Saturday, 25 September 2021

குருதிப்புனல்

 

                          குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

         

       சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை வாங்கினேன். 1968'ல் கீழவெண்மணி என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தை உள்வாங்கி அவர் எழுதிய நாவல். 1977'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றாலும் சில விமர்சனங்களையும் ஒருங்கே பெற்ற நாவல் குருதிப்புனல்.

                 டெல்லியில் ஒன்றாக இருந்தது விட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், தஞ்சை பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்துவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி சிவா வருவதுடன் தொடங்குகிறது நாவல். கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும், காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கண்ணையா நாயுடுவின் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கூலியை உயர்த்தி தர ராமையா போராடுகிறார். ராமையாவின் வீட்டில் தங்கியிருந்து கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டியின் மகன் வடிவேலு நடத்தும் டீக்கடையில் சாப்பிட்டு வருகிறான் கோபால். கோபாலைச் சந்திக்கும் சிவா அவனுடன் சிலநாட்கள் தங்கிச் செல்ல நினைக்கிறான். வடிவேலுவின் மீதுள்ள கோபத்தினால் அவனுடைய டீக்கடையை காலி செய்யும் முயற்சிகளைக் கண்ணையா நாயுடு முன்னெடுக்க அவனுக்காக அவரிடம் பேசுகிறான் கோபால். 

                கண்ணையா நாயுடு அவனின் சமாதான முயற்சிகளை ஏற்றக்கொள்ளாததால் கோபத்தில் அவரின் ஆண்மை பற்றிப் பேசிவிடுகிறான் கோபால். அதனால் மிகுந்த கோபம் கொள்ளுபவர், கோபாலை ஆள் வைத்து அடிக்கிறார். பாப்பாத்தி என்னும் ஹரிஜன பெண்ணை கடத்தி பழியை கோபால் மீது சுமத்துகிறார். பாப்பாத்தியைப் பற்றித் துப்பறிய பங்கஜத்தம்மாள் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஏற்படும் தகராற்றில் கண்ணையா நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படப் பழியை ராமையா மீது போட்டு கைது செய்கிறது போலீஸ். நாயுடு தன் வயலில் வேலை செய்ய வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வர அதில் கோபம் கொண்டு பழனி என்பவன் அவரை அடித்து விடுகிறான். உயர்சாதியில் பிறந்த தன்னை ஒரு பறையன் அடித்து விட்டானே என்று வெறிகொள்ளும் நாயுடு, போலிஸ் துணையோடு பெண்களும், குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். அந்த சம்பவம் கோபாலை வன்முறை பாதையை நோக்கிச் செல்லவைக்கிறது. 

                  பொத்தாம் பொதுவாக வெண்மணி படுகொலைகள் கூலியை உயர்த்திக் கேட்டதால் நடந்த நிகழ்வாகச் சொல்லப்பட்டாலும் என்னால் அவ்வாறு பார்க்க முடியவில்லை. அதற்கான மூலகாரணங்கள், அங்கே வாழ்ந்த மக்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தியது, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது, அவர்களுக்கு எதிராக ஒன்றாக அணிதிரண்டது மற்றும் அரசியில் விழிப்புணர்வுகளும்தான் பண்ணைக்குக் கோபத்தையும் கூடவே பயத்தையும் தந்திருக்க வேண்டும் அதன் எதிர்விளைவே இந்தப் படுகொலைகள். 

                            நாவலின் கரு பலராலும் பாராட்டப்பட்டாலும், ஆசிரியர் சேர்த்துள்ள உளவியல் காரணத்திற்காக விமர்சிக்கவும் பட்டது. ஆண்மைக் குறைவு என்ற காரணத்தை முன்னிலைப் படுத்தியிருப்பதால், சில சமயம் வாசிப்பவர்களுக்கு ஆண்டவன் தந்த குறையைத் திருப்பி திருப்பி சொல்லிச் சீண்டியதால், கடுப்பில் தீ வைத்து விட்டார் என்றும் தோன்றலாம் அது ஆசிரியரின் எண்ணம் இல்லையெனினும். டெல்லியிலிருந்து அந்த கிராமத்திற்கு வரும் இரு  படித்த இளைஞர்களின் கண்களின் வழியாகப் பெரும்பகுதி பிரச்சினைகள் பார்க்கப்படுவது இந்திரா பார்த்தசாரதி வசதியாக இருக்கிறது. காரணம் அவரும் அதே பின்னணியில் உள்ளவரென்பதால். நாம் செல்ல வேண்டிய பாதைகள் இன்னும் அதிகம் இருப்பினும், நாம் கடந்து வந்த பாதைகளை அறிய வாசிக்க வேண்டிய நாவல்தான்.

இறுதியாக :

        கீழவெண்மணியில் 44 தலித்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குருதிப்புனல் தவிரச் சோலை சுந்தரப்பெருமாளின் "செந்நெல்", பாட்டாளி எழுதிய "கீழைத்தீ" ஆகிய நாவல்களும் வந்துள்ளது. மேலும் குருதிப்புனல் நாவலைத் தழுவி ராஜேஷ், பூர்ணிமா நடிப்பில் 1983'ஆம் ஆண்டு "கண் சிவந்தால் மண்  சிவக்கும்" என்ற திரைப்படமாகவும் வந்துள்ளது.

Monday, 16 August 2021

விசாரணைக் கமிஷன்

 

                   விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி               



    சா. கந்தசாமி அவர்களின் சாயாவனம் நாவலைப் பற்றி பலர் சிகாலித்துக் கூறுவதை அறிந்துள்ளேன். நீண்ட காலமாக அதனை வாசிக்க எண்ணுகையில் 1998'ஆம் சாகித்ய அகாடமிவிருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைத்தது. அதனால் அதனை முதலில் வாசித்து என் எண்ணங்களை எழுதியுள்ளேன். 

              நாவலின் கதாநாயகன் &  நாயகி தங்கராசும், ருக்குமணியும்தான். கணவன் தங்கராசு அரசாங்க பஸ் கண்டக்டர், மனைவி ருக்குமணியோ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. அவர்களின் அன்னியோன்னியமான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக அவர்களின் நினைவோடைகளின் வாயிலாக நாவலை சா.கந்தசாமி எழுதியுள்ளார். தங்கராசு, ருக்குமணியிடம் கோபப்படுவது பின்பு அவனே சமாதானம்தான் ஆகி அவளிடம் பேசுவதும் இயற்கையாக உள்ளது. குழந்தை இல்லாததை ஒருபோதும் தங்கராசு குறையாக ருக்குமணியுடன் பேசுவதில்லை.

                         நினைவோடு சம்பவங்களால் நாவல் பல காலகட்டத்திற்குப் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் பேச்சுக்கு நடுவையே காலத்தைப் பதிவு செய்யும் ஆசிரியரின் எழுத்து நுணுக்கம், நம்மைக் கதையினுள் ஈர்த்து விடுகிறது. பாரதிவாணன், ருக்குமணியை பாராட்டும் பொழுது "உங்க கலைத்திறமையை வைத்துத்தான் அறிஞர் அண்ணாவிடம் கையெழுத்து வாங்கப் போகிறேன் என்பதும், பஸ் டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம். ஜி. ஆரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள் என்பதும், "இந்திரா காந்தியைச் சுட்டு விட்டார்கள்"  என்று சரோஜா டீச்சர், ருக்குமணியிடம் கூறுவதும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் "ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்" என்று ஒலிப்பதின் மூலமாகக் கதையின் காலகட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். 

                          தான் உண்டு, தன் வேலையுண்டு என தன் வேலையில் இருக்கும் தங்கராசு, மற்றும் அவரின் சக ஊழியர்களின் மூலமாக பஸ் டெப்போவில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே எழுதியுள்ளார். அவர்கள் பேசும் தற்கால அரசியல், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அங்கு நடைபெறும் அரசியல் என்பது ஒருபக்கமெனில் மறுபக்கம் ஆசிரியர்களின் உலகம் சித்தரிக்கப்படுகிறது. ஒரு சாதாரண ஆசிரியரும், பேருந்து நடத்துநரும் அவர்களின் சுயநல செயல்பாடுகளால் எவ்வாறு அரசியல் தலைவர்களாக உருமாறுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

                        தொண்டை வலியால் அவதிப்படும் ருக்குமணியிடம் அவளது நாய் டைகர் செலுத்தும் ஆழமான அன்பை மிக அற்புதமாக தன்னுடைய எழுத்தால் வாசிக்கும் அனைவருக்கும் அதுபோல் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கடைசி அத்தியாயத்தில்தான்  நாவலின் தலைப்புக்குள் நுழைகிறது கதையின் போக்கு. காவல் துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் தொடக்கும் ஒரு சாதாரண சண்டை எப்படி பெரிய கலவரமாக, போராட்டமாக மாறியது. அதில் சம்பந்தமேயில்லாத தங்கராசு மாட்டிக்கொள்ள அது அவன் குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதுதான் நாவலின் முடிவு. 

                         மாவட்ட ஆட்சியர், அந்த கலவங்களைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார்.  சமூக போராட்டங்கள் எப்படி ஒரு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைக்கிறது என்பதுதான் நாவலின் அடிநாதம். நாவலின் சில இடங்களில்  தலபுராணங்கள் (கோவில்) வருகிறது அவை நாவலுக்கு எந்த வகையில் வலுசேர்க்கவில்லை.

இறுதியாக:                    

                   நாவலின் தலைப்பைப் பார்த்தவுடன் எதாவது கிரைம் விசாரணை நாவலாக இருக்குமோ என்று நினைத்துத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாவல் முற்றிலும் என் எண்ணத்திற்கு மாறாக ஒரு (பல) சமூகப் பிரச்சினையை மிக ஆழமாக அலசியது. காவல் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்குமான மோதல் போக்கு பற்றிய பல செய்திகளை நான் மாணவனாக இருந்த பொழுது நாளிதழ்களில் வாசித்துள்ளேன். அத்தகைய போக்கு இப்பொழுது குறைந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தந்தாலும் சமூக மோதல்களின் களங்கள் மாறியிருப்பது இன்னும் வருத்தமடையச் செய்கிறது. 

Thursday, 24 June 2021

தோல்

 

                                  தோல் - டி. செல்வராஜ்

     

      2012'ஆம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல் நாவலை வாசிக்கச் சிலமுறை முயற்சி செய்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். ஆசிரியர் டி. செல்வராஜ், நாவலில் வரும் கதைமாந்தர்களின் பெயர் மற்றும் சிறுகுறிப்பை முதலிலே சொல்லி விடுகிறார். சுமார் 117 பேர்.. அதைப் பார்த்தவுடன் நாவலை வாசிப்பது கொஞ்சம் கடினமான பயணமோ என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. ஆனால் தொடங்கிய பின் டி. செல்வராஜின் எளிமையான நடை வாசிப்பை எளிதாக்கியது. 

             இந்தியா சுதந்திரம் பெறாத காலத்தில் (1940 காலகட்டத்தில்) திண்டுக்கல் நகரிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளி ஓசேப்பு தன் முதலாளி அஸன் ராவுத்தரின் மைத்துனன் முஸ்தாபா மீரானை அடித்துவிட்டதாகத் தொடங்கும் நாவல் அந்த தொழிலாளிகளின் வாழ்வையும், அவர்களுக்கு நிகழும் வதைகள், அதனையொட்டி துவங்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள், முதலாளிகளின் அடக்குமுறைகள், அந்த நெருக்கடிகளால் உருவாகும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்த வரலாற்றை விவரிப்பதுதான் தோல் நாவல். 

               இதுவரையில் ஒரு பறையனின் கரமும் தோல்ஷாப்பு முதலாளியின் மேல் பட்டதில்லை என்று ஆரம்பிக்கும் வரியிலே டி. செல்வராஜ் குறிப்பால் உணர்த்தி விடுகிறார். தொழிலாளியின் கரம் என்று கூறாமல் பறையனின் கரம் என்பதின் மூலமாக அக்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு வர்க்கப்போராட்டமாக மட்டுமில்லாமல் அடிப்படையில் சாதிரீதியான பிரச்சினையாகவும் இருந்தது என்பதைப் படம் பிடித்துக்கட்டுகிறார்.  மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளே நிலவிய தீண்டாமையையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவரான சுந்தரேச அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். அவரது மகன் வக்கீல் சங்கரன் அவர்களின் சமூக எதிர்ப்புகளையும் மீறிப் படாத பாடுபட்டு தொழிற்சங்கத்தையும் உருவாக்கி அந்த தொழிற்சங்கங்களை நசுக்க அரசு மற்றும் முதலாளிகள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்துப் போராடி அவர்கள் நலனே தன் நலன் என்று வாழ்கிறான். 

                    தொழிற்சங்கங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அமைந்த அரசுகளும் தங்கள் அதிகாரத்தையும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியும்  முடக்கவே முயற்சி செய்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் சாதி அரசியில், உண்மையாக தேசவிடுதலைக்கு பாடுபட்ட சில தொண்டர்களின் நிலைமை, உணவுப் பஞ்சத்தின் போது அரசாங்கம் மற்றும் சில வியாபாரிகளின் செயல்பாடு என வரலாற்றையும் பதிவுசெய்கிறார் டி. செல்வராஜ். ஓசேப்பு நகரசபை தலைவர் ஆவதாக நாவலை முடித்திருப்பது அடிப்படை உரிமைகளை இறுதியில் அவர்கள் போராட்டங்களின் வாயிலாகப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.  மேலும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழும் சங்கரனின் தாயார் அம்புஜத்தம்மாள், தேவதாசிக் குலத்துப் பெண்ணான வடிவாம்பாளை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதும் சிறப்பு.

                    எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் ஓசேப்பு, ஆசிரியர் இருதயசாமி, கழுவத்தேவன், வேலாயுதம், சந்தனத் தேவன், மினிசாமி, துண்டு பாய் என்கிற சவுக்கத்து அலி, தாயம்மாள், அருக்காணி, தேவசகாயம், வெள்ளைத்துரை, வீராயி போன்ற பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. அந்த மக்களின் ஆதரவற்ற நிலைமை நேரடியாக மிகைப்படுத்துதல் எதுவுமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை உறிஞ்சும் வகையில் எல்லா முதலாளிகளும் இனம், மதம், அரசியல் வேறுபாடு பார்க்காமல் இணைந்து செயல்படுவதைத் தோலுரித்துக் காட்டுகிறார். 

                தோல் நாவலை டி. செல்வராஜ் ஒரு சோஷியலிஸ யதார்த்தவாத நாவலாக எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வு பெற்று சங்கங்கள் அமைத்து அதன் வழியே  ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதுதான் நாவலின் மையக்கரு. தொழில்நுட்பங்கள் பெரிய வளர்ச்சி அடையாத காலத்தில் தோல் தொழிற்சாலைகளின் சுண்ணாம்புக் குழியில் முறி எழுதிக்கொடுத்து அடிமையாக வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களை, எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்தரிக்கிறது. ஆனால் பிற்பகுதியில் உரிமைப் போராட்டங்கள், தலைமறைவு வாழ்க்கை, அரசாங்கங்களுக்கு எதிரான குரல்களையே பேசுவதால் பொதுவுடைமை இலக்கிய பிரச்சார நெடியாகச் சில இடங்களில் தோன்றினாலும் ஆசிரியர் தன்னுடைய எழுத்தாற்றலால் அதனைப் போக்க முயன்றுள்ளார்.       

  இறுதியாக:        

        உலகத்தில் பொதுவாக எல்லா இயக்கங்களும் அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து மக்களை அவர்களின் நிலைகளிலிருந்து மேம்படுத்தி மீட்கவே தோன்றின. காலமாற்றங்களில் அந்த இயக்கங்களின் மேல் மிகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது அதனால் மிகவும் பயன்பெற்ற இன்றைய தலைமுறையினரால் கூட. அதற்கான ஒரு காரணம் அந்த இயக்கங்கள் அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்காததும். இதுபோன்ற நாவல்கள் அந்த குறையைக் கொஞ்சம் போக்குகிறது. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்ப அந்த இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொள்ளாததும் இன்னொரு பெரிய காரணம்.