ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் அனுபவத்தை சேப்பியன்ஸ் தரும் ஆனால் வால்கா முதல் கங்கை வரையோ ஒரு நாவலை வாசித்த உணர்வைத் தரவல்லது. காரணம் சுமார் எட்டாயிரம் ஆண்டுகாலமாக மனித சமுதாயத்தில் மெல்ல மெல்ல நடந்த நிகழ்ந்த மாற்றத்தினையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நிகழ்வுகளின் பின்னணியில் இருபது தலைப்புகளில் சிறுகதைகளின் வடிவாக ஆசிரியர் எழுதியிருப்பது.

இருபது கதைகளில் முதல் பத்து கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தையும், அடுத்த பத்து கிறிஸ்துக்கு பிந்தைய காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது. கி.மு 6000'வில் வால்கா நதிக்கரையில் ஆரம்பித்து கி.பி 1942'வில் கங்கை நதிக்கரையில் முடிவடைகிறது. ஒவ்வொரு கதையும் தனித்தனியே என்ன பேசுகிறது என்பதைவிட பொதுவாக எதைப்பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

  இனக்குழுவாக இருந்த மனிதர்கள் உணவுக்காக வேட்டையாட இடம் பெயர்வது அதனால் மற்ற குழுவினரோடு ஏற்படும் மோதல். காலமாற்றத்தோடு மோதலின் போது பயன் படுத்திய ஆயுதங்களின் உருமாற்றம்.. தாய் வழிச் சமுகமாக வளர்ந்து வந்த மனிதச் சமுதாயம் நாளடைவில் எவ்வாறு ஆண்களால் பெண்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி இறுதி கதைகளில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பொருமுகிறார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட சொத்துரிமை, உடன்கட்டையேறுதல் ஏன் பிரிட்டனில் கூட பெண்களுக்கு அப்பொழுது ஓட்டுரிமைக் கிடையாது. 

  வால்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆரியர்களை விட இந்தியாவில் முன்பே வாழும் அசுர (திராவிடர்கள்) இனமக்களின் கலாச்சாரம் மேம்பட்டு இருந்ததாகக் கூறினாலும் அவர்களது மன்னர் ஆட்சி முறை, மன்னரையே தெய்வமாக நினைப்பது, அடிமைகள் முறை போன்றவற்றால் எண்ணங்களால் மேம்படவில்லை என்கிறார். ஆரியர்கள் அசுரர்களின் லிங்க வழிப்பாட்டை வெறுத்தாலும் பின் நடந்த இனகலப்பில் அதனை அவர்களும் பின்பற்ற ஆரம்பித்து மன்னர் ஆட்சி, புரோகிதர் கலாச்சாரத்தில் ஒன்றிவிடுவதை விவரிக்கிறார். அசுரர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகங்களைச் செய்ததாக முன்வைக்கிறார். குதிரை, பசு மாமிசங்களும், சோமபானமும் எல்லோராலும் பொதுவாக உண்ணக்கூடிய சாதாரண செயலாகவே இருந்துள்ளது. 

 குப்தர்களின் காலகட்டத்தில்தான் மக்களின் பஞ்சாயத்து (குடியாட்சி) முறை ஒழிக்கப்பட்டு,  பிராமணர்களின் கைகள் ஓங்கி சர்வாதிகாரம் பெற்ற மன்னராட்சிக்கு அடித்தளம் ஏற்பட்டதாக விமர்சனம் செய்கிறார். மன்னர்களைப் புகழ்ந்து வர்ணித்து அவர்களைக் காவியத்தலைவனாகக் கொண்டு இதிகாசங்களும், காப்பியங்களும் படைக்கப்பட்டதாகவும் கூறுபவர், ஜெயச்சந்திர மகாராஜாவை (பிருதிவி ராஜனின் மாமா) பற்றி எழுதியவற்றை இப்பொழுது யாராவது எழுதியிருந்தால் சிலர் பெரிய கலவரத்தையே தோற்றுவித்திருப்பார்கள். கில்ஜியும், அக்பரும் சமூக நீதியோடு ஆட்சி செய்ய முயற்சி செய்ததாகக் கூறுகிறார். 

   மங்கள சிங் கதை மூலம் சிப்பாய் கலகம் தோல்வியில் முடிய அதனை முன்னின்று நடத்தியவர்களின் சுயநலம்தான் என விமர்சிக்கிறார். நாமெல்லாம் பாடங்களில் படித்த, கேட்ட தோட்டாக்களின் உறையில் கொழுப்புத் தடவப்பட்ட நிகழ்வை ஆங்கிலேய எதிர்ப்பாளர்களின் உணர்வுகளைத் தூண்டப் பரப்பப்பட்ட வதந்தி என்பவர் ஆங்கிலேய அரசு மற்றும் கவர்னர்கள் மீது மிகத் தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்ற மகாத்மா காந்தியை மதித்தாலும் அவரின் சில செயல்பாட்டை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு எண்ணங்கள் எனச் சாடுகிறார். காந்தி மீது இந்துத்துவவாதி முத்திரையைக் குத்த ஆசிரியர் முயல்கிறாரோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. ஆரியர் கலப்பு, இஸ்லாமியர் கலப்பு, ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விவரிப்பவர் இன்று ஆரியர் என்று தனியாக யாரும் கிடையாது அந்த அளவிற்கு இரத்தக் கலப்புகள் நடைபெற்று விட்டது என்கிறார்.

  ராகுல சாங்கிருத்தியானின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமைக்குக் கொள்கைகள் மீது கொண்ட தீராப் பற்றும், அவரின் அரசியல் நிலைப்பாடும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்து முறையைத் தூக்கிப்பிடிக்கிறார். சரித்திரத்தைக் கதை உருவில் தந்திருப்பதால் எளிதாக நம்மால் அந்தந்த காலகட்டத்தோடு சுவாரஸ்யமான பயணிக்க முடிந்தாலும் சிலருக்கு ஆய்வு நூலில் புனைவுகள் இருக்கலாமா என்ற தர்க்கம் மனதில் தோன்றலாம். ஆனால் அதன் கற்பனைகளை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பதும் வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்ததே. மனித நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் யாவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது. 

இறுதியாக :

    இப்புத்தகத்தை ராகுல சாங்கிருத்தியானின் தமது சிறை வாசத்தில் 1942'ல் ஜெயிலில் இருந்து கொண்டே எழுதினார். அதனைக் கண. முத்தையா அவர்கள் 1949'ல் ஜெயிலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கல்லூரி காலத்தில் வாசித்தது கண. முத்தையா அவர்களின் மொழிபெயர்ப்புதான். இப்பொழுது வாசித்தது யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு. எனது சகோதரர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும், இருகால கட்டத்திலும் வாசித்த போது என் மனதில் தோன்றிய கருத்து மாறுபாடுகளையும் எழுதுமாறு கூறினார். வாய்ப்பிருந்தால் பின்னொரு முறை கட்டாயம் எழுதுவேன்.


Monday, 13 July 2020

சத்திய வெள்ளம்


                      
                சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி


   1960 - 1970  காலத்தில் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான, குறிஞ்சி மலர், மணிபல்லவம் போன்ற பிரபலமான பல நாவல்களை எழுதிய நா. பார்த்தசாரதியின் ஏதாவது ஒரு நாவலை மீண்டும் வாசிக்க முடிவு செய்தேன். சாகித்திய அகாடமி விருந்து பெற்ற அவரின் சமுதாய வீதி நாவலை வாங்க முயற்சி செய்து தாமதம் ஆனதால் எங்கள் வீட்டிலிருந்த சத்திய வெள்ளம் நாவலை வாசித்தேன். சத்திய வெள்ளம் சமூக நாவல் கல்கி வார இதழில் தொடராக 1972'ல் வெளிவந்தது. வாசிக்க ஆரம்பித்த நேரம் அலுவலக, சொந்த வேலைகள் நேரங்களைத் தின்றுவிட முடிக்கக் கொஞ்சம் (நிறையவே) காலம் ஆகிவிட்டது. அதற்கேற்ப நாவலும் மெதுவாக நகர... அந்த அனுபவம் இறுதியில். 

மல்லிகைப் பந்தல் என்னும் ஊரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாவலின் நாயகன் பாண்டியன் மாணவர் பேரவை செயலாளர் பதவிக்கும், மோகன்தாஸ் தலைவர் பதவிக்கும் போட்டியிட, அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் மாணவர்கள் வெற்றிபெற  ஆளும் கட்சியின் MLA மற்றும் வட்ட செயலாளர் பல சூழ்ச்சிகள் செய்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் அருகில் கடை வைத்திருக்கும் தேசிய இயக்கத்தின் மீது பற்றுகொண்ட அண்ணாச்சி அவர்களுக்கு உதவுகிறார். மாணவிகள் சார்பாக அவர்களின் பக்கம் நிற்கும் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் காதலில் விழுகிறார்கள். மாணவி மேரியின் தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், பின்பு அமைச்சர் கரிய மாணிக்கத்திற்கு டாக்டர் பட்டம் தரப் பல்கலைக்கழகம் முடிவு செய்வதை எதிர்த்தும் முன்னாள் மாணவத் தலைவன் மணவாளன் துணையுடன் கடுமையாகப் போராடும் அவர்களை ஆளும் அரசாங்கம் போலிஸ், குண்டர்கள் மற்றும் துணைவேந்தரின் உதவியுடன் அதிகார துஷ்பிரயோகங்களால் ஒடுக்க முயல இறுதியில் வென்றது யார் என்பதுதான் முடிவு. 

நா. பார்த்தசாரதியே சொல்வது போல் நிகழ்கால சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் நடைமுறைகளை எழுத்துக்கள் தமிழில் குறைவாகவே வருகிறது. அவரின் சமுதாய வீதி நாவலில் நடிகர்திலகம் சிவாஜியை இழுத்திருப்பார். யாருக்கேனும் காரணம் தெரிந்தால் கருத்துகளாகப் பதிவிடவும். இதில் நாவல் எழுதிய காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த திராவிட கட்சியை, ஆட்சியை மறைமுகமாக ஏன்? பல இடங்களில் நேரடியாகவே போட்டுத் தாக்குகிறார். தமிழ் வாழ்க முழக்கம், எதுகை மோனை மேடைப் பேச்சு, ரூபாய்க்கு மூணு படி அரிசி, நிர்வாகங்களில் அரசியல் தலையீடு, தகுதியற்ற அரசியல்வாதிகளின் டாக்டர் பட்ட ஏக்கம் எதையும் விடவில்லை. தேசிய நோக்கமிருந்தாலும் சிலர் வன்முறைப் பாதையில் வழிதவறி போய்விடுகிறார்களே எனவும் சில பாத்திரங்கள் மூலமாக வேதனைப்படுகிறார். காந்தியம், நேருவென எழுத்துகளால் உருகுபவர் காமராஜரை (ராம்ராஜ்) ஒரு  சின்ன பாத்திரமாக நுழைத்துவிட்டார். கதிரேசன், பேராசிரியர் பூதலிங்கம், பொழில் வளவனார், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு, இராவணசாமியும் நாவலில் வரும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை இன்றும் நமது முன்னால் வேறு பெயர்களில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். நாவல் தோலுரிக்கும் அனைத்து சம்பவங்களும், அரசியல் நிர்வாக தலையீடுகளும் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

நாவலின் பெரிய பிரச்சினை ஒருவழிப்பாதையாக எளிதாக ஊகிக்கும் வகையில் பயணிப்பதுதான். அண்ணாச்சி பாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருந்தாலும் அதுபோல் ஒருவர் வாழ முடியுமா? இவ்வளவு உதவிகள் மாணவர்களுக்குச் செய்யக் காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆசிரியரின் நிறைவுரை நம்பிக்கையான "வாசகர்கள் வேறெந்தப்  பொழுதுபோக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இந்த நாவலை வாசிக்கும்போது அடையலாம்"  எனக்குப் பொய்த்துப்போனது. 

இறுதியாக: 

சத்திய வெள்ளம் நாவலின் நாயகன் சத்திய வேட்கையோடு, ஆவேசமாக வலம் வந்தாலும் அந்த உணர்வை வாசிக்கும் எனக்கு நா. பார்த்தசாரதியின் எழுத்துக்கள் அப்படியே உள்வாங்க வைக்கவில்லை. அதனால்  கடினமான நாவல்களை விட இந்நாவல் மிகுந்த அயர்வைத் தந்தது. இந்த நாவலை வாசிக்கும் பயணத்தைப் பாதியிலே நிறுத்திவிடலாம் என்றெண்ணிய மனதை என் தாயார் தந்த ஊக்கம்தான் மாற்றியது.