Wednesday 25 November 2020

சஞ்சாரம்

 

                   சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்


எஸ். ராமகிருஷ்ணனின் பல கட்டுரைகளை வாசித்து உள்ளேன். 2018'ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலைப் பலமுறை வாசிக்க எண்ணியும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். 

        ரத்தினத்தின்  குழுவினர் நாதஸ்வரம் வாசிக்கச் சென்ற கோவில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கிடையே நடக்கும் தகராற்றில் எதிர்பாராதவிதமாக  இவர்கள் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள். குழுவில் இணைந்து வாசிக்கும் மற்றொரு நாதஸ்வர  கலைஞரான பக்கிரி அதில் ஒருவனை அடித்து விட, ரத்தினம் மற்றும் பக்கிரியை அடித்துக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். இரவில் கோவில் பூசாரி அவர்களின் கட்டுகளை அவிழ்த்துப் போகச்சொல்ல பக்கிரியோ திரும்பிச் செல்லும்போது விழாப்பந்தலுக்கு தீ வைத்து விடுகிறான். அதனால் போலிஸ் தேட சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் ஊர் ஊராகப் பயணம் செய்ய அவர்களின் நினைவுடாக சம்பவங்கள் கிளைக்கதைகளாக வருகிறது. இறுதியில் அவர்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு மனதில் நாவல் முடிந்தும் தொடர்கிறது.     

           "முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது"  என்று தொடங்கும்  முதல் பத்தியே மொத்த நாவலையும் சொல்லி விடுகிறது. சாதியக் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் வலி, அவலம், வேதனை, கோபம், அவமானம் போன்றவற்றைச் சகித்துக்கொண்டு, கலை மற்றும் கலைஞர்களுக்கான அங்கீகாரமும் சரிவர இல்லாமல், பொருளாதார சவால்களைச் சமாளித்து வாழ்க்கை முழுவதும் சொல்லாத் துயரத்தை அடைந்த நாதஸ்வர கலைஞர்களின் இன்னல்களைச் சஞ்சாரம் நாவல் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லுகிறது. 

       பல சுவாரஸ்யமான தகவல்கள், வாசிப்பவருக்கு மன மாற்றத்தை உண்டாக்கும் கருத்துக்கள், பல்வேறு காலகட்ட மக்களின் வாழ்வியல் பதிவுகள், அபூர்வமான, ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், கேட்டறியா வரலாற்றுச் செய்திகள் என ஒவ்வொரு கிளைக் கதைகள் ஒரு சிறுகதையைப் போலச் சுவைப்பட நகர்கிறது.  லட்சய்யாவின் நாதஸ்வர இசைக்கு மயங்கிய மாலிக்காபூர், "மண்ணு வேணுமா" "பொன்னு வேணுமா" எனக் கேட்ட ஊரோடிப்பறவைகள், பொம்மக்காபுரத்தின் பாம்புக்கடி வைத்தியம், நூறு வயதைக்கடந்த கொண்டம்மாள் கிழவி திருடனுக்குக் கொடுத்த வித்தியாசமான தண்டனை என மக்களின் செவிவழிக் கதைகள் மூலமாக நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். மேலும் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். நாதஸ்வரம் கற்க வரும் வெளிநாட்டுக்காரர், நாதஸ்வர இசையால் ஈர்க்கப்படும் போலியோவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன்  என நிகழ்காலச் சம்பவ கதைகளும் நிறைந்துள்ளது. 

        வட இந்தியாவில் நாதஸ்வரம் ஏன் வாசிக்கப்படுவதில்லை, இந்நாளில் நாதஸ்வர வித்துவான்கள், கரகாட்டக்காரர்கள் ஏன் நம் பாரம்பரிய கலைஞர் என்னன்ன மாதிரியான இன்னல்களைச் சந்திக்கிறார்கள், நாதஸ்வரம் எவ்வளவு புகழ் வாய்ந்தது, "இசை தான் கடவுளோடு பேசும் மொழி. அந்த இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்.." என்ற வரிகளால் நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு மட்டுமில்லாது அதனை ரசனையோடு கேட்பவருக்கும் மரியாதை செலுத்துகிறது இந்நாவல். கரிசல் காட்டு நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தும் விதமான மைய நோக்கத்தோடு எழுதப்பட்ட நாவலில் சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல் வருவது நாவலை வாசிக்கும் பொழுது நூறு சதவீதம் உணர்வுப்பூர்வமாகக் கதையோடு சேர்ந்து பயணிக்க முடியவில்லை.

     ஆனால், நாவலை வாசித்து முடித்தபின் வாசித்த அனைவருக்கும் நமது பாரம்பரிய நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை உடனே கேட்க வேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவல் கட்டாயம் தோன்றும் அதில் உள்ளது எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தின் வெற்றி. 

இறுதியாக :

          இசையைப்பற்றிப் பேசும் நாவலில் சீவாளி செய்யப்படுவதன் சுருக்கமான குறிப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. தவிலைப்பற்றி சுத்தமாக ஒருதகவலும் சொல்லப்படவில்லை. நாவல் வாசிக்கும்போது இது கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்குழுவைக் கொண்டு இசையைப்பற்றிப் பேசுகிறதா?? அல்லது ஜாதி வேறுபாடு இன்னல்களை மையமாக வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. 

3 comments:

  1. சஞ்சாரம் நாவலை வாசித்ததில்லை. உங்களின் விமர்சனம் வாசிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. அருமை.

    ReplyDelete
  2. கிருஷ்ணா26 November 2020 at 14:19

    இன்றைய கால கட்டத்தில் நாட்டுபுற கலைகள் அனைத்தும் அழிந்து விடும் சூழ்நிலை இருக்கிறது.. ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் அபாய சங்கு ஊதி நம்மை தட்டி எழுப்புகிறது. நமது பாரம்பரிய கலைஞர்களின் வலியை மிகவும் யதார்த்தமாக பதிவுச்செய்கிறது.

    ReplyDelete
  3. நாதஸ்வரம் to climate change, humans race is too busy to care, nice one bro

    ReplyDelete