Sunday, 11 December 2022

சொ. க - 3. பயணங்கள் தொடங்கியது...

 

                              பயணங்கள் தொடங்கியது...


             

        என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொள்ளுகிறேன். மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தேன்.  உண்மையிலே முடித்து விட்டேனா? கனவா? அல்லது நிஜமா? இந்த பயணம் எப்படி, எவ்வாறு தொடங்கியது..  

    வாட்ஸாப் குழுவில்  இந்த மிதிவண்டி பயணத்தைப் பற்றிய தகவல் வந்த பொழுது அதனை நான்   பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. நாம் எப்படியும் போகப்  போவதில்லை. போகாத பயணத்தைப்  பற்றி ஏன் யோசிக்க வேண்டும்?. ஒருநாள் சிவராமன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 400 கிலோமீட்டர்ஸ் ரைட் போக வேண்டும், கூட சேர்ந்து போகச்  ஒருசிலரிடம் கேட்டிருப்பதாகக்  கூறினார்கள். நானும் சிலரின் பெயர்களைச்  சிபாரிசு செய்தேன். சில நாட்கள் கழித்து சிவராமன் சார், யாரும் செட் ஆகவில்லை, நாம் சேர்ந்து போகலாமா என்று கேட்டார்கள். நானூறு கிலோமீட்டரா?. நானா?? அதிர்ச்சி அடையாத குறைதான்.. இதுவரை 135 கிலோமீட்டர் தான் ஒருநாளின்  அதிகபட்ச தூரமே. என்னால் எப்படி? 

                       சில மாற்றங்கள் நம்மை அறியாமலே எப்படியோ, எங்கேயோ நடந்துவிடுகிறது. முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தலைதூக்கிய நப்பாசை, ஓகே சொல்ல வைத்துவிட்டது. பயணத்திட்டத்தை வகுத்து சிவராமன் சாருக்கும், ஜெயசுதனுக்கும் அனுப்பி வைத்தேன். இரண்டாம் நாள் வழியில் பல ஏற்ற இறக்கச் சாலைகள் இருப்பதால் முதல்நாளில் முடிந்த வரை நிறையத்  தூரம் ஓட்டும் வகையிலும், சிவராம் சாரின் ஆசைக்காக  மதிய உணவு பாவூர்சத்திரம் சந்தை கடையில் சாப்பிடும் படியும் அமைத்தேன். இதனிடையே கங்காதரன் சாரும் பயணத்தில் கலந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டார்கள், ஆனால் சில காரணங்களால் கடைசியில் நேரத்தில் வரமுடியாமல் போனாலும் பயணத்திற்கான பலச் சிறந்த  ஆலோசனைகளை அளித்தார்கள்.

                       திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னாலே பயணம் அருமையாகத் தொடங்கிய பயணத்தை வருணபகவான்  சில இடங்களில் இளைப்பாற வைத்தார். கங்காதரன் சாரும் போன் செய்து பயணம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்களைத்  தெரிவித்தார்கள். கல்லிடைக்குறிச்சி வழியாக முதலில் மணிமுத்தாறு அணையைச் சென்றடைந்தோம். அங்கிருந்து அணையை ஒட்டியே பயணம் செய்து பாபநாசம் சென்றோம். பாபநாசத்திலிருந்து தொடங்கிய பயணத்தில் கடையத்தைத்  தாண்டி, பாவூர்சத்திரம் வரும் வரை அது ரோடு அல்ல.. ரோடு மாதிரி அதனால் ரோடு வண்டி வைத்திருந்த நம்ம ஜெயசுதன் படாதபாடு பட்டுவிட்டார். பயணத்தின் ஒரு (முக்கிய) நோக்கமான சந்தை கடை மட்டன் சாப்பாட்டை ஒரு பிடிப் பிடித்தோம். உண்ட மயக்கம் மற்றும் வருண பகவானின் ஜாலத்தால்  ஒரு மணித்துளிகள் ஓய்வு எடுத்தோம்.  ஓய்வு எங்கப்பா  எடுத்தோம் ஜூஸ் குடிக்க நடக்க வைத்து விட்டீர்களே என்பார் சுதன். 

                                      மட்டன் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் நம்ம சிவராமன் சாரின் வண்டி எங்கேயும் நிற்கவே மாட்டேங்குது. மட்டன் சாப்பாட்டுக்கு அவ்வளவு பவரா?..  எப்படி இப்படிப் போகிறது???  அப்புறம்தான் தெரிந்தது வண்டியில் பிரேக் வேலை செய்யவில்லை. இந்த சமதள ரோட்டிலே இப்படியெனில் நாளைக்குத் தென்மலையில், சாரை பிடிக்கவே முடியாதே. இது சரிவராது எனச் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகளை வழிநெடுக தேடினோம். பலரிடமும் விசாரித்தோம், சைக்கிளில் வந்த ரெண்டு (ரொம்ப) சின்ன பசங்களையும் விடவில்லை. அவர்கள், பக்கத்தில் ஒரு கடையிருப்பதாக சிவராமன் சாரை கூட்டிச்சென்றார்கள். அங்கே போய் கடைக்காரரைப் பார்த்து இந்த சைக்கிளுக்குக் காற்று அடைக்க வேண்டுமென்று சாரின்  சைக்கிளைக் காட்ட... முடியலயப்பா😂..  பாவூர்சத்திரத்தில் தொடங்கிய பயணம் சுரண்டை வழியாக சங்கரன்கோவிலைச் சென்றடைந்தது.  சங்கரன்கோவில் கோபுர தரிசனம் கோடி புண்ணியமோ இல்லையோ எங்களுக்குச் சைக்கிள் கடை கிடைத்து விட்டது. எப்பா கடைசியில் ஒருவழியாக சிவராமன் சாரின் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். 

                                        சூரியபகவானை  பணியைச்  செய்யவிடாமல் தடுத்த சூல் கொண்ட மேகங்களால்  எங்களது பயணம் சாரலில் நனைந்த படியே இனிமையாக நகர்ந்தது. சங்கரன்கோவிலிருந்து, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி வழியாகக் குற்றாலத்தைச் சென்றடைந்தோம். எந்தொரு  பயணமாக இருப்பினும் நம்மை வரவேற்க இன்முகத்துடன் ஒருவர் இருந்தால் அந்த பயணம் தந்த அலுப்பும், சலிப்பும் அப்படியே கரைந்து  போகும். நண்பன் பாபுவேலன் என்றும்  போல் அன்றும் தந்த உபசரிப்பால் உள்ளம் குளிர்ந்து போனோம். வெள்ளியை உருக்கி விட்டதுபோல் பொங்கி  விழுந்த அருவியைத் தூரத்தில் நின்றுதான் ரசிக்க முடிந்தது. வெள்ளம் அதிகமானதால் குளிக்கத் தடை. தடை அதை உடை என்றெல்லாம் முயலாமல் நமக்கு எப்பவும் போல பாத்ரூம் குளியல்தான் சரியெனக் குளித்து முடித்தோம். அதற்குள் எங்கள் மிதிவண்டியையெல்லாம் அழகாக, பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர் நண்பனின் குடும்பத்தினர். கொசுவின் ரீங்காரம்  தாலாட்டாக எனக்குக் கேட்க நான் நித்திரையில் ஆழ்ந்து போனேன். காலையில் தான் தெரிந்தது சுதனும், சிவராமன் சாரும் கொசு தாலாட்டு பாடினால் தூங்க மாட்டார்களாம். அப்போ யார் பாடினால் தூங்குவார்கள்??..😛 இன்னும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரை பகுதியில் பதிவிடுங்கள். 

                                           ஆதவன்  தன் பணியை  ஆரம்பிப்பதற்குள் மீண்டும் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். அதிகாலையிலே தேநீரெல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் பாபுவேலன் குடும்பத்தினர். அந்த அன்பு தந்த உற்சாகம் தென்மலையினை  எளிதாகக் கடக்க உதவியது.  பசுமை போர்த்திய மலைகள், மலை மேட்டில் காலூன்றப் பார்த்த மேகங்களை ரசித்த படியே, இதமான தென்றல் ஆரத்தழுவ எங்கள் பயணம் தென்மலை அணையைச் சென்றடைந்தது. மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து தொடர்ந்த பயணத்தில் திடீரென உக்கிரமாக நுழைந்தான் சூரியன். அவன் எங்களிடமிருந்து உறிஞ்சிய நீரையெல்லாம் உடம்பில் மீட்டெடுக்க லெமன் வாட்டர், இளநீர், ஜூஸ் எனப்  போட்டிப் போட்டுக்கொண்டு குடித்து அவனுக்குச் சவால் விட்டுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம். சில இடங்களில் கொஞ்சம் வழி தடுமாறக் கூகிளை உதவிக்கு  அழைத்துக்கொண்டோம்.  

                               

             நெய்யாற்றின்கரை வந்த உடனே ஒரு இனம்புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது, இனி நேர்வழிதான் வீட்டுக்குப் போகப்போகிறோம் என்ற உணர்வு தோன்றியவுடனே காலுக்கு ஒரு உத்வேகம்.. களியக்காவிளை, மார்த்தாண்டம் என நாகர்கோவிலை நோக்கி வண்டி வேகமாகப் பயணித்தது. நாங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு ரொம்ப முன்பாகவே அவரவர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம்.  வீட்டிற்குப்  போய்ச் சேர்ந்தோம் என்பதை விட எங்களது 400 கிலோமீட்டர் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம் என்பதே  பொருத்தமாக  இருக்கும். இந்தப் பயணம் எனக்கு அதிக  நம்பிக்கையை தந்தது. இதை விடப்  பெரிய பயணங்களையும் பயணிக்கலாம்  என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்தது. என்னுடன் பயணித்த சுதன் மற்றும் சிவராமன் சாருக்கு மிக்க நன்றிகள்👃.  அவர்களால்தான் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

இறுதியாக:

     பலர் இதைவிடப் பெரிய மிதிவண்டி பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். எனினும் முதல் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் தான் நம்மை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அந்த முதல் பயணத்தைப் பற்றியே அதிகம் சிகாலிப்பார்கள். பாவூர்சத்திரம் முதல் தென்காசி வரும் வரையில் வழிநெடுகிலும் பலரின் அன்பான விசாரிப்புக்கும், ஆச்சியத்துக்கும் உள்ளானோம். என்னுடன் பயணித்த, நாங்கள் வழியெங்கும் சந்தித்த மனிதர்களால் மீண்டும் ஒரு பயணம் எப்பொழுது என மனம் ஏங்குகிறது😍.  பயணங்கள் தொடங்கியது......


Monday, 20 December 2021

சாயாவனம்

 

                           சாயாவனம் - சா. கந்தசாமி 


         சா. கந்தசாமியின் முதல்  நாவலான சாயாவனம் நாவலைத்தான்  வாசிக்க ஆர்வமாயிருந்தேன். ஆனால் அவரின்  சாகித்ய அகாடமி விருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைக்கவே அதனை வாசித்து என்  எண்ணங்களை எழுதினேன். சாயவனம் பலராலும்  பாராட்டப்பட்ட நாவல்.  

                        1968'ல் எழுதப்பட்ட இந்த நாவலானது இயற்கை மற்றும் சூழியல் சார்ந்து தமிழில் வந்த முதல் நாவலாகப் பார்க்கப்படுகிறது. 1906 காலகட்டத்தில் சாயாவனம் என்கிற ஊருக்குக் கரும்பாலையை நிறுவும் எண்ணத்தோடு வருகிறான் சிறுவயதிலே தாயோடு இலங்கைக்குச் சென்ற சிதம்பரம். அதற்காக மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தை  விலைகொடுத்து வாங்கி, அங்குள்ள மரங்களை வெட்டியும், தீவைத்து அழித்தும் ஆலையைக் கட்டுகிறான். இயற்கையறிவும், நிதான குணமும் கொண்ட சிவனாண்டி தேவருக்கு, சாம்பமூர்த்தி ஐயர் காட்டை சிதம்பரத்துக்கு விற்றது பிடிக்கவில்லை  ஆனால் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்திற்குத் திறமையாக அவரையும் பயன்படுத்திக் கொள்கிறான் சிதம்பரம்.  தனிமனிதன் ஒருவனின் பேராசையால் ஒரு வனம் எவ்வாறெல்லாம் உயிருடன் வதைக்கப்பட்டது என்பதைப்  பேசுகிறது சாயவனம் நாவல். 

                      செல்லும் பாதையில் கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சார நெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. அந்த வனத்திற்குள் இருக்கும் சிறு புல்லில் தொடங்கி வானுயர்ந்த மரங்கள் வரை அனைத்து தாவரங்களின் பெயர்களையும் அதன் குணாதிசயங்களையும்  நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருப்பது  நாவலுக்கு உயிர்ப்பு தன்மையைக் கொடுக்கிறது. சாயவனம் நாவலின் சிறப்பம்சமே சா. கந்தசாமி, ஒரு ஆசிரியரின் கருத்துகளாகவோ அல்லது ஏதேனும் ஒரு கதைமாந்தரின் மூலமாகவோ இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை.  சிதம்பரம் காட்டை அழிக்கச் செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து எழுதி வாசிக்கும் வாசகன் மனதில் காடுகள் அழிக்கப் படுவதின் தீவிரத்தை உணர்த்துகிறார். 

                         இறுதியில் புளி கேட்கும்  ஒரு ஆச்சியிடம் " பார்த்து நல்ல புளியாக அனுப்புகிறேன் "  எனச் சிதம்பரம் சொல்ல,  அதற்கு அந்த ஆச்சி 

"அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமெ எங்கிருந்து அனுப்பப்  போற?"

அப்பொழுது, அவனுக்குள் ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்குள்ளும் படர்ந்து விடுவதைத் தவிக்க முடியாது. நாவலின் இறுதியில் வரும் குஞ்சமாளின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. அதைத் தவிர நாவல் முழுவதும் தோட்டம் அழிக்கப்படும் நிகழ்வுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த ஒற்றைக் கோட்டிலே நாவல் செல்வது சற்று அயற்சியைச் சிலருக்குக் கொடுக்கலாம். 

              மனிதன் காடுகளை அழித்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்கியதால், பலவித இயற்கை அழிவுகளை நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் எனப் பலராலும் இப்பொழுது பேசப்படுகிறது. மிகப்பெரிய விழிப்புணர்வு இல்லாத அந்தக்  காலத்தில் இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சாயவனம், இன்றையச் சூழ்நிலையில் மிகுந்த முக்கியத்துவத்தைப்  பெறுவதோடு,  பொருத்தமான வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது. 

இறுதியாக :

     தன் சுயநலத்திற்காக மனிதன் எவ்வாறெல்லாம் இயற்கையைச் சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்களை நம் கண்முன்பே பல நடக்கின்றது. என்ன  ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணங்கள் மற்றும் எது சீரழிப்பு என்கிற வரையறையும் மாறுபடுகிறது. எப்பொழுது மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினானோ அதில் தொடங்கியது இந்த பயணம். 

Saturday, 25 September 2021

குருதிப்புனல்

 

                          குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

         

       சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை வாங்கினேன். 1968'ல் கீழவெண்மணி என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தை உள்வாங்கி அவர் எழுதிய நாவல். 1977'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றாலும் சில விமர்சனங்களையும் ஒருங்கே பெற்ற நாவல் குருதிப்புனல்.

                 டெல்லியில் ஒன்றாக இருந்தது விட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், தஞ்சை பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்துவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி சிவா வருவதுடன் தொடங்குகிறது நாவல். கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும், காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கண்ணையா நாயுடுவின் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கூலியை உயர்த்தி தர ராமையா போராடுகிறார். ராமையாவின் வீட்டில் தங்கியிருந்து கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டியின் மகன் வடிவேலு நடத்தும் டீக்கடையில் சாப்பிட்டு வருகிறான் கோபால். கோபாலைச் சந்திக்கும் சிவா அவனுடன் சிலநாட்கள் தங்கிச் செல்ல நினைக்கிறான். வடிவேலுவின் மீதுள்ள கோபத்தினால் அவனுடைய டீக்கடையை காலி செய்யும் முயற்சிகளைக் கண்ணையா நாயுடு முன்னெடுக்க அவனுக்காக அவரிடம் பேசுகிறான் கோபால். 

                கண்ணையா நாயுடு அவனின் சமாதான முயற்சிகளை ஏற்றக்கொள்ளாததால் கோபத்தில் அவரின் ஆண்மை பற்றிப் பேசிவிடுகிறான் கோபால். அதனால் மிகுந்த கோபம் கொள்ளுபவர், கோபாலை ஆள் வைத்து அடிக்கிறார். பாப்பாத்தி என்னும் ஹரிஜன பெண்ணை கடத்தி பழியை கோபால் மீது சுமத்துகிறார். பாப்பாத்தியைப் பற்றித் துப்பறிய பங்கஜத்தம்மாள் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஏற்படும் தகராற்றில் கண்ணையா நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படப் பழியை ராமையா மீது போட்டு கைது செய்கிறது போலீஸ். நாயுடு தன் வயலில் வேலை செய்ய வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வர அதில் கோபம் கொண்டு பழனி என்பவன் அவரை அடித்து விடுகிறான். உயர்சாதியில் பிறந்த தன்னை ஒரு பறையன் அடித்து விட்டானே என்று வெறிகொள்ளும் நாயுடு, போலிஸ் துணையோடு பெண்களும், குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். அந்த சம்பவம் கோபாலை வன்முறை பாதையை நோக்கிச் செல்லவைக்கிறது. 

                  பொத்தாம் பொதுவாக வெண்மணி படுகொலைகள் கூலியை உயர்த்திக் கேட்டதால் நடந்த நிகழ்வாகச் சொல்லப்பட்டாலும் என்னால் அவ்வாறு பார்க்க முடியவில்லை. அதற்கான மூலகாரணங்கள், அங்கே வாழ்ந்த மக்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தியது, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது, அவர்களுக்கு எதிராக ஒன்றாக அணிதிரண்டது மற்றும் அரசியில் விழிப்புணர்வுகளும்தான் பண்ணைக்குக் கோபத்தையும் கூடவே பயத்தையும் தந்திருக்க வேண்டும் அதன் எதிர்விளைவே இந்தப் படுகொலைகள். 

                            நாவலின் கரு பலராலும் பாராட்டப்பட்டாலும், ஆசிரியர் சேர்த்துள்ள உளவியல் காரணத்திற்காக விமர்சிக்கவும் பட்டது. ஆண்மைக் குறைவு என்ற காரணத்தை முன்னிலைப் படுத்தியிருப்பதால், சில சமயம் வாசிப்பவர்களுக்கு ஆண்டவன் தந்த குறையைத் திருப்பி திருப்பி சொல்லிச் சீண்டியதால், கடுப்பில் தீ வைத்து விட்டார் என்றும் தோன்றலாம் அது ஆசிரியரின் எண்ணம் இல்லையெனினும். டெல்லியிலிருந்து அந்த கிராமத்திற்கு வரும் இரு  படித்த இளைஞர்களின் கண்களின் வழியாகப் பெரும்பகுதி பிரச்சினைகள் பார்க்கப்படுவது இந்திரா பார்த்தசாரதி வசதியாக இருக்கிறது. காரணம் அவரும் அதே பின்னணியில் உள்ளவரென்பதால். நாம் செல்ல வேண்டிய பாதைகள் இன்னும் அதிகம் இருப்பினும், நாம் கடந்து வந்த பாதைகளை அறிய வாசிக்க வேண்டிய நாவல்தான்.

இறுதியாக :

        கீழவெண்மணியில் 44 தலித்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குருதிப்புனல் தவிரச் சோலை சுந்தரப்பெருமாளின் "செந்நெல்", பாட்டாளி எழுதிய "கீழைத்தீ" ஆகிய நாவல்களும் வந்துள்ளது. மேலும் குருதிப்புனல் நாவலைத் தழுவி ராஜேஷ், பூர்ணிமா நடிப்பில் 1983'ஆம் ஆண்டு "கண் சிவந்தால் மண்  சிவக்கும்" என்ற திரைப்படமாகவும் வந்துள்ளது.