Wednesday, 27 November 2019

வேதபுரத்து வியாபாரிகள்



                  வேதபுரத்து வியாபாரிகள் 
                                     - இந்திரா பார்த்தசாரதி



இந்திரா பார்த்தசாரதி எழுதிய எதாவது ஒரு நாவலைப் படிக்கலாம் என நினைத்து இந்த நாவலை வாங்க ஆர்டர் செய்தேன் ஆனால் ஸ்டாக் இல்லாததால் கிடைக்கவில்லை. கடைசியில் எங்களது வீட்டிலேயே (பெற்றோர்கள்) நாவல் இருந்தது. கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல்.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் வசிக்கும் வேதபுரத்தை மூலமாகக் கொண்ட அபூர்வா என்கிற பெண்ணொருத்தி தன் தாய் நாடான வேதபுரத்துக்கு வருகிறாள். அங்கு உள்ள மக்களுடன் பழகி அந்த நாட்டை பற்றி புத்தகம் எழுதும் நோக்கத்துடன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் அவளுடைய நோக்கத்தை எப்படி திசை திருப்பி அவளை அரசியலில் தள்ளி, தலைவி ஆக்கியது என்பதுதான் கதை.

ஏதோ சுவாரசியமான கற்பனை கதை என நினைத்து விடாதீர்கள். ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல. கதை எழுதிய காலகட்டமான 1994-95  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடந்த ஆட்சியின் அலங்கோலங்களைத்தான் கிண்டல் கலந்த நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஆசிரியர் அமெரிக்கா, தமிழ்நாடு, இந்தியா எனக் குறிப்பிடவில்லை எனினும்  வேதபுரம் - தமிழ்நாடு, இந்திரப்பிரஸ்தம் - இந்தியா என எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என ஆசிரியர் கூறினாலும், நமக்கு அவர் கிண்டல் செய்யும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. பல உதாரணங்களை நான் எழுத நினைத்தேன் ஆனால் அந்த நையாண்டி கலந்த வரிகளை நீங்களே வாசித்தால்தான் மிகவும் ரசிக்க முடியும்.

இறுதியாக :

 இந்த மாதிரியான நாவல்களுக்கே உரியப் பிரச்சினைதான் இதிலும் உள்ளது. நாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான். ஏனெனில் நிஜக் கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அல்லது அந்த பிரச்சினைகளுக்கு ஆசிரியரால் தீர்வுகளைத் தந்தோ முடிக்கமுடியாது. என்ன நாவலில் நையாண்டியாகச் சொல்லப்பட்ட  பல செயல்கள் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

      

Friday, 15 November 2019

அரும்பு அம்புகள்



                             அரும்பு அம்புகள் - கல்கி



அரும்பு அம்புகள் நாவல் கல்கி மறைந்த பின் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு கல்கி வார இதழில் தொடராக வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பொழுது என்னை மிகவும் கவர்ந்த நாவல். மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கி இரு சிறுகதைகளை இணைத்து ஒரு திரைப்படத்துக்காக எழுதிய கதையாம். அதனால் கதையின் போக்கும் அப்படித்தான் உள்ளது. இரண்டாம் உலகப்போரினால் சென்னையை விட்டுச் செல்லும் கமலாவின் குடும்பத்தினர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இடையில் ஒரு ஊரில் தஞ்சம் புகுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் கல்யாணத்தின் மீது கமலாவுக்குக் காதல். ஆனால் கல்யாணத்திற்கு, அவனுக்கு மட்டும் அல்ல அந்த ஊரில் உள்ள நீதிபதி கோவர்த்தனனுக்கும் வக்கீல் பவானி மேல் ஒரு கண்ணு.

பவானியோ சிறையில் இருக்கும் தன் கல்லூரி காதலனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறாள். இடையில் கமலாவை அவளது பெற்றோர், வயதான வீட்டு ஓனருக்கு மணமுடித்து வைக்க முயல அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் கல்யாணம். சிறையிலிருந்து பவானியின் காதலன் தப்பித்து அவளைக் காண வர, அதனால் ஏற்படும் கலவரங்கள் எப்படி அனைவரையும் பாதித்தது, யார் யாரைத் திருமணம் செய்தார்கள் என்பதுதான் முடிவு..

நாவலை இப்பொழுது வாசித்தபின், அது முன்பு வாசித்தபோது தந்த உணர்வை அப்படியே அளிக்கவில்லை. சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் .... பதிவில் அப்பொழுது கூறிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  காரணம் எளிமையானது.. நமது மனதின் முதிர்ச்சி மற்றும் வாசிப்பின் நிலைகள் மேம்பட்டிருப்பதும்தான். ஆனாலும் சினிமாத்தனமான திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான கதைதான். அதைத் தவிர ரொம்ப பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதியாக :

    பவானி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பொன்னியின் செல்வன் நந்தினியின் பாதிப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. பவானியின் ஆளுமை மற்றும் அழகைக் கண்டு அவளிடம் பழகும் ஆண்கள் அனைவரும் கொஞ்சம் தன்னிலை மறந்து தடுமாறுவது.


Monday, 14 October 2019

பள்ளிகொண்டபுரம்



               பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன்



நீல. பத்மநாபன் எழுதிய தலைமுறை நாவலை வாசித்த பின் அவர் எழுதிய பள்ளிகொண்டபுரம்  நாவலை வாங்கினேன். ரொம்ப பெரிய ஆர்வம் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன்... ஆனால் வாசிக்க ஆரம்பித்த பின் நாவலைக் கீழே வைக்க மனமில்லை. நாவலின் நடை என்னைக் கட்டிப்போட்டு விட்டது. கதையின் களம் திருவனந்தபுரத்தின் தெருக்கள் மற்றும் கோவில்கள்தான்.  ஆவூரின் பின்னணியில் முழுக்க முழுக்க கொஞ்சம் மலையாளம் கலந்தது எழுதப்பட்டாலும் திருவனந்தபுரம் என்ற பெயர் நாவலின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

பள்ளிகொண்டபுரத்தில் வாழும் அனந்தன் நாயர் வாழ்க்கையின் கடைசி இரண்டு பக்கங்கள்தான் கதை. அந்த இரண்டு நாட்களிலும் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையேயான உரையாடல்களில் அவரது வாழ்க்கையின் மற்ற  பக்கங்கள் நினைவுடாக வருகிறது. தலைமுறை நாவலிலும் கதையை நாயகன் திரவியத்தின் எண்ணங்களின் வழியாகவே  நகர்த்தியிருப்பார் நாவலாசிரியர்.  பள்ளிகொண்டபுரம் அதனை விடச் சிறப்பாக அனந்த நாயரின் மனவோட்டத்தை, அவரின் பார்வையிலே சொல்லுகிறது. அனந்த நாயரின் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கை ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது. அவர் சந்திக்கும் மனிதர்களைத் தொடர்புப் படுத்தி நிகழ்கால மற்றும் இறந்தகால சம்பவங்கள் மாறி மாறி வருவது சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனக்கு அந்த நடைதான் சுவாரசியத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயினி பேரழகி.  சமஸ்தானத்தில் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன் தம்பி, அவளுடைய அழகில் மயங்கி மோகம் கொள்கிறான். அதனால் அனந்தன் நாயரின் வாழ்க்கையில் வீசும் சூறாவளியே கதையின் ஆணிவேர். பார்க்க மிகவும் சாதாரண கதை போல் தோன்றினாலும் வாழ்வியலை ஆசிரியர் மனிதர்களின் அகமன இயக்கத்தைக் கொண்டு அலசும் விதம் அதியற்புதம்.

தன் இயலாமையின் கோபங்களை எல்லாம் சராசரி மனிதர்கள் பொதுவாக தன் குடும்பத்தினர் மீது காட்டுவார்கள். அதுபோல்  கார்த்தியாயினின் அழகும், விக்கிரமன் தம்பியை எதிர்க்க முடியாத இயலாமையால் உண்டான பயமும், கோபமாக மாறி கார்த்தியாயினிடம் எப்பொழுதும் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையும், பிள்ளைகளையும் விட்டு அவள் விக்கிரமன் தம்பியுடன் சென்று விடப் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்கிறார். ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படிதான் அனந்தன் நாயரும் சிந்திக்கிறார். மனைவி கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், பிள்ளைகளை வளர்க்கக் கஷ்டப்படும் தன் வாழ்க்கையைத் தியாகமாகவும் கருதுகிறார். ஆனால் கடைசியில் அம்மாவின் தற்போதைய செல்வாக்கு மூலம் லாபம் அடைய நினைக்கும் மகனின் செய்கையால் மனம் உடைந்து போகிறார். 

நாவல் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்,  மாற்றங்களை மனித மனம் எப்படி ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது என்பது. பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகள், அரசியல், குடும்ப உறவுச் சிக்கல்கள் எனச் சகலமும் அனந்தன் நாயரின் கண்முன்னே மாறிக் கொண்டிருக்க அதையும் எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார் . அவரை போலவே அந்த நகரமும், மற்றவர்களும் தவியாய் தவிப்பதைக் கதையின் ஓட்டத்தினிலே அருமையாக எழுதியுள்ளார் நாவலாசிரியர். 

நாவலின் முடிவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் மேலும் அவர் மனதைக் கிளறப் போகும்  சூழ்நிலைகளிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்துக் கொண்டார் என ஒருவித ஆறுதலும் அளித்தது. ஒரு சாமானியன் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று என்னும் போது ஏற்படும் சுயவெறுப்பும், அதனால் தோன்றும் எல்லையற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக இதுவரை நான் வாசித்த எந்த நாவலிலும் வெளிப்பட்டதில்லை. 


இறுதியாக :

தமிழில் எழுதப்பட்ட முதல் நனவோடை உத்தி ( Steam of Conscious) நாவல் என ஒரு குறிப்பில் படித்தேன். எப்படி இந்த நாவல் விருதுகளின் பட்டியல்களிருந்து விடுபட்டுப் போனது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இது ஒருமுறை வாசித்து விட்டு மறந்துவிடும் வெறும் நாவல் அல்ல, அனந்தன் நாயர் ஒருவகையில் நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண மனிதனையே  பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டத்தை  எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொல்லும்  மிகச்சிறந்த படைப்பு.